உறவு மேலாண்மை: இருப்பதை விட்டு இல்லாததை தேடினால்...
உறவு மேலாண்மை: இருப்பதை விட்டு இல்லாததை தேடினால்...
PUBLISHED ON : செப் 21, 2016

'இன்னொரு திருமணம் செய்து கொண்டு வாழவே எனக்கு விருப்பம். ஆனால், ஏன் எனக்கு எதுவும் சரியாக அமைய மாட்டேங்குது?' என்ற கேள்வியுடன் தான், ரேவதி என்னிடம் வந்தார். முதல் திருமணத்தின் மூலம் அவருக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும், கிராமத்தில் உள்ள அம்மாவின் பராமரிப்பில் வளர்கின்றனர். ரேவதிக்கு முதல் திருமணம், பெற்றோர் பார்த்து செய்தது தான். இவர், நல்ல வேலையில் இருக்கிறார். ஆனால்
கணவருக்கு, நிரந்தர வேலை கிடையாது. அதனால், பொருளாதார சிக்கல். இரண்டாவது குழந்தையின் பிரசவத்திற்கு போன போது, அங்கேயே தங்கிவிட்டார்.
பெற்றோர் வீடு கிராமம் என்பதால், ரேவதி இனி கணவருடன் போக மாட்டார் என்று தெரிந்தவுடன், அவரின் வீட்டில் உள்ளவர்களின் பேச்சு, நடத்தை எல்லாம் மாறிவிட்டது. இதற்கிடையில், ஒருமுறை மனைவியை அழைக்க வந்த கணவர், இவர் வர மாட்டேன் என்று சொன்னவுடன் மிகக் கடுமையாக பேசிச் சென்றுவிட்டார். விவாகரத்து ஆன சில வாரங்களிலேயே, அவர் வேறு திருமணமும் செய்து கொண்டார். 'அவர் மட்டும் இன்னொரு திருமணம்
பண்ணலாம்; நான் செய்யக் கூடாதா?' என்று வரன் தேட ஆரம்பித்தார். இதற்கிடையில், முதல் பெண் குழந்தைக்கு, 10 வயது ஆன நிலையில், 'நான் ஏன் அம்மா, அப்பாவோட சேர்ந்து இல்லாமல் பாட்டியோடு கிராமத்தில் இருக்கிறேன்?' என்பது உள்ளிட்ட நிறைய கேள்விகள் கேட்டு, அவளின் நடத்தையும் முரட்டுத்தனமாக மாறியது.இணையதளம் வழியாகவும், தெரிந்தவர்கள் மூலமும் தீவிரமாக வரன் தேடிய போது, முதல் திருமணத்தின் அடையாளமான தாலி, வகிட்டில் குங்குமம், மெட்டி என்று அப்படியே இருந்தது; குழந்தைகள் இருப்பதையும்
சொல்லவில்லை. திருமணம் செய்ய ஆர்வமாக வந்தவர்கள் கூட, இவரை நேரில் பார்த்தபின் தயங்கினர் அல்லது தவறாகப் பேசினர்.
இந்த இடத்தில் தான், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் என்னிடம் வந்தார். 'இரண்டாவது திருமணம் செய்வது தவறில்லை; ஆனால், முதலில் உங்களின் தோற்றத்தில் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். இப்படி தாலி, மெட்டியுடன் இருந்தால் யாருக்கும் ஒரு தயக்கம் இருக்கத்தான் செய்யும்.
'அதுவும் தவிர, குழந்தைகள் இருக்கும் விஷயத்தை மறைக்கக் கூடாது. வாழ்க்கைத் துணையை முடிவு செய்த பின், அவரோடு குழந்தைகள் பழக வேண்டும்; அப்போது தான், ஒரு பந்தம் ஏற்படும். எப்போதும், குழந்தைகள் உங்கள் கூடவே தான் இருக்க வேண்டும். 'இருக்கிற உறவை மதிக்காமல், இல்லாத உறவைத் தேடிப் போகிறீர்கள். நீங்கள், உங்களைப் மட்டுமே மையமாக வைத்து யோசிப்பதை நிறுத்திவிட்டு, உங்களை நம்பி இருப்பவர்களையும் சேர்த்து யோசித்து, அதற்கு ஒத்துவரும் உறவை தேர்வு செய்வதே நல்லது. 'இரண்டாவது திருமணம் என்பது பொதுவாக தோல்வியில் முடிவதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதனால், தேர்வு செய்யும் முன், உணர்ச்சி வசப்படாமல் முடிவெடுப்பது பாதுகாப்பானது' என்று சொல்லி, அனுப்பி வைத்தேன்.
செல்லம் நரேந்திரன்
மனநல ஆலோசகர்
98433 14949
