PUBLISHED ON : ஜன 11, 2017

'பிரெய்ன் அட்டாக்' என்றால் என்ன?
மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில், அடைப்பு ஏற்படுவது அல்லது ரத்தக் கசிவு காரணமாக, மூளைக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதையே, பிரெய்ன் அட்டாக் என்கிறோம்; அதாவது பக்கவாதம்.
பக்கவாதத்திற்கான விழிப்புணர்வு மக்களிடையே உள்ளதா?
உடலின் ஒரு பக்கம் செயல் இழப்பதால், இதை பக்கவாதம் என்கிறோம். பல நோய்களுக்கு உள்ள விழிப்புணர்வு கூட, பக்கவாதத்திற்கு இல்லை. போதிய சிகிச்சை இன்றி, மரணங்களும் ஏற்பட்டு இருக்கின்றன.
பக்கவாதம் ஏற்படக் காரணம்?
பக்கவாதம் ஏற்படுபவர்களுக்கு, மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்க்கு, உணவும், ஆக்சிஜனும் கிடைக்காமல், மூளை செல்கள் உயிரிழப்பதே.
பக்கவாதத்தின் பாதிப்பு என்ன?
மூளையின் எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறதோ அதைப் பொறுத்து, பேச்சு, பார்வை, நினைவாற்றல், உணர்ச்சி, தசைகளின் வலுத்தன்மை போன்றவை பாதிப்படைகின்றன. இதனால் தான், பக்கவாதப் பாதிப்பு வந்த, இரண்டு மணி நேரத்திற்குள், சிகிச்சைக்கு வர வலியுறுத்தப்படுகிறது.
பக்கவாதம் ஏற்பட்டவுடன் முதலுதவியாக என்ன செய்ய வேண்டும்?
ரத்தக் குழாய் அடைப்புக் காரணமாகவே, பக்கவாதம் வருகிறது. எனவே, பாதிக்கப்பட்டவரை, நரம்பு மண்டல சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு, இரண்டு மணி நேரத்திற்குள் கொண்டு செல்ல வேண்டும். 'கோல்டன் ஹவர்' எனப்படும், இரண்டு மணி நேரத்திற்குள், 'இன்ட்ராவீனஸ் த்ராம்போலிசிஸ்' சிகிச்சை அளித்தால் போதும்.
பரிசோதனைகள் என்னென்ன?
சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மூலம், என்ன விதமான பாதிப்பு, எந்த இடத்தில் பாதிப்பு என்பதை துல்லியமாக கண்டறியலாம்.
இரண்டு மணி நேரத்திற்குள், மருத்துவமனைக்கு வந்ததும், என்ன சிகிச்சை அளிக்கப்படும்?
பரிசோதனையின் முடிவில், டி.பி.ஏ., என்ற சிகிச்சை அளிக்கப்படும். அதாவது ரத்த குழாய்க்குள், உறைந்த ரத்தத்தைச் சரிசெய்யும் சிகிச்சை அளிக்கப்படும்.
பக்கவாதத்திற்கான சிகிச்சைகள் என்னென்ன?
ரத்தக் குழாய் வெடிப்பு காரணமாக, ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தால், ரத்தம் உறைவதற்கான மருந்து அளிக்கப்படும். மூளையில் ரத்தம் தங்கி ஏற்படும் அழுத்தத்தைப் போக்க, அறுவை சிகிச்சை செய்யப்படும். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட ரத்தக் குழாயை சீரமைக்கவும், மூளையில் ஏற்பட்ட வீக்கத்தைப் போக்கவும், சிகிச்சை அளிக்கப்படும்.
'கோல்டன் ஹவர்' கடந்து வருபவர்களின் நிலை?
இரண்டு மணி நேரத்துக்குப் பின் வருபவர்களுக்கு, உடல் செயல் இழப்பு ஏற்படலாம். சிறிய அளவில் செயல் இழப்பு என்றால், சிகிச்சைகள் உள்ளன. முழுமையான செயல் இழப்பு என்றால், அதைச் சரிசெய்ய முடியாது. பாதிக்கப்பட்ட செல்களுக்கு பதிலாக, புதிய செல்களும் உருவாகாது.
பக்கவாதத்தை தடுக்க முடியுமா?
பக்கவாதத்தைத் தவிர்க்க முடியாது என்ற தவறான நம்பிக்கை உள்ளது. உண்மையில், 70 சதவீத பக்கவாதத்தை தடுக்க முடியும். பக்கவாதத்திற்கு சிகிச்சைகள் உண்டு. பக்கவாதம்
வயதானவர்களுக்கு என்றில்லை; யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
கா.சுகுமாறன்
நரம்பியல் சிறப்பு நிபுணர்,
சென்னை.

