தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/100 ஆண்டுகளாக இருக்கும் 'பிளாஸ்மா தெரபி'!

100 ஆண்டுகளாக இருக்கும் 'பிளாஸ்மா தெரபி'!

100 ஆண்டுகளாக இருக்கும் 'பிளாஸ்மா தெரபி'!


PUBLISHED ON : ஏப் 21, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 21, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த, 2008 - 09ல், 'ஹெச்1 என் 1' எனப்படும், பன்றி காய்ச்சல் பாதிப்பின் போது, ரத்தத்தில் உள்ள, 'பிளாஸ்மா'வை செலுத்தி, சிகிச்சை செய்யப்பட்டது. இச்சிகிச்சையை, தொற்று பாதித்து, மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தவர்களுக்கு செய்ததில், நல்ல பலன் இருப்பது தெரிந்தது.

ரத்தத்தில் இருக்கும் மஞ்சள் நிற திரவமான, 'பிளாஸ்மா'வில், புரதத்தால் ஆன, நோய் எதிர்ப்பு அணுக்கள் இருக்கும். இதை தனியே பிரித்து, பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தும் போது, வைரஸ் கிருமிகளை அழிக்கும் என்று கூறப்படுகிறது.

ஆராய்ச்சி கழகம்



இது, 100 சதவீதம் உறுதியான சிகிச்சை இல்லை என்றாலும், நல்ல பலன் கிடைக்கும் என, உலகம் முழுதும் மருத்துவ விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு, இதன் மூலம் தீர்வு கிடைக்கும் என, சீனா, அமெரிக்காவில் ஆராய்ச்சி முழு வேகத்தில் நடக்கிறது.

நம் நாட்டிலும், பிளாஸ்மா ஆராய்ச்சிக்கு, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், திருவனந்தபுரம் சித்திரை திருநாள் மருத்துவ கல்லுாரி மருத்துவ மையத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது.தமிழகத்திலும், அரசு மருத்துவமனைகளில் இது குறித்த ஆய்வை நடத்த விண்ணப்பித்து இருப்பதாக, சுகாதார துறை செயலர், பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

'ஹெபடைட்ஸ் பி' வைரஸ் பாதிப்பால், கல்லீரல் செயலிழந்த நோயாளிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு முன்பே, 'பிளாஸ்மா' சிகிச்சை செய்த, சென்னையை சேர்த்த, டாக்டர் ஜாய் வர்கீஸ் இது குறித்து கூறியதாவது: கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு, திரும்பவும், 'ஹெபடைட்ஸ் பி' வைரஸ் பாதிப்பு வரக் கூடாது. என்ன செய்வது என்று யோசித்த போது, 'பிளாஸ்மா தெரபி' பற்றி ஆராய்ச்சி செய்தேன். ஹெபடைட்ஸ் பி வைரஸ் வராமல் இருக்க, அதற்கான தடுப்பு ஊசி போட்டிருந்தால், அவர்களின் பிளாஸ்மாவில், நோய் எதிர்ப்பு அணுக்கள் நிறைய உருவாகி இருக்கும்.

குழந்தை பருவத்திலேயே இந்த தடுப்பு மருந்து போட்டு விட்டால், ரத்தத்தில் உருவாகும் பிளாஸ்மாவில், வாழ்நாள் முழுவதும், நோய் எதிர்ப்பு அணுக்கள் உருவாகியபடியே இருக்கும்.இதனால், குறிப்பிட்ட இந்த வைரஸ் அவர்களின் உடம்பிற்குள் போனாலும், அவற்றால் உயிர் வாழ முடியாது; அழிந்து விடும்.ஹெபடைட்ஸ் பி வைரஸ் கிருமியால், 'சிரோசிஸ்' என்ற கல்லீரல் செயலிழக்கும் நிலை, கேன்சர் வந்து, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தாலும், அவர்களின் ரத்தத்தில் இந்த வைரஸ் இருக்கும்.நோயாளியின் நெருங்கிய உறவினருக்கு, ஹெபடைட்ஸ் பி வைரஸ் தடுப்பு மருந்து கொடுத்தோம். ஒரு மாதத்தில், அவரின் பிளாஸ்மாவில் நோய் எதிர்ப்பு அணுக்கள் பெருகியது.

ரத்த தானம்



இதை எடுத்து, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவருக்கு, குறிப்பிட்ட இடைவெளியில் மூன்று முறை செலுத்தியதில், அவரின் ரத்தத்தில், வைரஸ் தொற்று முழுதும் அழிந்து விட்டது. 'பிளாஸ்மா' இருப்பது, சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து ரத்த தானம் பெறுவதை போன்றது தான்.இது புதிய முறை அல்ல. கடந்த, 100 ஆண்டுகளாக, 1918லிருந்தே நடைமுறையில் உள்ளது. நவீன மருத்துவ தொழில்நுட்பத்தில் எளிதாக செய்ய முடிகிறது.

இந்த சிகிச்சையை முதலில் செய்தது சீனா. ஏற்கனவே, 2002ல் இதே குடும்பத்தை சேர்ந்த, 'சார்ஸ்' வைரஸ் பாதித்த போது, பிளாஸ்மா சிகிச்சை செய்தனர். மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும், அதிலிருந்து மீண்டவர்களின் ரத்தத்தில், நோய் எதிர்ப்பு அணுக்கள் அதிகமாக இருப்பது தெரிந்தும், ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு செலுத்தியதில், நல்ல பலன் இருப்பது தெரிந்துள்ளது.

குறிப்பிட்ட வைரஸ் தொற்றிற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் வரை தான், இந்த தெரபி பயன்படும்.'ஹெபடைட்ஸ் பி' வைரசிற்கு, தற்போது சக்தி வாய்ந்த மருந்துகள் உள்ளதால், பிளாஸ்மா தெரபி தேவைப்படவில்லை.தற்போதைய நிலையில், கொரோனா ஆராய்ச்சியை பார்க்கும் போது, அடுத்த ஓராண்டில் தடுப்பு மருந்து வந்து விடும் என்றே தோன்றுகிறது.ஆனால், இவை எல்லாம் ஆபத்தான நிலைக்கு செல்பவர்களுக்கு மட்டுமே. நோய் பரவாமல் இருக்க, தனி மனித ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதே பாதுகாப்பான வழி.

டாக்டர் ஜாய் வர்கீஸ்,

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்,

சென்னை

+919566062200


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us