PUBLISHED ON : செப் 25, 2022

குழந்தை பாக்கியம் தான் குடும்ப பாக்கியம். அது இப்போதெல்லாம் பலருக்கு தள்ளிப் போகிறது. அது, சந்தோஷத்தையும் அள்ளிப் போகிறது. இதற்கான காரணங்கள், குழந்தையை மடியேந்த மருத்துவம் எப்படி கைகொடுக்கிறது என்பது குறித்து, சென்னை அண்ணாநகர், கே.எச்.எம்., மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் இளவரசியுடன் பேசினோம்.
குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து உள்ளதா, ஏன்?
முன்பெல்லாம் உரிய வயதில் திருமணம் நடந்தது. உடனே குழந்தைகளை பெற்றனர். உறவினர்கள் குழந்தைகளை சீராட்டி வளர்த்தனர். இப்போது, இருவரும் படித்து பணிக்குச் சென்று, சம்பாதிப்பதற்குள் வயது கடந்து விடுகிறது. பருவத்தில் பயிர் செய்வது போல, 30 வயதுக்குள் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்வது தான் பெண்களுக்கு நல்லது.
வயது கூடினால் என்னென்ன பிரச்னைகள் வரும்?
பெண்களுக்கு தரமற்ற கருமுட்டை உற்பத்தி, உடல் பருமன், மன அழுத்தம், நீர்க்கட்டிகள் உருவாவது, கருக்குழாய் அடைப்பு, கருப்பை அடைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம்.
கருவுற காத்திருக்கும் பெண்களுக்கான ஆலோசனை?
ஹோட்டல் உணவு, துரித உணவு, 'ஜங்க்' உணவு, எண்ணெய் பண்டங்களை தவிருங்கள். சத்தான வீட்டு உணவை உண்ணுங்கள். இரவில் தாமதமாக உண்ண வேண்டாம். நீர்க்கட்டி பிரச்னைகள் உள்ளோர், 'பேக்கரி' உணவுகளை தவிருங்கள்.
நீர்க்கட்டிகள் ஏன் உருவாகின்றன?
பெண்களுக்கான எல்.எச்., ஈஸ்ட்ரோஜன் உள்ளிட்ட ஹார்மோன்கள் சுரப்பதில் மாறுதல் இருந்தால் நீர்க்கட்டிகள் உருவாகும். இவை கர்ப்ப பைக்குள், கர்ப்ப பைக்கு வெளியில், சினைப்பையில், சினைக்குழாயில் என பல இடங்களில் உருவாகும். நீர்க்கட்டிகளால் முறையற்ற மாதவிடாய், தரமற்ற முட்டை, கருக்கலைவுகள் ஏற்படலாம். வழக்கமான மருத்துவத்தில் தீர்வு ஏற்படாவிட்டால், கருக்குழாய் சோதனை செய்ய வேண்டி வரும்.
கருக்குழாய் சோதனை என்பது என்ன?
கருக்குழாயில் ஏதேனும் அடைப்பு இருந்தால், விந்தணு, கருமுட்டையை அடையாது. இதனால், கரு உருவாகாது. கருக்குழாய் அடைப்பை 'லேப்ராஸ்கோபி மையோமெக்டமி' எனும் சிறு துவார முறையில் சரி செய்வோம். அதேபோல், கர்ப்பப்பை கட்டி, ஜவ்வடைப்பு போன்ற பிரச்னைகளையும் ஒரே நாளில் சரி செய்யலாம்.
ஆண்களின் பிரச்னைகள் பற்றி?
ஆண்களுக்கு மது, புகைப் பழக்கம், துாக்கமின்மை, மன அழுத்தம், நீரிழிவு நோய் இருந்தால் விந்தணு உற்பத்தி குறையும். விந்தணு நகர்ந்து கருமுட்டையை அடைவதிலும் சிக்கல் ஏற்படும். இதற்கு 'ஐ.வி.எப்.,' முறையில், கருவை உருவாக்கி, கருப்பைக்குள் வைத்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.
தம்பதியருக்கு நீங்கள் கூறும் ஆலோசனை?
குழந்தை பெறும் வரை இரவுப் பணிகளையும், நெடும்பயணத்தையும் தவிருங்கள். சத்தான உணவு உண்ணுங்கள். உடற் பயிற்சி, யோகா, தியானம் செய்யுங்கள். உறவினர்கள் கூறும் குறைகளால் மன உளைச்சல் அடையாமல், மனம் விட்டு பேசுங்கள். வாரம் ஒருமுறையாவது வெளியில் செல்லுங்கள். பாடல் கேட்பது, படிப்பது, கலைகள், கைத்தொழிலில் ஈடுபாடு கொள்ளுங்கள்.
தற்போதைய அறிவியல் வளர்ச்சியில், 99 சதவீதம் கருவுற செய்யலாம். அத்துடன் மருத்துவமும், மனோதத்துவமும் இருக்கும் வரை, மகத்துவங்கள் சாத்தியமே!
- நமது நிருபர்
