கனவு தவிர்... நிஜமாய் நில்!: ஐ.வி.எப்., முறை நிரந்தர தீர்வு இல்லை!
கனவு தவிர்... நிஜமாய் நில்!: ஐ.வி.எப்., முறை நிரந்தர தீர்வு இல்லை!
PUBLISHED ON : ஆக 12, 2018

ஐ.வி.எப்., - இன் விட்ரோ பெர்டிலைசேஷன் எனப்படும் செயற்கை கரு தரித்தல் குறித்த அடிப்படையான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
செயற்கை கரு தரிப்பு முறையில், திறமையான மருத்துவரின் பங்கு எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு, சமமான பங்கு கரு உருவாக்கம் செய்யும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் உண்டு.
குழந்தை உருவாகாமல் இருப்பதற்கு, உடல்ரீதியில் என்ன பிரச்னை என்பதை, மகப்பேறு மருத்துவர் மூலமாக, பரிசோதனைகளின் வழியே கண்டுபிடிக்க இயலும்.
பிரச்னைகளின் அடிப்படையில், தேவையான சிகிச்சை செய்து, சரி செய்யவும் அவர்களால் இயலும். ஐ.வி.எப்., முறையில், கரு முட்டையையும், விந்தணுவையும் இணைத்து, கரு உருவாக்கம் செய்யும் போது, ஆரோக்கியமான கருவாக உருவாக்கம் செய்வது, நன்கு பயிற்சி பெற்ற, தொழில்நுட்ப வல்லுனர்களின் கையில் தான் உள்ளது.
விந்தணுவின் இயக்கம் நன்றாக இருப்பது மட்டும் ஆரோக்கியம் இல்லை; தலை, உடல், வால் என, அதன் ஒவ்வொரு பாகத்திலும் பிரச்னை இல்லாமல், ஆரோக்கியமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்து, தேர்வு செய்ய வேண்டும்.
அதேபோல, கரு முட்டையை எடுத்த பின், நியூக்ளியஸ் இல்லாமல், முழு வளர்ச்சி அடையாமல் இருக்கும் கருவை தவிர்ப்பதும் முக்கியம். நன்கு வளர்ச்சி அடைந்த கரு முட்டை, விந்தணுவுடன் சேரும் போது மட்டுமே, கருவாக வளர்ச்சி அடையும்.
சில பெண்களுக்கு கரு முட்டையே இருக்காது. வயது ஆக ஆக, அதன் எண்ணிக்கையும், தரமும் குறைந்து கொண்டே வரும். சில பெண்களுக்கு, 30 வயதிலேயே கரு முட்டையை உருவாக்கும் தன்மையை, கருக்குழாய் இழந்து விடும். ஆண்களுக்கும் இளம் வயதிலேயே விந்தணுக்களின் உற்பத்தி இருக்காது.
கரு முட்டை, விந்தணு இல்லாத போது அல்லது தரமாக இல்லாத போது, அவர்களின் கரு முட்டை, விந்தணுவை பயன்படுத்துவது, கரு உருவாக்கத்திற்கு உதவாது. அப்படிப்பட்டவர்கள், மற்றவர்களிடம் தானமாக பெற்ற கரு முட்டை, விந்தணுவை பயன்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்வர்.
ஐ.வி.எப்., செய்யும் அனைவருக்கும் குழந்தை உருவாகி விடும் என்றும் சொல்ல முடியாது; குழந்தை பெற்றுக் கொள்ள இது ஒரு முறை அவ்வளவு தான்.
கரு உருவாக்கம் செய்யும் போது, எவ்வளவு கரு முட்டை, விந்தணு கிடைக்கிறதோ, அதை பொறுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட கருவை உருவாக்கி, இரண்டு கருக்களை கருப்பையில் வைத்து விடுவோம்; மீதி இருப்பதை பதப்படுத்தி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம். முதல் முறையில், இரண்டு கருக்களை போட்டாலும், 40 - 50 சதவீதம் தான் வெற்றி பெற வாய்ப்பு உண்டு.
கர்ப்பப்பையின் மேல் அடுக்கான, எண்டோமெட்ரியத்தில் பதியும் தன்மையைப் பொறுத்தே இது அமையும்.
ஐந்து சதவீதத்திற்கு குறைவாகவே இரண்டும் தனித்தனி கருவாக வளர்ந்து, இரட்டை குழந்தைகள் பிறக்கும். முதல் முறையில் கரு உருவாகாமல், கருச்சிதைவு ஏற்பட்டால், பதப்படுத்தி பாதுகாத்த கருவை மீண்டும் வைக்கலாம்.
இரண்டு முறைக்கு மேல் ஐ.வி.எப்., வெற்றி பெறவில்லை என்றால், சிகிச்சை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
டாக்டர் மதுப்ரியா
கருவுறுதல் ஆலோசகர்.
madhupriya@novaivffertility.net

