PUBLISHED ON : ஜன 06, 2016

உடல் பருமன், ஆண்களுக்கும், பெண்களுக்கும் கருவுறுதலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உடல் எடை கூடிக் கொண்டே சென்றால், குழந்தை பெறும் பாக்கியம் குறைத்து கொண்டே வருவதை நினைவில் கொள்ளுங்கள். உடல் பருமன், பெண்களின் சினைமுட்டை உற்பத்தியில் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால், சினைப் பையில் கட்டிகள் வரும் ஆபத்து அதிகம். இத்தகைய பிரச்னைகளால், 5 சதவீத பெண்கள் குழந்தைப்பேறு அடைய முடியாமல், மன அழுத்ததிற்கு ஆளாகின்றனர்.
உடல் பருமன், ஆண்களுக்கும் பல வகைகளில் பிரச்னையை ஏற்படுத்துகிறது. முக்கியமாக, விந்து உற்பத்தி குறைபாடு ஏற்படுகிறது. உடல் பருமன், பெண்களின் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜெனுக்கு எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்துவதால், குழந்தை பாக்கியம் அடைவதில் சிக்கல் நேர்கிறது. இவர்களில் சிலருக்கு, கருவுறுதல் பல காலம் கழித்து நடக்கலாம் அல்லது ஆரோக்கியமான குழந்தைக்கான வாய்ப்பு குறையலாம். அது மட்டுமல்லாமல், உடல் பருமன் உள்ளவர்களுக்கு, சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு அதிகம். இதனால், 'ப்ரீகிளாம்பியா' என்ற பாதிப்பு ஏற்பட்டு, குழந்தைப்பேறு கனவாகவே இருக்கும்.
இதற்கு என்ன செய்யலாம்? குழந்தை வேண்டி காத்திருப்பவர்கள், சீரான உணவுப் பழக்கத்தை கடைபிடித்து, உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். இதனால், தாமதமின்றி குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், ஆரோக்கியமான குழந்தையும் பிறக்கும். ஆண்களின் உடல் பருமனும், பெண்களின் கருவுறுதலை பாதிக்கும் என்பதால், ஆண்களும் உடல் எடையை பராமரிப்பது அவசியம்.
ஆ. சாந்தி,
மகளிர் நல மருத்துவர், சென்னை.
