PUBLISHED ON : ஜன 11, 2017

பாரதியைப் பார்க்கும் போது, பரிதாபமாக இருந்தது. கடைசி காலக்கட்டம், 80 வயதாகி விட்டது. சில வாரங்களாக, ரொம்பவும் உடம்புக்கு முடியாமல் போய்விட்டதாம். ஏதோ அந்த வயதிலும், தனக்கு தேவையானதை, தள்ளாடி தள்ளாடி, தானே செய்து கொண்டார்; இனி அதற்கும்
வழியில்லை. கடந்த இரண்டு வாரங்களாக, படுத்த படுக்கையாகிவிட்டார். ஒரே ஆதரவு, தன் கடைசி மருமகள். பாரதிக்கு, நான்கு பிள்ளைகள். முதல் மகனும், கடைசி மகனும் இறந்துவிட்டனர். இரண்டாவது மகனின் மனைவி, பெண்ணாக பிறப்பதற்கே தகுதியற்றவள், காரணம் பெற்ற தாயை கூட, தன் கணவன் சந்திப்பதை விரும்பவில்லை; மனைவிக்கு பயந்து, அவரும் தாயை பார்ப்பதில்லை. மூன்றாவது மகன். எப்போதாவது வருவார். கையில் கிடைக்கும் பணத்தை கொடுத்துவிட்டு செல்வார். அரசாங்க பென்ஷன் பணத்தில், காலையில் ஏதாவது உணவு வாங்கி சாப்பிடும் பாரதிக்கு, பகலில் கடைசி மருமகள் உணவளித்துவிடுவார். இரவில், இரண்டாவது மகன் வீட்டிலிருந்து உணவு தருவர். இரண்டு வாரங்களாக, இரண்டு ஸ்பூன் தேநீர் கூட, பாரதி குடிக்கவில்லை. சிறுநீர், மலம் கழிப்பது எல்லாம், படுக்கையிலேயே. காரணம், அவருக்கு ஏற்பட்ட புற்றுநோய். இரண்டு நாட்களுக்கு முன், மருத்துவ நண்பனை சந்திக்க, அவரது மருத்துவமனைக்கு அவரது சென்றபோது, பாரதியை சந்தித்தேன். நொறுங்கிப் போய் இருந்தார். இயலாமையை நினைத்து அழுததோடு, பயந்து போயிருந்தார். ''பிள்ளைகள் கவனித்திருக்க வேண்டும்; கவனிக்கவில்லை. ஆனால். மகள் போல், கடைசி மருமகளைத் தந்திருக்கிறார் இறைவன்; அதற்கு நன்றி சொல்லுங்கள் தைரியமாக இருங்கள்,'' என்றேன். பாரதியின் கதையை எழுதுவதன் மூலம், நான் சொல்ல நினைப்பது ஒன்று தான்; மகனாகவோ, மகளாகவோ கூட வேண்டாம், அதிகபட்சம் மனிதனாகவாவது இருக்க வேண்டும். அப்போது தான், நம் கடைசி காலத்தில் குற்ற உணர்ச்சிகள் ஏதும் இன்றி வாழ முடியும்.
ராதா, மனநல ஆலோசகர்

