
நவ., 7, 2016: பல ஆண்டுகளாக சர்க்கரை நோயாளியாக இருந்த என் நண்பனின் தந்தைக்கு, இடது கணுக்காலில் புண் ஏற்பட்டதை தொடர்ந்து, டாக்டர்கள் அந்தப் பகுதியை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டனர். காலுக்குச் செல்லும் ரத்தக் குழாய் அடைபட்டதால், வேறு வழியில்லாமல் இந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. தகவல் தெரிந்து நான் அவரைக் காணச் சென்றேன். '10 ஆண்டுகளாக மருந்து, மாத்திரை, உடற்பயிற்சி செய்தும், எந்த பலனும் இல்லாமல் போய்விட்டது' என்று புலம்பினார். இதுவரையிலும் அவர் சர்க்கரை நோய்க்காக எடுத்த பரிசோதனைகள், சாப்பிட்ட மாத்திரைகள் என, அவரின் மருத்துவ அறிக்கையைப் பார்த்த பின் தான், அவர் செய்த தவறு என்ன என்பது புரிந்தது.முதலில் இவர் மாதம் ஒருமுறை ரத்தப் பரிசோதனை செய்யாமல், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தான் செய்திருக்கிறார். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செய்தபோதும், ரத்த சர்க்கரையின் அளவு, 140 முதல், 180 மி.கி., அளவில் இல்லை. ஒவ்வொரு முறையும், 200 முதல், 230 மி.கிராமில் தான் இருந்துள்ளது. இப்படி தான் பலரும், 140 மி.கி., அளவிற்கு பதிலாக, 240 மி.கி., என்று இருந்தால், ஏதோ காரணத்தினால் பரிசோதனை செய்த நாளில் மட்டும், இப்படி உள்ளது என்று நினைத்துக் கொள்கிறோம். நண்பனின் தந்தையும் அப்படித் தான் நினைத்திருக்கிறார்; அது தவறு. எல்லா நாட்களும் அவரின் ரத்த சர்க்கரையின் அளவு, 200க்கு மேல் இருந்துள்ளது என்பதை, அவரின் HbA1C ரிப்போர்ட், 8 முதல், 9 சதவீதம் இருந்ததை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இப்படி, ஒவ்வொரு நாளும் அதிகமாக உள்ள சர்க்கரை, நம்முடைய ரத்தக் குழாயில் படிந்து, சேதத்தை உண்டு பண்ணுகிறது என்பதை மறந்து விடுகிறோம். நான் வலியுறுத்துவது மூன்று விஷயங்களை தான்.மாதம் ஒருமுறை சர்க்கரை பரிசோதனை செய்து, சர்க்கரையின் அளவு, 140 மி.கி., முதல் 180 மி.கிராமிற்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.எல்லா நாட்களுமே உங்கள் சர்க்கரை, 140 மி.கி., என்ற அளவில் தான் இருந்தது என்பதை உறுதி செய்யும் HbA1C என்ற பரிசோதனையில், 7 சதவீதம் தான் இருக்கிறது என்பதை உறுதி செய்யுங்கள். உணவுக் கட்டுப்பாடு, மருந்து, உடற்பயிற்சி செய்தும், என் சர்க்கரை அளவு குறைய வில்லை என, நீங்கள் நினைத்தால், அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறையும் அளவிற்கு போதுமான அளவு மாத்திரையோ, இன்சுலினோ தரப்படவில்லை என்பது தான் கசப்பான உண்மை.
டாக்டர் நியோ சர்ச் தோர்சிஸ்
ஜே.ஐ.பி., டயாபடிக் அண்ட் ஹெல்த் கேர் சென்டர், பம்மல்.
044 - 2248 0417, 2248 0635

