பாலியல் கொடுமைகள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பது எப்படி?
பாலியல் கொடுமைகள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பது எப்படி?
PUBLISHED ON : ஆக 12, 2015

பொதுவாக, குழந்தைகளுக்கு படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம், எதை சொல்லிக் கொடுத்தாலும், புரிந்து கொள்வர். அதிலும், தற்போது இணையதளங்களில் குழந்தைகளுக்கு தெளிவாக புரியும் வகையில், பாலியல் கொடுமைகள் குறித்து, விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவற்றை குழந்தைகளுக்கு காட்டி விளக்கினாலே, குழந்தைகள் புரிந்து கொண்டு, உஷாராக இருப்பர். முடியாது குழந்தைகளிடம், யாரேனும் வந்து, சாப்பிட எதுவும் கொடுத்தாலோ அல்லது 'எங்கேயாவது அழைத்துச் செல்கிறேன்' என கூறினாலோ, சற்றும் யோசிக்காமல், 'முடியாது' என்று சொல்லச் சொல்லுங்கள். மேலும், அது தான் நல்லது என்றும், சொல்லிக் கொடுங்கள்.
தொடக் கூடாது:
அந்தரங்க உறுப்பு பற்றி சொல்லிக் கொடுங்கள். குழந்தையாக இருக்கும் போதே, அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதில் தவறில்லை. மேலும், 'அந்த இடத்தை, யாரும் தொட அனுமதிக்கக் கூடாது' என்றும், சொல்லிக் கொடுங்கள். இதன் மூலம் அவர்கள், ஜாக்கிரதை உணர்வுடன் இருப்பர்.
ஆடை அவசியம்
குழந்தைகள், 'ஆடையின்றி இருக்கக் கூடாது' என்று சொல்லுங்கள். குறிப்பாக, வீட்டிற்கு அன்னியர் யாரும் வந்தால், கட்டாயம் ஆடையில்லாமல் இருக்கக்கூடாது என்பதையும் கற்றுக் கொடுங்கள். ஒருவேளை, யாரேனும் மிரட்டினால், சிறிதும் அஞ்சாமல் சத்தம் எழுப்ப கற்றுக் கொடுங்கள்.
கதை மூலம் சொல்லுங்கள்
கதை என்றால், குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்; ஆர்வத்துடன் கேட்பர். குழந்தைகளுக்கு புரியும் வண்ணம், செய்கையுடன், பாலியல் கொடுமைகளைப் பற்றி சொல்லுங்கள். உதாரணத்துடன் சொல்லிக் கொடுத்தாலும், குழந்தைகள் பாலியல் தொல்லைகளில் இருந்து தப்பிக்க முடியும். குழந்தைகளுக்கு, 'ஒருவர் எந்த எண்ணத்தில் தொடுகிறார்' என, பெற்றோர் அவசியம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
நல்ல எண்ணத்தில் தொடுவது
ஒருவர் பேசும்போது, 'கைகள் மற்றும் கன்னத்தை மட்டும் செல்லமாக கொஞ்சி தொட்டால், அதில் காமம் இல்லை' என்று சொல்லுங்கள்.
கெட்ட எண்ணத்தில் தொடுவது
அம்மாவைத் தவிர, வேறு யாரும் அந்தரங்க உறுப்பை தொட்டால், உடனே தன்னிடம் சொல்ல வேண்டும் என்றும், 'இனிமேல் அவர்களுடன் பேசவோ, பழகவோ கூடாது' என்றும், சொல்லிக் கொடுங்கள். ரகசியமாக தொடுவது என்பது, குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தும் வகையில் செய்வதாகும். அதாவது, குழந்தையிடம் தவறாக நடந்து விட்டு அல்லது பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு விட்டு, 'யாரிடமும் இதை சொல்ல வேண்டாம்' என்று யாரும் சொன்னால், 'அதை மறைக்காமல், சொல்ல வேண்டும்' என்று சொல்லிக் கொடுங்கள்.
குழந்தைகளுக்கு வெளிப்படையாகவும், அஞ்சாமலும் பேச குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். பள்ளி முடிந்து வந்ததும், அன்றாடம் பள்ளியிலோ அல்லது அந்த நாளில் நடந்தவற்றையோ மறைக்காமல் சொல்லும் பழக்கத்தை சொல்லிக் கொடுங்கள்.
- ரவி சாமுவேல்,
மனநல ஆலோசகர், தி.நகர், சென்னை
94440 22054

