தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சூட்சுமத்தை சொல்லிக் கொடுங்கள்

சூட்சுமத்தை சொல்லிக் கொடுங்கள்

சூட்சுமத்தை சொல்லிக் கொடுங்கள்


PUBLISHED ON : ஏப் 20, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 20, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பணம்



பணப் பிரச்னை என்று, யாரிடம் பேசினாலும் ஒன்று தெளிவாக தெரியும். கண்டிப்பாக அவர்களுக்கு கடன்கள் நிறைய இருக்கும். அதுவும், அதிக வட்டி கடன், பல இடங்களில் வைத்திருப்பர். கடன் அடைக்க, கடன் வாங்கிக் கொண்டேயிருப்பர். எப்படி இந்த கடன்களை அடைத்து மீள்வது என்ற திட்டம் இல்லாமல் இருப்பர்.அவசியமில்லாத செலவுகளுக்கு, சின்ன கடன்கள் என்று ஆரம்பித்து, அத்தியாவசிய செலவுகளுக்கு பெரிய கடன்கள் என்று வந்து நிற்கும். ஏதோ ஒன்று நிகழ்ந்து, எல்லாம் சரியாகி விடும் என்று வியாக்கியானம் சொல்வர். இதை தீர ஆராய்ந்தால், வரவு- செலவு- கடன் சுழற்சியை ஒரு சூதாட்டமாகப் பார்ப்பர். போட்டதை பிடித்து விடலாம் என்று, கைக்கு வந்ததை செய்ய ஆரம்பிப்பர். இது தான், அவர்களை அதள பாதாளத்தில் தள்ளி விடுகிறது.

நம்மில் பலருக்கு மெல்ல மெல்ல அடியெடுத்து முன்னேறுவது என்ற எண்ணமே ஆகாது. ஒரே அடியில், மேலே போக என்ன வழி என்று யோசிப்பர்.சேமிப்பை விட, எதிலாவது பெரிதாக பணம் சேர என்ன வழி என்று பார்த்து பல, 'ஸ்பெகுலேஷன்' துறைகளை தேர்ந்தெடுப்பர். அதிக வட்டி எங்கு கிடைக்கும் என்று பார்ப்பர். தெரியாத தொழிலில் பணம் போடுவர். தெரிந்தவர் என்று நம்பி கடன் கொடுப்பர். விளம்பரங்கள் பார்த்து ஏமாறுவர். சீக்கிரம் பெரிதாக சம்பாதித்து விட்டு, உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிடணும் என்று பேசுவர். அடிப்படையில், இந்த பேராசை குணம் தான், பணம் சேர்ப்பதை சூதாட்டமாக பார்க்க வைக்கும்.

இந்த ஆசையைத் தான், நம் நுகர்வுச் சந்தை விரும்புகிறது. ஒரு புறம் உங்களிடம் பொருட்கள் விற்க வேண்டும்; இன்னொரு புறம் அதற்கு கடன் தர வேண்டும். ஆசைப்பட்டால் உடனே எல்லாம் கிடைக்கும். வங்கிகள் ஓடி வந்து, எல்லாவற்றுக்கும் கடன் கொடுக்கின்றன.வீடு, கார், மொபைல் என்று துவங்கி, எல்லா பொருட்களுக்கும் கடன் வசதி உண்டு. கிரெடிட் கார்ட் உண்டு. அதிலும், குறைந்தபட்சத் தொகை கட்டுங்கள் போதும் என்றால் என்ன பொருள்? உங்களை கடன்காரர் ஆக்கத் தான்.

ஒரு கட்டத்தில், இந்த கடன்களை கட்ட முடியாமல் தான், தனி நபர் தரும் அதிக வட்டிக்கு பழக்கமாகின்றனர். பிறகு தான் கந்து வட்டி, மீட்டர் வட்டி என்று போக வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு ஏற்படுகிறது. கடன் கழுத்தை நெறிக்கும் நேரம் தான், வாழ்வின் எல்லா தவறான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

சொத்தை குறைந்த விலைக்கு விற்பது, அடமானம் வைத்த நகை மூழ்கி போகுதல், வீட்டின் முக்கிய பொறுப்புகள் செய்ய இயலாமல் இருப்பது என்று, தோல்விகள் தொடர ஆரம்பிக்கும். ஆரம்பித்த இடம், ஒரே பாடலில் கோடீஸ்வரனாகும் ஆசையில். முடியும் இடம் வாழ்க்கையில் தோற்று நிற்பது.

இதில் பரிதாபம் என்னவெனில், இவை அனைத்து நலிந்த பிரிவினரைத் தான் அதிகம் பாதிக்கிறது. வெளி நாடுகளில், கீழ் நிலை வேலை வாங்க, சொத்தை விற்று பணம் கொடுத்த பல விவசாயிகளை பார்க்கிறோம். சீட்டுக் கம்பெனிகள் கம்பி நீட்டும் போதெல்லாம், நடுத்தெருவில் நிற்பவர்கள், நடுத்தர மற்றும் அடித்தள வர்க்கத்தினர் தான்.

அதிக வட்டிக்கு போக நினைக்கும் அனைவரும் தங்களை கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது தான்: 'இந்த வட்டி தொடர்ந்து நிலையாய் கிடைத்தால், எல்லா கோடீஸ்வரர்களும், தொழிலதிபர்களும் இங்கு பணத்தை போட்டு, இரட்டிப்பாக்கி, வேறு எந்த தொழிலும் செய்யாமல் இருப்பரே... ஏன் அப்படி செய்யவில்லை?'

சேமிப்பு முக்கியம் என்பது போல, எங்கு எப்படி சேமிக்கிறீர்கள் என்பதும் முக்கியம். குறைந்த வட்டி வரும் நிலையான நம்பகமான இடங்கள் பாதுகாப்பானவை; அதிக வட்டி அதிக ஆபத்து. இது பால பாடம். நிறைய பணம் உள்ளது என்றால், நிலமாக, தங்கமாக முதலீடு செய்தது போக, மிச்சத்தை உங்களுக்கு நன்கு தெரிந்த தொழிலில் முதலீடு செய்யுங்கள். குறைந்த சம்பாத்தியம் என்றால், எந்த பெரிய செலவு வந்தாலும், சமாளிக்கவல்ல சேமிப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு வேளை எதிர்பாராத சூழலில், கடன் வாங்க நேரிட்டால், அதை சரியாக திருப்பிக் கட்டுதல் முக்கியம்.வங்கிகள், கடன் அளிக்கும் மனிதர்களிடம், நிறுவனங்களிடம், நல்ல பெயர் இருப்பது உங்களுக்கான பாதுகாப்பு கவசம். சிபில் ரேட்டிங் பாதிக்கப்படாமல் இருப்பது, உங்களால் குறைந்த வட்டி கடன்களை வாங்க தொடர்ந்து தகுதிப்படுத்துவதற்கு உதவும்.

அதிக வட்டி மூலம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, அதிக வட்டி கடன்களில் மாட்டிக் கொள்ள வேண்டாம். அதாவது, 100 ரூபாய் சம்பாதித்தால், 10 ரூபாய் சேமிப்பு, 10 ரூபாய் முதலீட்டிற்கு என்று வாழ்ந்தால், கடன் சுறாக்களிடம் மாட்டத் தேவையில்லை. பெரும் செல்வந்தர்கள் கூட, தற்கொலைகள் செய்யும் அவலம், அதிக வட்டி கடன்களால் தான் நிகழ்கின்றன.

பணம் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையை மட்டும் குழந்தைகளிடம் விதைக்காதீர்கள். பணத்தை பாதுகாத்து, அதன் மூலம் முதலீடுகள் செய்து, அதன் மூலம் ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்வது எப்படி என்று சொல்லிக் கொடுங்கள்.

பெற்றோர், பிள்ளைகளுக்கு சொல்லித் தருவதைப் போல, நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு சொல்லித் தர வேண்டும். சம்பளம் தருவதைப் போல, சம்பளத்தை பாதுகாத்து, முறையாகப் பெருக்கும் சூட்சமத்தையும் சொல்லிக் கொடுத்தால், நம்மைச் சேர்ந்த எல்லாருக்கும் நன்மை தானே?

டாக்டர் ஆர். கார்த்திகேயன்

கட்டுரையாளர்,

உளவியல் மற்றும் நிர்வாக ஆலோசகர்

gemba.karthikeyan@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us