PUBLISHED ON : ஏப் 21, 2019

* பள்ளி விடுமுறையில் இருக்கும் என் மகன் தினமும் கிரிக்கெட் விளையாடுகிறான். ஒவ்வொரு நாளும் விளையாடி முடித்த பின் மாலையில் தோள்பட்டையில் வலி இருப்பதாக கூறுகிறான். இப்படி வலியோடு விளையாட்டை தொடர்வது நல்லதா.
கிரிக்கெட் விளையாடும்போது தோள்பட்டை மற்றும் கையின் தசைகள் சற்று அதிகமான வலுவுடன் இயங்கும். அதை தாங்கும் சக்தி தோள்பட்டைக்கு இல்லை என்றால் வலி வரலாம். அதுமட்டுமின்றி தோள்பட்டை வலி இருக்கிறதென்றால், நாளடைவில் தோள் மூட்டில் உள்ள குருத்தெலும்பில் உள்காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தினசரி கிரிக்கெட் விளையாடும் முன் தோள் மூட்டினை வலுப்படுத்தும் CORE STRENGTHENING மற்றும் ROTATOR CUFF பயிற்சிகளை செய்ய வேண்டும். இதன் மூலம் விளையாட்டினால் தோள்பட்டை வலியை தடுக்கலாம்.
* 50 வயதான எனக்கு 8 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது. கடந்த இரு மாதங்களாக மோதிர விரலை மடக்கினால் மடங்கிய விரலை நீட்ட முடியாமல் வளைந்து போகிறது. நீட்டும்போது வலியும், ஓசையும் உண்டாகிறது. சர்க்கரை நோயால் இந்த பாதிப்பு ஏற்படுமா.
நீங்கள் சொல்வதை TRIGGER FINGER என்று மருத்துவ மொழியில் கூறுவர். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வரக்கூடிய நோய்களில் இதுவும் ஒன்று. விரலுக்கு செல்லும் தசை நாளங்களின் உறையான A1 Pulleyல் உள்வீக்கம் இருந்தால் இது ஏற்படலாம். இதற்கு முதல் சிகிச்சை தசை நாளத்தின் உரையில் ஸ்டிராய்டு ஊசி செலுத்தலாம். அதில் குணமாகவில்லை என்றால், ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்து A1 Pulleyயை சீரமைத்தால் பூரணமாக குணமாகும். மருத்துவரை சந்தித்து ஆலோசிக்கவும்.
* 63 வயதான நான் கடந்த 2 வருடங்களாக தீவிர மூட்டு வலியால் அவதிப்படுகிறேன். இதனால் விழாக்களிலும் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்த வாரம் மூட்டு மாற்று சிகிச்சை செய்து கொள்ளப்போகிறேன். சிகிச்சைக்கு பின் விழாக்களில் கலந்துகொள்ள முடியுமா.
மூட்டு மாற்று சிகிச்சை செய்த பின் 2 நாட்களில் Walkerன் ஆதரவுடன் நடக்க இயலும். பிசியோதரபி பயிற்சியோடு எந்தவித ஆதரவின்றி இரு வாரங்களில் நடக்க முடியும். லேசான வலி 6 வாரம் வரை இருக்கும். அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப இயல்பான வாழ்க்கைக்கு செல்ல 3 அல்லது 4 வாரங்கள் ஆகலாம். அதே போல் 6 வாரங்களில் எந்த விழாக்களிலும் மனஉறுதியுடன் கலந்துகொள்ள முடியும்.
-டாக்டர் கே.என்.சுப்பிரமணியன், எலும்பியல் நிபுணர்,
மதுரை, 93442 46436
