PUBLISHED ON : ஜன 04, 2017

சிறு வயதிலேயே, தினேஷ் அம்மாவை இழந்து விட்டார். அம்மா என்றாலே அன்பு தானே! அப்பாவிடம் கிடைத்தது கண்டிப்பு மட்டுமே. ஆனால், அன்பு கிடைக்கவில்லை என, சொல்ல முடியாது; அவருக்கு, அன்பை வெளிக்காட்ட தெரியாது. எனவே, தந்தை - மகன் இடையில், இடைவெளி அதிகமாகிக் கொண்டே சென்றது. அம்மா இல்லாத பிள்ளை என்பதாலேயே, தினேஷின் தந்தை சற்றே கண்டிப்புடன் வளர்த்திருக்கிறார். பெண் பிள்ளைகள் தவறு செய்யமாட்டார்கள் என்ற கருத்தை கொண்டு, பெண் பிள்ளைகளுக்கு சற்றே சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்கிறார். அதோடு, எந்த செயல் செய்தாலும், கவனமாக இரு என, சொல்லி சொல்லியே, ஒருவித பயத்தையும், பதற்றத்தையும், தினேஷின் மனசுக்குள் வளர்த்துவிட்டார். தினேஷ் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தது தான், வாழ்க்கையில் எடுத்த மிகப்பெரிய முடிவு. திருமணம் முடிந்து, ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன.
இன்னமும், தினேஷுக்கு வாழ்வில் சரியான முடிவுகள் எடுக்க தெரியாது. காரணம், தேவையில்லாத பயம். தினேஷை
திருமணம் செய்த பெண், தந்தையில்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். சிறு வயதிலிருந்தே மிகவும் தைரியமாக வளர்க்கப்பட்டவர்; மிகத் தெளிவாக முடிவுகள் எடுக்க தெரிந்தவர். எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் இவர்களில் ஒருவர், முடிவுகளை எடுக்க பயப்படுகிறார். அடுத்தவர், 'முடிவுகளை நானே எடுக்கணுமா, ஏன் குடும்பத் தலைவன் தானே முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். பொறுப்புகளை, ஏன் நான் சுமக்க வேண்டும்?' என, கோபப்படுகிறார். பிரச்னைக்கான தேர்வு தேடி என்னிடம் வந்தனர். தினேஷுக்கு கவுன்சிலிங் அளித்தேன். உங்கள் மனைவி, சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர்; ஒரு ஆணின் கட்டுப்பாட்டிற்குள் இருக்க ஆசைப் படுகிறார். பொறுப்புகளை தட்டிக்கழிக்க நினைப்பது தவறு என, விளக்கினேன். அதோடு, நாம் எடுக்கும் முடிவுகள் நமக்கு தோல்வியை கூட கொடுக்கலாம். அதையும் பயப்படாமல் எதிர்கொள்ள வேண்டும் என்றதும், தன்
தவறை புரிந்து கொண்டார்.
உ.சுரேஷ்
மனநல ஆலோசகர், புதுச்சேரி

