தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்


PUBLISHED ON : பிப் 10, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 10, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

1கர்ப்பமாய் இருக்கும் போது, சூடான பானங்களை தவிர்க்கச் சொல்வது ஏன்?

உணவுப் பொருட்களை சூடாக சாப்பிடும் போது, உணவுக்குழாய் புண்பட்டு, 'அல்சர்' வர வாய்ப்பிருக்கிறது. கர்ப்ப காலங்களில் இப்பிரச்னை ஏற்பட்டால், அது குழந்தையின் வளர்ச்சிக்கு ஆரோக்கியம் தராது என்பதால், சூடான பானங்களை தவிர்க்கச் சொல்கின்றனர்.



2கர்ப்ப காலத்தில், அடிக்கடி சளி, இருமல் ஏற்படுவது எதனால்?


கர்ப்ப காலத்தில், உடலில் ஏற்படும் நீர் வறட்சியை சமாளிக்க, குளிர்ச்சியான உணவுகளை மனம் தேடும். அந்த சமயத்தில், கட்டுப்பாடு இல்லாமல், அவ்வுணவுகளை சாப்பிடுவதால் சளி, இருமல் ஏற்படும் வாய்ப்புண்டு.

3கார்போஹைட்ரேட் உணவுகள்/புரத உணவுகள் - கர்ப்ப காலத்திற்கு எது சிறந்தது?

குழந்தையின் வளர்ச்சிக்கு கார்போஹைட்ரேட்டுகள் மிக அவசியம். மேலும், நம் உடலிலுள்ள ரத்தச் சிவப்பணுக்கள் மற்றும் மூளைச் செல்கள் இயங்குவதற்கு கார்போஹைட்ரேட்டுகளுடன், புரதசத்தும் தேவை. எனவே, இவ்விரண்டையும் சம அளவில் எடுத்துக் கொள்வது நல்லது!



4ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அல்லது உப்பின் அளவு, கர்ப்பிணிகளுக்கு திடீரென கூடுவது ஏன்?


சிலருக்கு உடல்பருமன் காரணமாக இப்படி நிகழலாம்; சிலருக்கு மரபணுக்களில் உள்ள குறைபாடுகளால் இப்பிரச்னை ஏற்படும். இதனால், கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு உண்டாகும் வாய்ப்புண்டு. இச்சூழலில்தான், குறைப் பிரசவம் அல்லது கருப்பையில் குழந்தை இறந்து போதல் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படும்.

5கர்ப்ப காலத்தில் கால்கள் வீக்கமடைவது ஏன்?

இச்சமயத்தில், கால்களிலிருந்து இதயத்திற்கு திரும்பும் ஆக்ஸிஜன் இல்லா ரத்தம், குழந்தையின் வளர்ச்சி காரணமாக தடைபடும். இதனால், ரத்தநாளங்களில் தேக்கம் ஏற்பட்டு, பாதங்களில் நீர் தேங்கும்; கால்களில் வீக்கம் ஏற்படும்! இதனால், தாய்க்கு எந்த பிரச்னையும் ஏற்படாது!

6கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி உண்டாகும் வயிற்று வலி...?

கர்ப்ப காலத்தில், குழந்தையின் வளர்ச்சிக்கு தக்கவாறு, கருப்பையானது விரிவடையும். வயிற்றிலுள்ள குழந்தை அசையும் போதெல்லாம், அடிவயிற்றில் பிடிப்புடன் கூடிய வலி ஏற்படும். இது சகஜமானதே; பயப்படத் தேவையில்லை!



7சரி... முதுகு வலி அடிக்கடி வருகிறதே!


கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு நிலையின் போதும், குழந்தையின் உடல் உறுப்புகள் வளர்ச்சியடைவதால், வயிறு பெரிதாக பெரிதாக, அதை தாங்கும் முதுகில், வலி அதிகரித்தபடி இருக்கும். இத்தகைய வலியை, பிரசவம் முடியும் வரை அனுபவித்து தான் ஆக வேண்டும்.

8அது என்ன 'மார்னிங் சிக்னெஸ்?'

பொதுவாக, வயிற்றிலிருக்கும் குழந்தை, அதற்கு தேவையான சத்துக்களை தாயிடமிருந்து உறிஞ்சிக் கொள்ளும். இதனால், தாயின் உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டு, சில நேரங்களில் மயக்கம் வருவது போல் தோன்றும்; எதைச் சாப்பிட்டாலும், வாந்தி வருவது போல் இருக்கும்; மாதவிடாய் வருவது போன்ற உணர்வும் எற்படும்! காலைநேரங்களில் ஏற்படும் இவ்வுணர்ேவ, ஆங்கிலத்தில், 'மார்னிங் சிக்னெஸ்' என்றழைக்கப்படுகிறது.

9கர்ப்பிணிகள் மல்லாக்கப் படுக்கக் கூடாதா?

கண்டிப்பாக கூடாது! குழந்தையின் எடை, தாயின் ரத்தக்குழாய்களை அழுத்தினால், தாய்க்கு

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். தாயின் மூச்சுக் காற்று அளவு குறையும்போது, அது குழந்தையின் உடலையும் தாக்கும். எனவேதான், கர்ப்பிணிகளை ஒருக்களித்த நிலையில் படுக்க வேண்டும் என, மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

10கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்யலாமா?

சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனையின்படி செய்யலாம். எளிமையான வீட்டு வேலைகளை செய்வதே ஒரு பயிற்சிதான்; எனினும் சுகப்பிரசவம் ஆக, மூச்சுப் பயிற்சி மற்றும் எளிமையான யோகாசனங்கள் கைகொடுக்கும்.

- கோ.சாந்தி,

தாய்சேய் நல மருத்துவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us