கனவு தவிர்... நிஜமாய் நில்! - புதிய நபர்... புதிய உணர்வுகள்!
கனவு தவிர்... நிஜமாய் நில்! - புதிய நபர்... புதிய உணர்வுகள்!
PUBLISHED ON : ஜூன் 16, 2019

பிரசவத்திற்கு பின், 10 பெண்களில், ஒருவருக்கு மன அழுத்தம் வருகிறது; பிரசவத்திற்குப் பின், மன அழுத்தம் வருவது, உடனடியாக கவனிக்க வேண்டிய பிரச்னை; இது, குழந்தையின் தாய்க்கு மட்டுமல்ல, தந்தைக்கும், குழந்தையின் அருகிலேயே இருக்கும் நெருங்கிய ரத்த சொந்தங்களுக்கும், மன ரீதியிலான பிரச்னைகள் வரலாம்.
புதிதாக, ஒரு நபர் வீட்டிற்கு வந்திருக்கிறார் என்றால், யாராவது ஒருவர், எல்லா நேரமும் அருகிலேயே இருக்க வேண்டியுள்ளது; குழந்தையைச் சுற்றியே அனைத்தும் நடக்க வேண்டிய கட்டாயம் வரும். அந்த நேரத்தில், இது போன்ற மன அழுத்தம் வருவது இயல்பு.
எப்படி கண்டுபிடிப்பது?
தாய்க்கு மன அழுத்தம் வந்தால், குழந்தையுடன் இயல்பான பாசப் பிணைப்பு இருக்காது; எப்போதும் சோர்வாகவே இருப்பர்; யாருடனும் பேசப் பிடிக்காது; எல்லா நேரமும் சோகமாகவே உணர்வர்; எதிலும் ஆர்வம் இருக்காது; அயர்ச்சியாக இருக்கும்; இரவில் துாக்கம் வராது; காலையில் துாக்கம் வரும்; கவனம் இருக்காது; எந்த முடிவும் எடுக்க முடியாது.
எதனால் இப்படி?
குடும்ப ஆதரவு இல்லாமல் இருப்பது; கணவனுடனான உறவில் சிக்கல்; கணவன் அக்கறையில்லாமல் இருப்பது; கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தம்; நெருங்கிய உறவினர்களை இழப்பது.
இது போன்ற நிலையில், 'இந்தக் குழந்தையே வேண்டாம்' என்று கத்துவது; எழுந்து ஓட முயற்சிப்பதும் நடக்கும்.
முறையான மருத்துவ சிகிச்சை செய்தால், 'என் குழந்தை இது' என்ற உணர்வு இயல்பாக வந்து விடும். அதன் பின், எல்லா பிரச்னைகளும் சரியாகி விடும். ஹார்மோன்களின் மாற்றமும், மன அழுத்தத்திற்கு காரணமாகலாம். மனம் விட்டு பேசும் அளவிற்கு சூழ்நிலை அமைவது, நம் சமுதாயத்தில் சிரமமாகவே உள்ளது.
இருந்தாலும், ஆரோக்கியமான உணவு, பிடித்த விஷயங்களை செய்வதற்கு நேரம் ஒதுக்குவது, நடைபயிற்சி, உடற்பயிற்சி, துாக்கம் என்று எல்லா நேரமும் குழந்தை பராமரிப்பில் இருந்து, குழந்தையின் தாய்க்கு சற்று ஓய்வு கொடுத்தால், இது போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.
டாக்டர் கே.தென்றல், மகப்பேறு மருத்துவர், ரெயின்போ மருத்துவமனை, சென்னை. 044 - 40122444
