கனவு தவிர்... நிஜமாய் நில்! - தலைமைப் பொறுப்பு என்னுடையது!
கனவு தவிர்... நிஜமாய் நில்! - தலைமைப் பொறுப்பு என்னுடையது!
PUBLISHED ON : டிச 23, 2018

சீனாவில் நடந்த உலக அழகி போட்டியில், 12வது போட்டியாளராக, கலந்து கொண்டேன். உலக அழகி பட்டத்தை, என்னால் வெல்ல முடியவில்லை.
ஏமாற்றம் இருந்தாலும், இன்று வரை வழக்கத்தில் இருக்கும், ஒரே தொன்மையான மொழியான தமிழை, தாய்மொழியாக கொண்டு, திருச்சியில் பிறந்த நான், பன்முகத் தன்மை கொண்ட, நம் நாட்டின் சார்பில், உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியான விஷயம்.
எதிர்பாராத தருணத்தில், என் ஏழாவது வயதில், என் அப்பா எங்களை அனாதையாக விட்டுச் செல்லும் வரையில், மகிழ்ச்சியான முழுமையான குழந்தைப் பருவம் என்னுடையது. அதன்பின், என் வாழ்க்கை தலைகீழாக மாறியது.
அம்மாவும், தம்பியும், நானும் தனியாக செய்வதறியாது நின்றோம். பள்ளியில், தேசிய மாணவர் படையான, என்.சி.சி.,யில் சேர்ந்தேன். அதன்பின், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டுகளிலும், மோட்டார் பைக் ஓட்டுவதிலும், ஆர்வம் அதிகமானது.
முழுமையான குடும்ப சூழல் இல்லாவிட்டால், வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும்; அதே நேரம், ஒரு தனி மனுஷியால், என்ன விதமான மாற்றங்களைக் ஏற்படுத்த முடியும் என்பதும் எனக்குத் தெரியும்.
என் வாழ்க்கை பாடத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வது, எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கவுரவம்.
வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும், செய்த தவறுகளில் இருந்தும், நான் கற்று கொண்ட வையே, இந்திய அழகி பட்டத்தை வென்று, உலக அழகிப் போட்டியில், என் நாட்டின் சார்பாக கலந்து கொண்டது வரை, நான் எட்டியிருக்கும் நிலைக்கு முழு காரணம்.
ஏழு வயதில், என் அப்பா எங்களை விட்டு பிரிந்தது, என்னை வலிமையான, தன்னம்பிக்கை மிக்க, தனித் தன்மையுடைய, சுதந்திரமான பெண்ணாக மாற்றி உள்ளது.
என் அப்பாவின் இடத்தை முழுமையாக நிரப்பியது மட்டுமல்ல, சுயசார்புள்ள பெண்ணாக தன்னை மாற்றிக் காட்டினார் என் அம்மா.
ஒரு பெண் நினைத்தால், எந்த சூழலையும் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறலாம் என்பதை, என்னுடைய நிஜ வாழ்க்கை உதாரணமான, 'சூப்பர் பெண்'ணான என் அம்மாவைப் பார்த்துக் கற்றுக் கொண்டேன்.
என் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை, நான் எடுத்துக் கொண்டேன். என் தம்பிக்கு வாழ்க்கையில் முன்னுதாரணமாக இருப்பதோடு, என் அம்மாவிற்கு, எல்லாவிதத்திலும் பக்க பலமாக இருக்கிறேன்.
அடைய விரும்பும் லட்சியங்களைப் பற்றியே கனவு கண்டு கொண்டிருந்தால், சாதிக்கும் வரை, நம் கனவு நம்மை துாங்க விடாது, என்று சொன்ன, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எனக்கு மிகவும் பிடித்தவர்.
அனு கீர்த்திவாஸ், மிஸ் இந்தியா - 2018, திருச்சி

