PUBLISHED ON : அக் 10, 2014
சாதாரணமாக பருவ நிலை மாறும் போது நமது உடலில் ஒரு சில பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக குளிர் காலங்களில் இருமல், ஜலதோஷம் ஏற்பட்டு மிகுந்த தொந்தரவை தரும்.
குறிப்பாக தொண்டையில் புண் வந்தால், அரிப்பு, எரிச்சல் வந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு ஒரு சில உணவுகளை தவிர்த்தால், தொண்டை புண்ணை விரைவில் சரிசெய்யலாம்.
நா ஊற வைக்கும் உணவுகள்: நாவை ஊற வைக்கும் உணவுகளான புளி, ஊறுகாய் மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் தொண்டையில் அரிப்பு, வலியும் ஏற்படும். அத்தகைய உணவுகளை தொண்டையில் புண் இருக்கும் போது சாப்பிட வேண்டாம். வினிகர் கலந்திருக்கும் உணவுகளும் தொண்டைக்கு பெரும் தொந்தரவை தரும்.
காரமான உணவுகள்: நிறைய பேர், 'சளி மற்றும் ஜலதோஷம் இருக்கும் போது, காரமான உணவுகளை சாப்பிட்டால் குணமாகிவிடும்' என்று நினைக்கின்றனர். ஆனால் அவற்றை தொண்டையில் புண் இருக்கும் போது மட்டும் சாப்பிட்டுவிடக் கூடாது. ஏனெனில் இதனால் தொண்டையில் உள்ள புண் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விடும். ஆகவே மிளகாய், கிராம்பு, மிளகு மற்றும் பல பொருட்கள் சேர்த்துள்ள உணவுகளை இந்த நேரத்தில் தவிர்ப்பது நல்லது.
பால்:
தொண்டையில் புண் இருக்கும் போது ஒரு டம்ளர் சூடான பால் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அவை மிகவும் ஆபத்தானது. எனவே பால் பொருளை இந்த சமயத்தில் தவிர்க்க வேண்டும்.
வறட்சியான உணவுகள்: வறட்சியான உணவுகளை தொண்டையில் புண் இருக்கும் போது சாப்பிட வேண்டாம். இதனால் விழுங்குவதற்கு கடினமாக இருப்பதோடு, அதிகமான வலியையும் ஏற்படுத்தும். ஆகவே நட்ஸ், பிஸ்கட், தானியங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டாம். வேண்டுமெனில் நீரில் ஊற வைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால், விழுங்குவதற்கு எளிதாக இருப்பதோடு, வலி ஏற்படாமலும் இருக்கும்.
காபைன்: சூடான காப்பி குடித்தால் தொண்டைக்கு இதமாகத் தான் இருக்கும். ஆனால் அது நிரந்தரமாக அல்ல. சிறிது நேரம் கழித்து காபைனில் உள்ள பொருள், தொண்டையில் அரிப்பை ஏற்படுத்தி, வலியை உண்டாக்கும்.
ஆகவே காபைனால் ஆன பொருட்களை தவிர்ப்பது நல்லது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக சூடாக இஞ்சி டீயை போட்டு குடிக்கலாம். இதனால் தொண்டை கரகரப்புடன், வலியும் இருக்காது.
ஆல்கஹால்:
சிலர் தொண்டை புண்ணின் போது, ஆல்கஹாலை எடுத்து கொள்வர். ஏனெனில் அவை தொண்டைக்கு சற்று இதத்தை தரும். ஆனால் அவை அந்த இடத்தில் மேலும் புண்ணை பெரிதாக்கும்.

