PUBLISHED ON : நவ 30, 2016

என் பெயர் பூர்ணிமா, 23 வயது. திருப்பூர் சொந்த ஊர். என் பெற்றோருக்கு நான் கடைசி குழந்தை. அதனாலேயே ரொம்ப செல்லம். படிப்பில் கவனம் இல்லை. அதனால், பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் எடுக்கவில்லை. கோவையில் உள்ள கல்லுாரி ஒன்றில், 'பேஷன் டெக்னாலஜி' சேர்ந்தேன். டிகிரி முடித்த பின், வெளிநாட்டிற்கு அனுப்புவதாக அப்பா சொன்னார். வீட்டில் அப்பாவும், அம்மாவும் எப்போதும் சண்டையிட்டபடி இருப்பர்; சில சமயங்களில் அடிதடி கூட நடக்கும். இது எனக்கு மிகுந்த மன அழுத்தத்தைத் தந்தது. அதனால், தோழியருடன் நெருக்கமாக இருப்பேன். ஆனால், ஒரு கட்டத்தில் அவர்களுடன் சின்ன சின்னதாக சண்டை போட்டேன். தோழியர் எட்டு பேரும், என்னைப் பிரிந்து சென்றனர். இந்த நிலையில்,
என் கல்லுாரி நண்பன் என்னை காதலிப்பதாக சொன்னான். எனக்கு அவனைப் பிடித்தது. ஆனால், உறவுக்குள் செல்ல தயக்கமாக இருத்தது. கல்லுாரி படிப்பு முடித்தவுடன் என்னை வெளிநாடு அனுப்பச் சொல்லி அப்பாவைக் கேட்டேன்; மறுத்து விட்டார். இது, எனக்கு மிகுந்த கோபத்தைத் தந்தது. இதற்கிடையில் எனக்கு வரன் பார்க்க, அதில் ஒரு பையனின் அறிமுகம் கிடைத்தது. பார்ப்பதற்கு நன்றாக இல்லை என்றாலும், பழகுவதற்கு நல்ல பையனாக இருந்தான். ஆறு மாதங்கள் கழித்து அப்பாவிடம் பேசுவதாக சொன்னேன். சரி என்றான். ஆனால், அவன் வீட்டில் உடனடியாக திருமணத்திற்கு வற்புறுத்தியதால், வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டான். இதற்கிடையில் என் நெருங்கிய உறவினரால், பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டேன். இதை வீட்டில் சொன்னபோது, நான் தான் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்றனர். எப்படியாவது வெளிநாடு போய்விட வேண்டும் என, எம்.பி.ஏ., வகுப்பில் சேர்ந்தேன். இரண்டாவது ஆண்டு படித்த போது, எதிர்பாராமல் ஒரு பையனோடு எனக்கு நிச்சயம் செய்தனர். என்னோடு பழகிய நாட்களில், உடல் ரீதியான உறவில் மட்டுமே கவனமாக இருந்தான். எனக்கு எரிச்சலாக இருந்தது; என் உடல் மீது மட்டும் ஏன் ஆர்வமாக இருக்கின்றனர் என்று.அதனால், இவனை திருமணம் செய்து கொள்ள முடியாது என, மறுத்துவிட்டேன். என் பெற்றோருக்கு இதில் வருத்தம். ஐந்து மாதங்களுக்குப் பின், ஒரு டாக்டர் பையனைப் பார்த்தனர். என்னை பார்த்தவுடன் அவனுக்கு பிடித்துவிட்டது. என்னைக் கேட்டான், குழப்பமாக இருப்பதாக சொன்னேன். என் கடந்த காலம் மனதில் உறுத்தியது; அதனால் தற்கொலைக்கு முயன்றேன். என் பிரச்னையை அவனிடம் சொன்னபோது, கடந்த காலம் பற்றி எனக்கு கவலையில்லை என்றான். கடைசியில் இருவரும் ஒரு முடிவிற்கு வந்தோம், ஒரு ஆண்டு கழித்து திருமணம் பற்றி யோசிக்கலாம் என்று. எனக்கு குழப்பமாக உள்ளது. அதனால் தான் உங்கள் உதவியை நாடுகிறேன்.டாக்டர் அட்வைஸ்: லட்சியங்களோடு வளர்ந்த பெண், தொடர்ந்து தன் குடும்பம், நண்பர்களால் கசப்பான அனுபவத்திற்கு உட்பட்டு, தோல்விகளையே சந்தித்து, எதிர்காலம் பற்றி முடிவெடுக்க முடியாமல் குழப்பமாக இருக்கிறார். 'ஹிப்னோதெரபி' செய்த பின், சுயமாக, 'ஹிப்னாசிஸ்' செய்வதற்கும் கற்றுக் கொடுத்தேன். முழுமையாக மாறி விட்டார். இப்போது தன்னம்பிக்கை மிக்க பெண்ணாக, தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்கிறார்.
டாக்டர் பீட்டர் பெர்ணான்டஸ்
சைக்கோ லேப்
044 - 2252 0249, 2252 1120
