சித்த மருத்துவம்: சினைப் பை புற்றுநோய் மாதம் - சினைப்பை புற்று: சித்தத்தில் தீர்வு
சித்த மருத்துவம்: சினைப் பை புற்றுநோய் மாதம் - சினைப்பை புற்று: சித்தத்தில் தீர்வு
PUBLISHED ON : செப் 11, 2011
சினைப் பை என்ற அந்த சின்னஞ் சிறிய பைகளுக்குள் தான் எத்தனை உயிர் அணுக்கள். இனப் பெருக்கத்தின் சூட்சுமத்தை தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கும் அதிசய சுரப்பி அது.
ஒரு பெண், கருவாக இருக்கும்போதே, சினைப் பைகள் உருவாகி விடுகின்றன. பெண்மைக்கு தேவையான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் சினைப் பையில் சுரக்கின்றன.
கர்ப்பப் பையின் இரு பக்கத்திலும் இருக்கும் சினைப் பைகளுக்குள் குழந்தை பருவத்தில், லட்சக்கணக்கான உயிரணுக்கள் குவிந்திருக்கின்றன. ஆனால், பெண் பருவமடைந்தவுடன், இந்த உயிரணுக்கள், ஆயிரமாக குறைந்து விடுகின்றன. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய்க்கு பின், இதில் ஒரு உயிரணு, சினை முட்டையாக வளர்ந்து, கர்ப்ப பைக்கு வந்து, ஆண் உயிரணுவுக்காக காத்திருக்கிறது.
ஆண் உயிரணு வந்தால், இணைந்து, கருவாக மலர்கிறது. இல்லையேல், கர்ப்பப் பையிலேயே தங்கியிருந்து, அடுத்த மாதவிடாயின் போது வெளியேறி விடுகிறது.
கரு முட்டை உருவாக, ஒவ்வொரு முறையும், மூளையின் அடிப்பகுதியில் உள்ள, 'பிட்யூட்டரி' சுரப்பி, சினைப் பையை தூண்டுகிறது. தூண்டுதலின் காரணமாக சினைப் பையில் உள்ள உயிரணு, சினை முட்டையாக வளர்கிறது.
மரபணு கோளாறு அல்லது வேறு காரணங்களால், இந்த செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு, சினைப் பை அடிக்கடி தூண்டப்பட்டால், அதில் செல்கள் சிதைந்து, மாறுபட்டு வளர்ந்து, புற்றுநோயாக மாறுகிறது.
அதற்காக, சினைப் பையில் உருவாகும் கட்டி எல்லாம் புற்றுக் கட்டி என, கணித்துக் கொள்ள வேண்டாம். அவை, நீர்க்கட்டியாகவும் இருக்கலாம்.
* இயற்கை பாதுகாப்பு
குளிர் பிரதேச நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியா போன்ற வெப்ப மண்டல பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு சினைப் பை புற்றுநோய் வருவது குறைவு . ஆனால், விஞ்ஞானத்தை துணையாகக் கொண்டு, நாம் இயற்கையையும், சுற்றுச் சூழலையும் சிதைத்து வருவதால், இயற்கைக்கு மாறாக இப்போது, சினைப் பை புற்றுநோய் அதிகரித்து வருகிறது.
பொதுவாக, மாதவிடாய் முற்றிலும் நின்ற பிறகு அல்லது நிற்கும் காலத்தில், சினைப் பை புற்றுநோய் வருகிறது. பாரம்பரியமாக, 'பி.ஆர்.சி.ஏ.1, பி.ஆர்.சி.ஏ.2' மரபணு சிதைவு இருப்பவர்களுக்கு, இளம் வயதிலேயே இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம். குழந்தையில்லாதவர்களுக்கு, இயற்கையாகவே, 'பிட்யூட்டரி' சுரப்பி, சினைப் பையை அதிகமாகத் தூண்டும். மேலும், குழந்தையின்மை சிகிச்சையில், சினைப் பையைத் தூண்டும் மருந்துகளை, நீண்டநாள் எடுப்பதால், அதுவும் சினைப் பையில் புற்று வளர காரணமாகிறது.
* அறிகுறி இருக்காது
ஆரம்ப நிலையில் இந்த நோய்க்கு அறிகுறி இருக்காது. நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருவதால் உயிர் பிழைப்போர் எண்ணிக்கை குறைவு. வயிற்று வலி, வயிற்றில் நீர்கோர்த்தல், முதுகு வலி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, மலக்கட்டு உடல் தளர்ச்சி, சோர்வு, சோம்பல் ஆகியவை வெளிப்படையாக தெரியும் அறிகுறிகள்.
புற்றுநோய்க்கு காரணமான மரபணுக்களால், ரத்தத்தில் புரதச்சத்து அதிகமாகும். இந்த புரதச் சத்தை, சி.ஏ., 125 என்ற ரத்த பரிசோதனை மூலம் கண்டுபிடித்து, புற்றுநோயை உறுதிப் படுத்தலாம். ஸ்கேன், திசு பரிசோதனை மூலமும் உறுதிப்படுத்தலாம்.
* மஞ்சளின் மகிமை
சித்த மருத்துவத்தில், 5,000 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய் குறித்து, 'தசை வன்கழலை' என்றும், 'நச்சு மறுவை' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவே மருந்து என்ற கோட்பாட்டின் படி மஞ்சள், இஞ்சி, பூண்டு போன்ற வாசனைப் பொருள்களுக்கு, புற்று செல்களை தடுத்து, கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. தினமும் உணவில் தவறாமல், மஞ்சள், இஞ்சி, பூண்டை சேர்த்துக் கொண்டால் புற்றை, விரட்டி அடிக்கலாம்.
எலுமிச்சை, ஆரஞ்சு பழங்களிலும், முட்டைகோஸ், காலி ப்ளவர் போன்ற காய்கறிகளிலும், ஆன்டி ஆக்சிடன்ட் அதிகமாக உள்ளதால் புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் உண்டு.
சேராங்கொட்டை, சித்திர மூலம் போன்ற மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து, சினைப் பை புற்றுக்கு, நல்ல தீர்வாக உள்ளது. நோயின் தன்மைக்கு ஏற்ப உலோக உப ரசப் பொருட்களில் தயாரிக்கப்படும் மருந்துகள், நித்யகல்யாணியில் இருந்து தயாரிக்கப்படும் 'வின்கிரிஸ்டின், வின்பிளாஸ்டின்' ஆகிய மருந்துகளும் நல்ல பலனைத் தருபவை.
சிந்தில் கொடி, அமுக்கரா போன்ற மூலிகைப் பொருள்களும் சிறந்த ஆதரவு மருந்தாக உள்ளன.
நம் முன்னோர் காட்டிய வாழ்க்கை நெறிமுறைகளை கடைப்பிடித்து, நமது பாரம்பரிய உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் நம்மை நெருங்காது.
