PUBLISHED ON : அக் 05, 2016

என்னிடம் வந்த அந்தப் பையனின் வயது, 15. அந்த ஆண்டு, 10வது படித்துக் கொண்டிருந்தவன், படிப்பை நிறுத்தி விட்டான். இவன் பிறப்பதற்கு முன், இவனது பெற்றோருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்துவிட, அடுத்த சில ஆண்டுகள் கழித்து இவன் பிறந்துஇருக்கிறான். அதனால் இவன் மீது, பெற்றோர் அன்பைப் பொழிந்து வளர்த்திருக்கின்றனர். சில ஆண்டுகளில், இவனுக்கு ஒரு தங்கை பிறக்க, மொத்த குடும்பத்தின் கவனமும், அந்த குழந்தை மேல் போய்விட்டது. பெற்றோர் இவனை வெளியில் எங்கும் விளையாட அனுமதிப்பதில்லை. எதற்கெடுத்தாலும், இவனை திட்டியபடி இருக்க, எப்போதும் சோகத்திலேயே இருந்திருக்கிறான். பெற்றோரின் கவனம் முழுவதும், தங்கை மேலேயே இருக்க, ஆறாம் வகுப்பு படித்தபோது, ஒரு பாடத்தில் இவன் தேர்ச்சி பெறாததால், அம்மாவும், அப்பாவும், திட்டித் தீர்த்து, 'நண்பர்கள் இருக்கக் கூடாது, விளையாடக் கூடாது' என்று ஏகப்பட்ட கெடுபிடி. ஏழாவது படித்தபோது, ஒருநாள் பள்ளிக்கு வந்த இவன் பெற்றோர், இவன் தன் வகுப்பு தோழர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து, டீச்சரிடம் சொல்ல, அவர் அனைவரின் முன்பும் இவனை திட்டியிருக்கிறார். இது இவனுக்கு அவமானமாகப் போய்விட்டது.
அடுத்த ஆண்டே, ஆண் குழந்தைகள் மட்டும் படிக்கும் பள்ளிக்கு மாற்றி விட்டனர். அங்கு கணக்குப் பாடத்தில், தேர்ச்சி பெறாததால், பள்ளிக்கு வந்த அப்பா, வகுப்புத் தோழர்கள் முன் திட்டியுள்ளார். உடன் படிக்கும் மாணவர்களிடம் இருந்து நிறைய கெட்ட வார்த்தைகள் பேசக் கற்றுக் கொண்டதோடு, வகுப்பை, 'கட்' அடிப்பது எப்படி என்றும் கற்றுக் கொண்டான். ஒரு நாள், இவனுடைய பெரியப்பா வீட்டிற்குப் போனபோது, அவரின், 11வது வகுப்பு படிக்கும் மகள், இவனிடம் அன்பாகப் பேசி, தன் வகுப்பில் நடந்தவற்றை பகிர்ந்து கொண்டாள். இவனும் தன் அனுபவங்களை சொல்ல, அவள் மேல் பாசம் வந்து விட்டது. ஓராண்டு தான் அந்தப் பள்ளியில் படித்தான். அதன்பின் மீண்டும் பழைய பள்ளிக்கே மாற்றி விட்டனர். எப்போதும், தன் பெரியப்பா மகளின் நினைவு, தனக்கு இவளை போல அக்கா இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும் என்று. பாடத்தில் கவனம் இல்லை. நான்கைந்து பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. பள்ளி இறுதித் தேர்வின்போது, அம்மை நோயும் வர, தேர்ச்சிபெற முடியவில்லை. அதன்பின், அம்மா, அப்பா இருவரும், செருப்பு, கம்பு, இரும்புத்தடி, துடைப்பம் என்று கையில் கிடைத்ததை வைத்து, தினமும் இவனை அடித்திருக்கின்றனர். பழைய பள்ளிக்கு போக விடாமல்,
தெரிந்தவர்கள் உதவியுடன் நெய்வேலியில் வேறு பள்ளியில் சேர்த்திருக்கின்றனர். பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல், சில கெட்ட
பழக்கங்களையும் பழகிய நிலையில், என்னிடம் வந்து, 'எப்படியாவது என்னை நல்ல பையனாக மாற்றி விடுங்கள் டாக்டர்' என்றான். எதற்கெடுத்தாலும், எதிர்மறையாகப் பேசி, இவனை குறை சொல்லியபடியே இருந்ததால், வீட்டில் கிடைக்காத அன்பை வெளியில் தேடிஉள்ளான். அவனது பிரச்னைகளை, நான் காது கொடுத்துக் கேட்க கேட்க, ரிலாக்ஸ் ஆன நிலையில், 'ஹிப்னோதெரபி' சிகிச்சை அளித்ததில், மற்றவர்களிடம் அவனுக்கு இருந்த கோபம், ஆத்திரம் போன்ற எதிர்மறை எண்ணங்கள், கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டன.
டாக்டர் பீட்டர் பெர்னாண்டஸ்
மனநல சிறப்பு மருத்துவர்
044 - 2252 0249
