PUBLISHED ON : ஏப் 13, 2016
என் மகளுக்கு, 17 வயதாகிறது. தற்போது, பிளஸ் 2 தேர்வு எழுதியிருக்கிறாள். கடந்த ஓராண்டாக அவளுக்கு, வெள்ளைப்படுதல் அதிகமாக உள்ளது. ஒரு நாளில் இரண்டு வேளை, 'பேட்' மாற்றும் அளவிற்கு இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக, இது அதிகரித்து இருப்பதாக தோன்றுகிறது. அருகில் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டபோது, 'இந்த வயதில் இது சகஜம் தான். தானாகவே சரியாகிவிடும்' என்றார். இருந்தாலும் எனக்கு சற்று பயமாக உள்ளது. தகுந்த ஆலோசனை தேவை.
எஸ்.ஆர்.ஜெயக்குமாரி, வேளச்சேரி.
இந்த வயதில், இது இயல்பானது தான் என்றாலும், இத்தனை நாட்களாக எந்த தீர்வையோ, ஆலோசனையையோ நீங்கள் பெறாமல் இருந்தது ஏன் என்று புரியவில்லை. ஒரு குறிப்பிட்ட வயது வரை, இது போன்ற பிரச்னைகளுக்கு மிகவும் தீவிரமான மருத்துவ சிகிச்சை தேவையிருக்காது என்றாலும், ஆலோசனையும் வழிகாட்டுதலும் அவசியம். வெள்ளைப் படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது, வீட்டில் உறை வைத்த தயிரை, பிறப்புறுப்பில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவச் சொல்லுங்கள். அடுத்த 15 நாட்களுக்கு இதைச் செய்ய வேண்டும். இதிலேயே சரியாகிவிடும். அப்படி இல்லை என்றால் உங்கள் மகளை, மகப்பேறு மருத்துவரிடம் அழைத்து சென்று, முறையான பரிசோதனை செய்து, தேவையான சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
டாக்டர் கோபிநாத், மகப்பேறு சிறப்பு மருத்துவர்.
ஆயுர்வேத மருந்துக் கடைகளில் திரிபலாதி சூரணம் கிடைக்கும். மூன்று மூலிகைகள் கலந்த சூரணம் இது. ஒரு குவளை நீரில் இந்த சூரணத்தை ஒரு ஸ்பூன் போட்டு காய்ச்சி, அந்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பை கழுவலாம். தொற்று உட்பட அனைத்து பிரச்னைகளும் இதில் சரியாகும். தொடர்ந்து இரண்டு வாரத்திற்கு தினமும் செய்ய வேண்டும்.
டாக்டர் ரேச்சல் ரேபேக்கா, ஆயுர்வேத சிறப்பு மருத்துவர்.
எனக்கு அடிக்கடி விக்கல் வருகிறது. வந்தால் இரண்டொரு நாட்கள் இருந்துவிட்டு சரியாகிவிடும். இது ஏதாவது உடல்நல பிரச்னையின் அறிகுறியா?
சீனிவாசன், கிண்டி.
வேகவேகமாக உணவைச் சாப்பிடுவது, மிகச் சூடாக சாப்பிடுவது, தேவையான அளவுக்கு தண்ணீர் குடிக்காதது, விக்கல் வருவதற்கான காரணங்கள். வலி நிவாரணி, ஸ்டிராய்டு மாத்திரைகளாலும் விக்கல் வரலாம். இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் தொடர்ந்தால், அது நோய்க்கான அறிகுறி. இரைப்பையில் அல்சர், சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரித்தல். உதரவிதானத்தில் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, மூளைக்காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்பு வாதம் போன்ற கோளாறுகள் இருந்தாலும் விக்கல் வரலாம்.
விக்கல் வரும்போது, மூச்சை நன்றாக உள்ளிழுத்து அடக்கிக் கொள்ள வேண்டும். 20 எண்ணும் வரை மூச்சை பிடித்துவைத்து, அதன்பின் வெளியில்விட வேண்டும். இப்படி ஐந்து முறை செய்ய வேண்டும். விக்கல் நின்றுவிடும். குளிர்ந்த நீர் குடிப்பது, ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்குவது விக்கலை நிறுத்த வழிகள். ஆனால், இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தால், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
கு.கணேசன்,பொதுநல மருத்துவர்.
