PUBLISHED ON : ஏப் 03, 2022

சர்க்கரை கோளாறால், விழித்திரை எனப்படும், 'ரெடினா' பாதிக்கப்படும், 'டயாபடிக் ரெட்டினோபதி' பற்றி, நாடு முழுதும், 20 மருத்துவமனைகளுடன் இணைந்து ஆய்வு நடத்தினோம். இதன் ஒரு பகுதியாக, கேரள மாநில தலைநகரமான திருவனந்தபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களிலும் ஆய்வு நடத்தினோம்.
நாற்பது வயதிற்கு மேற்பட்ட, 60 ஆயிரம் நோயாளிகளின் வீட்டிற்கே சென்று கண் பரிசோதனை மற்றும் மூன்று மாத ரத்த சர்க்கரை சராசரி அளவை கணக்கிடும், 'ஹெச்பிஏ1சி' முழுமையான ரத்த பரிசோதனை, ரெடினா படம் என்று முழுமையான பரிசோதனை செய்யப்பட்டது.
விழித்திரையின் பாதிப்பை வைத்து, மூன்று பிரிவுகளாக நோயாளிகளை பிரித்தோம். நாங்கள் பரிசோதித்த, 60 ஆயிரம் பேரில், 4 சதவீதம் பேருக்கு ரெடினா பாதிப்பு இருந்தது. சரியான நேரத்தில் சிகிச்சை தராவிட்டால், பார்வை இழப்பு எற்படும் அபாயம் உள்ளது.
சர்க்கரை கோளாறு, நுண்ணிய ரத்த நாளங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இவை கண்கள், சிறுநீரகங்கள் நரம்புகளில் உள்ளன; எந்த அறிகுறிகளும் இருக்காது. தொடர்ந்து ஏழு, எட்டு ஆண்டுகள் கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை கோளாறு இருந்தால், நோய் தீவிரமடையும் போது,
பார்க்கும் பிம்பத்தில் கரும் புள்ளிகள், முழுமையாக கறுப்பாக தெரிவது, நேர் கோடு வளைந்து தெரிவது என்று இருக்கும். எதிர்பாராத நேரத்தில் பார்வை இழப்பு வரும். செயலிழந்த நரம்புகளை, அதன்பின் செயல்பட வைக்க இயலாது.
சர்க்கரை கோளாறு இருப்பது தெரிந்தால், ஆண்டிற்கு ஒரு முறை கண்களை பரிசோதிப்பது அவசியம். 'ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, ஆய்வின் தரவுகளை வகைப்படுத்தியதில், அதுவும் எங்களின் ஆய்வை ஒத்தே இருந்தது. டாக்டர்களின் நேரடி பங்கு இல்லாமலேயே, ஆய்வு முடிவுகளை வகைப்படுத்த முடியும் என்பதும் தெளிவானது.
ஆய்வு பரிந்துரைகளின் அடிப்படையில், சர்க்கரை நோய் பரிசோதனையை ஒருங்கிணைந்த மருத்துவ பரிசோதனையாக, நாங்கள் திருவனந்தபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் நடைமுறைப்படுத்தியது, வெற்றிகரமாக செயல்படுகிறது. இதையே மாநிலம் முழுதும் செயல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. நம் நாட்டில், ஏழு கோடிக்கும் அதிகமானோர் சர்க்கரை கோளாறால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் நான்கு கோடி பேருக்கு ரெடினா பாதிக்கும் அபாயம் உள்ளது.
எல்லா மையங்களிலும், நவீன கருவிகள் வாங்குவது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால், பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதா என்பதை, 'ரெடினல் கேமரா'வை பயன்படுத்தாமல் வயது, எத்தனை ஆண்டுகள் சர்க்கரை கோளாறு உள்ளது, எந்த அளவு கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை, ரத்த பரிசோதனை வாயிலாக கண்டறியும் முறையை, உலகில் முதன்முறையாக ஆய்வு செய்துள்ளோம்.
இதற்கு, 'பிரீ ஸ்கிரீனிங் ரெட்டினோபதி' என்று பெயர். இதை நாடு முழுதும் செயல்படுத்த மத்திய சுகாதாரத் துறையுடன் பேசி வருகிறோம்.
டாக்டர் ராஜிவ் ராமன்,
சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை, சென்னை.
044 - 4227 1818
