டிஜிட்டல் தொழில்நுட்ப உலகம் இது. கண்களுக்கு வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் என்ன என்று கூற முடியுமா?
க.அஸ்வின் குமார், வட சென்னை
தொடர்ந்து கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தால், கண்களில் வறட்சி (Dry Eyes) வரும். ஏழு நாட்களும், 24 மணி நேரமும், நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கருவிகளை (gadget) சார்ந்தே இருக்க வேண்டிய உலகம் இது. இதனால், நம் கண்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மின்னஞ்சல் பார்ப்பது, மெசேஜ் அனுப்புவது, உணவு ஆர்டர் செய்வது, டிக்கெட் புக் செய்வது, மொபைல் பில், கிரெடிட் கார்டு பில் கட்டுவது, நண்பர்களுடன் தகவல் பரிமாற்றம் என்று ஏதோ ஒரு வேலையை செய்வதற்கு எல்லா நேரமும் மொபைல் போனை பார்த்தபடி இருக்க வேண்டிய நிலை.இப்படி நீண்ட நேரம் டிஜிட்டல் கருவிகளில் வேலை செய்வது, கண்களுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்துமா என்றால், இப்படி ஸ்ட்ரெயின் செய்வதால், தலைவலி, அயர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால், கண்களுக்கு இது நிரந்தர பாதிப்பை ஏற்படுத்திவிடும் எனச் சொல்வதற்கு, இதுவரை எந்த ஆராய்ச்சியும் இல்லை. கம்ப்யூட்டர் அல்லது மொபைல் ஸ்கீரினில் காட்சிகளைப் பார்க்கும்போது, கண்களில் உள்ள மெல்லிய தசைகள், லென்ஸ் அதை சரியாக பார்ப்பதற்கு ஏதுவாகசுருங்கி விரியும். தொடர்ந்து இதுபோல சுருங்கி விரியும் தன்மையானது, கண்களில் வறட்சியை, தலைவலியை உண்டு பண்ணுகிறது. இன்னொரு காரணம், அருகில் வைத்து பார்க்கும்பொழுது, கண்களில் இயல்பாக சுரக்கும் ஈரத்தன்மை உலர்ந்து, வறட்சி ஏற்படுகிறது. இதுவே, 'ஏசி' அறையில் இருந்தால், இன்னும் வேகமாக கண்கள் உலர்ந்துவிடும். அதனால், ஒரு நிமிடத்திற்கு குறைந்தது, 20 முறை, கண்களை இமைக்க வேண்டும். விளக்குகளை எல்லாம் அணைத்து துாங்குவதற்கு தயாராகும் நேரத்தில், கண்கள் இருளுக்கு பழகிவிடும். அந்த சமயத்தில், சட்டென்று போனை எடுத்துப் பார்க்கும் போது படும் வெளிச்சம், கண்களை பாதிப்பதோடு, துாங்கும் நேரத்தில் துாக்கத்தையும், உடலின் மற்ற செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் மூளையில் சுரக்கும் மெலடோனின் ஹார்மோன் சுரப்பது பாதிக்கப்படும். துாங்குவதற்கு, இரண்டு மணி நேரம் முன், டிஜிட்டல் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.கண் மட்டத்திற்கு சற்று குறைவாக கம்ப்யூட்டர் திரை இருக்க வேண்டும். எவ்வளவு துாரத்தில் இருந்து பார்ப்பது வசதியாக இருக்கிறதோ, அந்த துாரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சம், எழுத்துக்கள் உங்களுக்கு வசதியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, கண்களுக்கு துாரத்தில் உள்ள பசுமையைப் பார்ப்பது அல்லது உள்ளங்கையால் மூடி ஓய்வு கொடுக்க வேண்டியது முக்கியம். கண்ணாடி அணிபவர்கள் சரியான, 'பவர்' உள்ள லென்சுகளை பயன்படுதத வேண்டும்.
டாக்டர் அமர் அகர்வால், அகர்வால் கண் மருத்துவமனை

