PUBLISHED ON : ஏப் 13, 2016

சிறிய பிரச்னைகளுக்கு கூட தற்கொலை செய்து கொள்கின்றனரே... ஏன்?
அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு, மன அழுத்தம், பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவம்
இல்லாததே முக்கிய காரணம்.
என்ன மாதிரியான பிரச்னைகளுக்கு தற்கொலை செய்து கொள்கின்றனர்?
பொதுவாக குடும்ப பிரச்னை, நோய் பாதிப்பு, வரதட்சணை, போதை மருந்து, தேர்வில் தோல்வி, காதல் பிரச்னை, வறுமை, வேலை இல்லாத பிரச்னை, நெருங்கிய உறவுகள் மரணம், சமூகத்தில் மதிப்பு குறைதல், கடன், பொருளாதார வீழ்ச்சி என, பல காரணங்கள், தற்கொலைக்கு முன் வைக்கப்படுகின்றன.
மன அழுத்தம் தற்கொலைக்கு தூண்டுகோலாகிறதா?
பல உடல் நல பாதிப்புக்கு, மன அழுத்தமே முக்கிய காரணம். அதோடு பணியிடத்தில் நெருக்கடி, குடும்ப பிரச்னை போன்ற காரணங்களாலும் மன அழுத்தம் வரலாம். இதற்கு மற்றவர்களுடன் கலந்து பேசினால், மன அழுத்தம் குறையும். இவ்வாறு செய்யாமல் போனால், மன அழுத்தம் அதிகமாகி, தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது.
காதல் தோல்வியால்தான் அதிகம் தற்கொலை நடக்கிறதா?
இல்லை. காதல் தோல்வியால், தற்கொலை என்பது, 4.2 சதவீதமே. குடும்ப பிரச்னையால், 25.6 சதவீதம்; உடல் நலக்குறைவால், 20.8 சதவீதம். இதில், தற்கொலை செய்து கொள்வோரில், 66.2 சதவீதம் ஆண்களே என்கிறது ஆராய்ச்சி முடிவுகள்.
ஆண்கள் அதிகம் தற்கொலை செய்து கொள்வது ஏன்?
குடும்பத்தில் மற்றவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பொறுப்பு, ஆண்களிடம் உள்ளது. இதனால் நெருக்கடி மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகி, தற்கொலைக்கு முயல்கின்றனர்.
தற்கொலைக்கு தனிக்குடித்தன முறையும் ஒரு காரணமா?
ஒருவரின் நடத்தையில், வித்தியாசம் இருந்தால், கூட்டுக் குடும்பத்திலிருக்கும் பெரியவர்கள் பிரச்னைகளை அறிந்து, தீர்வு காண்பர். தற்போது, கூட்டுக் குடும்ப முறை சிதைந்து, தனிக்குடும்பம் அதிகரித்து விட்டது. பிரச்னைகளை மனம் விட்டு பேச வழியில்லாததால், தற்கொலை எண்ணம் அதிகமாகிறது.
யாரெல்லாம் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்?
திருமணமாகாமல் தனிமையில் இருப்போர், ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயல்கின்றனர். குடி, போதைக்கு அடிமையானோர். மனச்சிதைவு நோய், தீராத நோய் போன்ற பாதிப்புள்ளோருக்கு, இந்த எண்ணம் வருகிறது.
தற்கொலை எண்ணம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
மற்றவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். ஒருவர் வழக்கமான நடவடிக்கைகளில் இருந்து மாறுபட்டு தனிமையில் இருக்கிறார் என்றால், அவரது மனநலத்தில் சிக்கல் உள்ளது என, உணர வேண்டும். குடும்பத்தினர், நண்பர்கள் அவர்களிடம் மனம் விட்டு பேசி, பிரச்னைகளை அறிந்து, தீர்வுக்கு முயற்சிப்பது நல்லது.
தற்கொலை எண்ணத்திற்கு ஆலோசனை தர, மையங்கள் உள்ளனவா?
சினேகா - 044 2464 0050; மூன் ஷைன் - 90435 32999; போன்ற பல்வேறு இலவச உதவி மையங்கள் உள்ளன. தமிழக அரசு, '104' தொலைபேசி வழி மருத்துவ சேவைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இங்கு தொடர்பு கொண்டால், மன அழுத்தம் தீர, தற்கொலை எண்ணம் மாற ஆலோசனைகள் கிடைக்கும்.
மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பொதுவான அறிவுரைகள் என்ன?
முறையான உணவு, மன இறுக்கத்தை போக்கும். உடற் பயிற்சி, மனப் பயிற்சி, யோகாசனம் போன்ற பயற்சி முறைகள் வாழ்க்கையை வளமாக்கும்.
- த.ரவி சாமுவேல்
மனநல ஆலோசகர்.
சென்னை.
044 - 2433 7439
