தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பத்துகேள்விகள் பளிச் பதில்கள்

பத்துகேள்விகள் பளிச் பதில்கள்

பத்துகேள்விகள் பளிச் பதில்கள்


PUBLISHED ON : ஜன 21, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 21, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1நெஞ்செரிச்சல் என்பது ஒரு நோயா?

ஏறக்குறைய நெஞ்செரிச்சல் என்பது ஒரு நோய்தான்! ஆரம்பத்தில் இதன் பாதிப்பு பெரியளவில் இருக்காது என்றாலும், நாள்பட்ட நெஞ்செரிச்சல், இரைப்பையிலும், உணவுக்குழாயிலும் புண்களை உருவாக்கி, அல்சருக்கு வழிவகுக்கும். இரைப்பையில் உருவாகியுள்ள புண்களை கவனிக்காவிட்டால், அது புற்றுநோயாக மாறவும் வாய்ப்புண்டு!

2நெஞ்செரிச்சல் ஏற்படுவது எப்படி?

உணவுக்குழாயும், இரைப்பையும் சந்திக்கும் இடத்தில் உள்ள சதைகள், சுருங்கி விரிவடைந்து, செரிமானத்திற்கு வரும் உணவும், செரிமான அமிலமும் மேல் நோக்கி செல்லாமல் இருக்க உதவுகின்றன. இவை அதிகமாக தளர்வடைந்தால், இரைப்பையில் உள்ள உணவு மற்றும் அமிலம் பின்னோக்கி வரும். அப்போதுதான், நெஞ்செரிச்சல் எனும் அவஸ்தை ஏற்படும்.

3நெஞ்செரிச்சலை தூண்டும் காரணிகள் என்னென்ன?

அளவுக்கு அதிகமாக உணவு, மதுபானம், குளிர்பானம் உட்கொள்ளுதல், உணவு உண்டவுடன் உறங்குதல், வறுத்த, பொறித்த உணவுகளை அதிகமாக சாப்பிடுதல் மற்றும் அடிக்கடி உணவகங்களில் சாப்பிடுதல் உள்ளிட்ட காரணங்களால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

4குழந்தைகளுக்கும் இப்பிரச்னை ஏற்படுமா?

குழந்தைகளுக்கு, இரைப்பையின் அளவு மிகச்சிறியதாக இருப்பதாலும், அளவுக்கு அதிகமாக பால் குடிப்பதாலும் நெஞ்செரிச்சல் ஏற்படும். இதை தவிர்க்க, அளவான உணவு மற்றும் பாலை, சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும். பால் கொடுத்தவுடன், குழந்தைகளை படுக்க வைக்கக் கூடாது!

5நெஞ்செரிச்சலுக்கான அறிகுறிகள்?

நெஞ்செரிச்சல் இருப்பின் நடுமார்பின் அடிப்பகுதியிலும், பின்பகுதியிலும் வலி மேலேறி வரும். பெரும்பாலும், உணவு உண்டபின்னரே வலி வரும். இரவு படுத்தவுடன் அவ்வப்போது வலி தலை காட்டும். இதனால், இரவு தூக்கம் கலையும்! தொடர்ந்து நெஞ்செரிச்சல் இருப்பின், தொண்டையில் புண் ஏற்படும்.

6உணவுப்பழக்கம் நெஞ்செரிச்சலுக்கு காரணமாகுமா?

பொதுவாக, உண்ணும் உணவின் அளவு, செரிமான செயல்முறையின் மீது வெகுவான தாக்கங்களை உண்டாக்கும். இரண்டு வேளைகளுக்கு நடுவே, அதிகமான நேரம் இருந்தால், அதிகமாக உண்ணத் தோன்றும். இதனால், செரிமான அமைப்பின் மீதான பளு அதிகரிக்கும். இதனால், அமில சுரப்பு அதிகரித்து நெஞ்செரிச்சல் உண்டாகும்.

7வயிறு நிறைய சாப்பிட்டு தூங்குவது நெஞ்செரிச்சலை தருமா?

பொதுவாக, வயிறு நிறைய சாப்பிட்டால், ஒரு மணிநேரத்திற்குள் தூங்கி விடுவோம். தூங்கும்போது, ஒட்டுமொத்த உடல் செயல்முறைகளும், மெதுவாகவே நடக்கும். இதனால், செரிமான பிரச்னைகளும் ஏற்படும்.

8காபி நெஞ்செரிச்சலின் தோழனா?

காபி அல்லது காபீன் கலந்த பானங்கள், 'காஸ்ட்ரிக் ணீஏ' அளவை மாற்றி, அதிகப்படியான அமில சுரப்பை உண்டாக்கும் என்பதற்கு, குறிப்பிடும் வகையிலான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனாலும், நெஞ்செரிச்சலுக்கு

முதல் சிகிச்சை, காபீன் கலந்த பானங்களை தவிர்ப்பதே!



9உணவு உண்டு முடித்தபின் தண்ணீர் அருந்துவதுதான் சிறந்ததா?


செரிமானத்திற்கு முதல் படியே எச்சில் தான்! உணவை உடைப்பதற்கான 'என்சைம்கள்' மட்டுமல்லாமல், செரிமான என்சைம்களின் சுரப்பை ஊக்குவிக்கவும், செரிமான செயல்முறைக்கும் எச்சில் உதவும்! உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால், எச்சில் நீர்த்து போகும். இது, செரிமானத்தை சிரமமாக்கி விடும்.

10நெஞ்செரிச்சல் வராமல் தடுப்பது எப்படி?

அளவான உணவுமுறையும், உறங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன் உணவு உண்ணும் பழக்கமும் அவசியம்! துரித உணவுகளோடு, குளிர்பானங்கள் மற்றும் அமிலத்தன்மையுள்ள உணவுகளையும் குறைத்துக் கொள்வது நல்லது. குடிப்பழக்கம், புகைப்பழக்கம் அறவே கூடாது.

- வி.பழனி,

உடல் பருமன் அறுவை சிகிச்சை நிபுணர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us