தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பித்தப் பை அகற்றுவதால் எந்த பிரச்னையும் வராது!

பித்தப் பை அகற்றுவதால் எந்த பிரச்னையும் வராது!

பித்தப் பை அகற்றுவதால் எந்த பிரச்னையும் வராது!


PUBLISHED ON : டிச 06, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 06, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பித்தப் பையில் கற்கள் வர காரணம்?

பித்தப் பையில் கற்கள் வர என்ன காரணம் என, இதுவரை தெரியவில்லை. வட மாநிலத்தவர்களுக்கு, கொழுப்புக் கட்டி, பித்தப் பையில் வரும். இது, கோலிகுண்டு போல, கண்ணாடி மாதிரி இருக்கும்.இதற்கு காரணம், கொழுப்பு சத்து, எண்ணெய், இனிப்பு வகைகள் அதிக அளவில் சாப்பிடுவதால் இருக்கலாம். நம் ஊரில், பித்தப் பையில் வரும் கற்கள், சிறிதாக,கூர்மையாக, கறுப்பு அல்லது பிரவுன் நிறத்தில் இருக்கும். இது, தொற்றால் ஏற்படும் பாதிப்பு போல தான்தெரிகிறது. உணவு, வாழ்க்கை முறை மாற்றம், சுற்றுச்சூழல் மாசு போன்ற ஏதோ ஒரு காரணத்தால், இந்த தொற்று ஏற்படலாம் என யூகிக்கிறோம்; உறுதியாக சொல்ல முடியவில்லை. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடக்கின்றன.

பித்தப் பை கற்களுக்கு அறுவை சிகிச்சை தான் தீர்வா?

அமெரிக்காவில், 20 ஆண்டுகளுக்கு முன் செய்த ஆராய்ச்சியில், பித்தப் பையில் கற்கள் இருந்த மாணவர்களை, எட்டு ஆண்டுகள் கண்காணித்ததில், பிரச்னை இருந்தவர்களில், 10 - 15 சதவீதம் பேருக்கு மட்டுமே, வலி இருப்பது தெரிய வந்தது.வலி இருந்தால் மட்டும், அறுவை சிகிச்சை செய்தால் போதும் என, முடிவு செய்தனர். இது பற்றிய ஆராய்ச்சி கட்டுரை, சர்வதேச மருத்துவ இதழில் வெளியானது. இதை அடிப்படையாக வைத்தே, வலி இல்லாவிட்டால், அறுவை சிகிச்சை தேவை இல்லை எனக் கூறப்பட்டது.

அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் பிரச்னை வராதா?

அறுவை சிகிச்சை தேவை இல்லை என்ற முடிவை, அந்த சமயத்தில் எடுத்ததற்கு காரணம், திறந்த நிலை அறுவை சிகிச்சை மட்டுமே இருந்தது. இதனால், குறைந்தது, 10 நாட்கள், மருத்துவமனையில் இருக்க வேண்டும். வலி, பொருளாதார இழப்பு என, பல பிரச்னைகள் இருந்தன. எந்த தொந்தரவும் இல்லை எனும் போது, ஏன் வீணாக சிரமப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அப்படி சொல்லப்பட்டது.இந்த கற்களை எடுக்காமல் விடுவதால், சில சமயங்களில் பல சிக்கல்கள் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலை கூட ஏற்படும்.

என்ன மாதிரியான சிக்கல்கள் வருகின்றன?

பித்தப் பை அழுகிக் போவது, ஓட்டை விழுவது, சிறிய கற்களாக இருந்தால், பித்த நீர் குழாயில் விழுந்து விடுவது போன்ற சிக்கல்கள் வருகின்றன. இது தவிர, இத்துறை மருத்துவர்களை வியப்படையச் செய்யும் விஷயம், பித்தப் பை கற்களால், கணையத்தில் ஏற்படும் அழற்சி.இதுபோன்ற பிரச்னையை, 25 ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்ததே இல்லை. இப்போது, கணையத்தில் பிரச்னையோடு வரும் இரண்டில் ஒருவருக்கு, பித்தப் பையில் கற்கள் உள்ளன.வட மாநிலத்தவர்களுக்கு, இது பொதுவான பிரச்னையாக இருந்தது. தற்போது, தென் மாநிலத்தவர்களுக்கும் அதிகம் உள்ளது.

கற்கள் இருக்கும் அனைவருக்கும் அறுவை சிகிச்சை செய்யலாமா?

இந்த பிரச்னைக்கு, மிக எளிமையான தீர்வே இது தான். ஒரு நாள் மருத்துவமனையில் இருந்தால் போதும். அடுத்த நாளே வேலைக்கு சென்று விடலாம்.பித்தப் பை கற்கள் தவிர, வேறு எந்த உடல் கோளாறும் இல்லை என்றால், அறுவை சிகிச்சை செய்து விடலாம். ரத்தம் உறையாமல் இருக்க, 'பிளட் தின்னர்' மாத்திரைகள் எடுப்பது, தற்போது சகஜமாக உள்ளது.அறுவை சிகிச்சை செய்வதற்கு ஐந்து நாட்களுக்கு முன், மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். பித்தப் பையில் கற்கள் இருப்பதை, 'அல்ட்ரா சவுண்ட்' பரிசோதனையில் உறுதி செய்தவுடன், அறுவை சிகிச்சை செய்து, பித்தப் பையை அகற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.வலி வந்தால் அறுவை சிகிச்சை செய்வதே நல்லது. இப்பிரச்னை, 30 வயதிற்குள் வந்தால், வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மருந்தினால் கற்களை கரைக்க முடியுமா?

சில மருந்துகள் உள்ளன. அவை பெரிதாக பலன் தருவதில்லை. கடினமான கற்களாக இல்லாமல், மணல் போல இருந்தால், ஓரளவு பலன் தரலாம். கல் ஆகிவிட்டால், கரைய வாய்ப்பு இல்லை.

பித்தப் பையை அகற்று வதால் எந்த பிரச்னையும் இல்லையா?

அதிகப்படியான பித்த நீரை சேமித்து வைப்பதைத் தவிர, பித்தப் பைக்கு பெரிய வேலை எல்லாம் கிடையாது. தேவைப்பட்டால், பித்த நீரை வெளியேற்றும். பித்தப் பை இல்லாவிட்டால், எந்தபிரச்னையும் வராது.

கற்கள் இருப்பதால் தான் வாயுத் தொல்லைஏற்படுகிறதா?

அப்படி கிடையாது. கற்கள் இருப்பதால், செரிமான சக்தி குறையும். சாப்பிட்டவுடன் வலி வரலாம். அதிகப்படியான அமிலம் சுரப்பதால், வாயுத் தொல்லை வருகிறது. வாயுத் தொல்லைக்கும், கற்களுக்கும் தொடர்பில்லை.

டாக்டர் ஆர்.சுரேந்திரன்

குடல், இரைப்பை சிறப்பு மருத்துவ ஆலோசகர்,

மியாட் மருத்துவமனை,

சென்னை

72990 68170

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us