PUBLISHED ON : பிப் 01, 2017
மருத்துவர், எனக்கு நீரிழிவு என்றதும் அதற்கான பரிசோதனை செய்தோம். உணவுக்கு முன் மற்றும் பின் என, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை தெரிந்து கொண்டோம். இருந்தும், HbA1C எனும் பரிசோதனை எடுக்க சொல்கிறார். இது பற்றி விளக்கம் ப்ளீஸ்?
உமா ரங்கநாதன். சென்னை
பரிசோதனை செய்த நாளின் சர்க்கரை அளவைத் தவிர, கடந்த மூன்று மாதங்களாக, ஒவ்வொரு நாளும் இருந்த சராசரி சர்க்கரை அளவை குறிப்பிடுகிறது. என்ன தான் சர்க்கரையின் அளவை பரிசோதனை நாளில் கட்டுக் கோப்பாக வைத்திருந்தாலும், HbA1C இப்பரிசோதனை, மூன்று மாதங்களாக ஒழுங்காக சிகிச்சை எடுக்காமல், அளவுக்கு அதிகமாக சர்க்கரை இருந்ததை கண்டுபிடித்து விடும். ஒருவர், தன்னுடைய கட்டுபாட்டில் தான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உள்ளது என்பதை, இரு வழிகளில் நிரூபிக்கலாம். உணவு எடுப்பதற்கு முன், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் உணவு சாப்பிட்ட பின் எடுக்கக் கூடிய சர்க்கரையின் அளவு, 140 - 180க்கு மேல் இருக்கக் கூடாது. HbA1C இப்பரிசோதனையில், 7 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது. ஒவ்வொரு நாளும், கடந்த மூன்று மாதங்களாக, 140 மி.கி., அளவில் இருந்தது என்று கூறும், HbA1C அளவு, 7 சதவீதமாக இருக்க வேண்டும். சர்க்கரையின் அளவு, 140 என்று நிகழ்காலத்தில் வந்தாலும், அவரது கடந்த மூன்று மாதத்தின் ஒவ்வொரு நாளைய சர்க்கரையின் அளவை சொல்லும், HbA1C7 - 7 சதவீதம் என்றில்லாமல், 8 சதவீதம் அல்லது அதற்கும் மேல் இருந்தால் உணவு முறை பின்பற்றுதல் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதில், எங்கோ தவறு செய்திருக்கிறார் என்றே அர்த்தம். சிலர், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதிப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பாக மட்டும் மருந்துகளை எடுத்துக் கொள்வர்; உடற்பயிற்சிகளை செய்வர். அப்போது, ரத்தப் பரிசோதனை செய்தால் சர்க்கரையின் அளவு குறைவாகத் தானே காட்டும். இதுபோன்ற நோயாளிகள், யாரை திருப்திப்படுத்த முயல்கின்றனர்; தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்ளுகின்றனர். எனவே உண்மை நிலையை அறிய, HbA1C பரிசோதனை உதவும்.பொதுவாக நிரிழிவு நோயாளிகள், உணவு கட்டுப்பாட்டுடன், உடற்பயிற்சியும் மேற்கொண்டு, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை சரியாக எடுத்துக்கொண்டாலே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக்கொள்ளலாம்.
சே.ராஜ்குமார், பொது மற்றும் நீரிழிவு நிபுணர்.
சென்னை
