PUBLISHED ON : மார் 03, 2019

* கண் எரிச்சல், கை கால் எரிச்சல் மற்றும் உடல் முழுவதும் அனலாக எரிகிறது. இதற்கு என்ன காரணம்? தவிர்க்க என்ன செய்யலாம்?
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முறையை சித்த மருத்துவம் வலியுறுத்தி வருகிறது. வாரம் இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. 100 மில்லி நல்லெண்ணெய்யில் 20 எண்ணம் சீரகம், 4 எண்ணம் மிளகை போட்டு, சூடாக்கி சீரகம் சிவந்த பின்பு எண்ணெய்யை அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டி, சூடு சற்று குறைந்ததும் தலை, நெற்றி, காது மடல்; பிடரி மற்றும் உடல் முழுவதும் தேய்த்து 15 அல்லது 20 நிமிடங்கள் ஊற வைத்து குளித்து வரலாம். இதனால் உடல் சூடு, கண் எரிச்சல் நீங்கும் அல்லது சித்த மருந்து கடைகளில் கிடைக்கும் சீரகத் தலைத்தையும் வாங்கி குளித்து வரலாம்.
* வெயில் காலம் ஆரம்பித்தாலே எனது மகன் ஒழுங்காக சாப்பிடமாட்டேன் என்கிறான். அவனுக்கு பசி எடுப்பதற்கு ஏதேனும் மருந்துகள் இருக்கின்றனவா?
குழந்தைகளுக்கு பசியைத் தூண்டி செரிமான சக்தியை அதிகப்படுத்த சித்த மருந்து கடைகளில் கிடைக்கும் ஜாதி சம்பீரக் குழம்பு என்ற மருந்தை காலை அல்லது இரவு படுக்கும் பொழுது குழந்தையின் நாக்கில் 2, 3 நாட்கள் தடவி வர நன்கு பசி எடுக்கும். கருப்பு திராட்சை, பேரிச்சம்பழம் கொய்யாப்பழம், பப்பாளிப்பழம் அடிக்கடி கொடுத்தாலும் பசி நன்கு எடுக்கும்.
அப்படியும் பசி எடுக்கவில்லை என்றால் பெருங்காயம், வெள்ளைப்பூண்டு, ஓமம் ஆகியவற்றை லேசாக தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து 5 முதல் 10 மில்லி அளவு கொடுக்க பசி எடுக்க ஆரம்பிக்கும்.
* கோடை ஆரம்பித்தால் சிறுநீர் எரிச்சல் மற்றும் சிறுநீர் கடுத்து இறங்குதல் போன்ற பிரச்னைகள் எனக்கு ஏற்படுகிறது. இதற்கு என்ன செய்யலாம்?
இதற்கு சோற்றுக்கற்றாழை நல்ல மருந்தாகும். சோற்றுக்கற்றாழை மடலின் தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் ஏழு முறை நன்கு கழுவி விட வேண்டும். 35 கிராம் சோற்றுக் கற்றாழை சதைக்கு அரை லிட்டர் மோர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்து லேசாக பெருங்காயம் போட்டு தாளித்து சாப்பிட சிறுநீர் எரிச்சல், அதனால் ஏற்படும் வயிற்றுவலி குணமாகும்.
* பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லதா அல்லது ஜூஸ் செய்து சாப்பிடுவது நல்லதா?
வெயிலில் வெளியே செல்ல வேண்டும் என்றால் நறுக்கி வைத்த பழங்களை அப்படியே சாப்பிட்டுவிட்டு செல்வது நல்லது. இதனால் பழங்கள் செரிமான மண்டலத்தில் நிலைத்து நின்று கொஞ்சம் கொஞ்சமாக சக்தி தரும்.
அதேநேரம் வெளியில் சென்று விட்டு களைப்பு மற்றும் தாகத்துடன் வீட்டுக்குத் திரும்பினால் பழச்சாறு சாப்பிடுவது நல்லது. அது உடனடியாக நமக்கு ஆற்றலைத் தரும். முதியவர்கள் வெளியில் செல்லும் பொழுது ஆரஞ்ச் ஜூஸ் அல்லது எலுமிச்சம் பழம் ஜூஸ் ஏதேனும் ஒன்றை பாத்திரத்தில் எடுத்துச் சென்று அருந்துவது நல்லது. இதனால் தாகம், நாவறட்சி நீங்கும்.
- சித்த மருத்துவர், ஜெ. ஜெயவெங்கடேஷ், மதுரை
98421 67567
