PUBLISHED ON : மார் 31, 2015

1 'நெப்ரோடிக் சிண்ட்ரோம்' என்றால் என்ன?
ஊதுகாமாலை, என்பதன் ஆங்கில மருத்துவப் பெயர் அது. சிறுநீரகத்தில் உள்ள, 'குளோமெரலஸ்' என்ற உறுப்பில் ஏற்படும் கோளாறுகளால் கை, கால்கள், முகம் முழுவதும் நீர் கோர்த்து வீங்கி விடுவதே ஊதுகாமாலை.
2 அதில், வகைகள் உள்ளனவா?
இரண்டு, வகைகள் உள்ளன. ஒன்று, மிகக் குறைந்த பாதிப்புள்ளது; மற்றொன்று, குறிப்பிடும்படியான பாதிப்புள்ளது. முதல்நிலைக்கு, ஸ்டீராய்டு மருந்துகளே போதுமானவை. இரண்டாம் நிலையை, ஸ்டீராய்டு மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாது. எனவே,
தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது.
3ஊதுகாமாலை வரக் காரணம்?
உணவில் உள்ள புரதம் 'ஆல்புமினாக,' ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். அந்த ரத்தம், சிறுநீரக 'குளோமெரலசை' அடையும் போது, 'ஆல்புமின்' வெளியேற்றப்பட்டால், ஊதுகாமாலை ஏற்படும்.
4நோயின் அறிகுறிகள்?
முகம், கண் இமை, கால்கள், தொடை, வயிறு மற்றும் பிறப்புறுப்பு ஆகியவை அதிக வீக்கம் அடையும். ஊதுகாமாலை தாக்கியுள்ள குழந்தைகளின் சிறுநீர், நுரை நுரையாக வெளியேறும்.
5 வீக்கம் ஏற்படுவது ஏன்?
'ஆல்புமின்' எனும் புரதச்சத்து, ரத்தத்தில் சரியான அளவு இருக்க வேண்டும். ஊதுகாமாலை இருந்தால், சிறுநீர் வழியாக 'ஆல்புமின்' வீணாகி, ரத்தத்தில் அதன் அளவு குறைந்து நீர், உப்பு முதலியன ரத்த குழாய்களில் இருந்து வெளியேறி, பல இடங்களில் தேங்கி, வீக்கமாக மாறிவிடுகிறது.
6 ஊதுகாமாலைக்கு என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன?
நோய் எதிர்ப்பு அணுக்களினால் இந்த நோய் ஏற்படலாம் என, கருதப்படுவதால், நோய் எதிர்ப்பு அணுக்களின் வீரியத்தை குறைக்க, 'ஸ்டீராய்டு' மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. 'ஸ்டீராய்டு' மருந்துகளுக்கு இந்த நோய் கட்டுப்படவில்லை என்றால், நோயின் தாக்கத்தை குறைக்க, வீரியமுள்ள மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
7 ஊதுகாமாலை உள்ளோர் சாப்பிட வேண்டிய உணவுகள்?
தண்ணீர், உப்பு இவற்றை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். 'ஆல்புமின்' நிறைய வெளியேறினால், முட்டை வெள்ளைக்கரு எடுத்து கொள்ளலாம். வழக்கமான உணவுகளை சாப்பிடலாம்.
8ஒருமுறை ஊதுகாமாலை நோய் தாக்கினால் மறுபடி தாக்குவதற்கு வாய்ப்புண்டா?
ஊதுகாமாலை தாக்கிய சில குழந்தைகளுக்கு, பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் கழித்து மீண்டும் வரலாம். ஆனால் வாய்ப்புகள் குறைவு. ஊதுகாமாலை திரும்ப திரும்ப வரும் குழந்தைகளுக்கு, வயது அதிகரிக்கும்போது, நோய் வரும் இடைவெளி அதிகரித்து, 12அல்லது 18 வயதில், வராமல் நின்றுவிடும்.
9 ஊதுகாமாலை தாக்கினால், சிறுநீர் கழிப்பது குறைகிறதே, ஏன்?
ஊதுகாமாலை தாக்கினால், சிறுநீர் வழியாக, 'ஆல்புமின்' வெளியேறி விடும். அதனால், ரத்தத்திலுள்ள நீர், உப்பு முதலியன, நுரையீரலை சுற்றி உள்ள உறை, குடல்களை சுற்றி உள்ள உறை ஆகிய இடங்களில் தேங்கிவிடுகின்றன. அதனால் சிறுநீர் கழிப்பது குறைகிறது.
10 உடல் உறுப்புகளை அழித்துவிடும் நோய்களில் ஊதுகாமாலையும் ஒன்றாமே!
நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்கள் (பலவிதமான வெள்ளை அணுக்கள்) நோய்க் கிருமிகளை எதிர்க்கின்றன. அது போல நம் உடல் உறுப்புகளுக்கு எதிராகவே எதிர்ப்பு அணுக்கள் ஏற்பட்டு, நம் உடல் உறுப்புகளை அழித்துவிடும். இது போன்ற நோய்கள் பல உள்ளன. அதுபோல் ஊதுகாமாலை இருக்கலாம்
என சந்தேகிக்கப்படுகிறது.
- எஸ்.பாலமுருகன்
பொது மருத்துவர்
98941 51906
