PUBLISHED ON : பிப் 07, 2020

விபத்துகளில், தேசிய அளவில் முதலிடத்தில் இருப்பது தமிழகம். ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது, சற்றே ஆறுதலான
விஷயமாக இருந்தாலும், உயிரிழப்பவர்களில், 60 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள், 17 - 45 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
'ஹெல்மெட்' அணியாமல் இருப்பது, அணிந்தாலும் அதிலுள்ள, 'பெல்டை' போடாமல் போவது, 'சீட் பெல்ட்' அணியாமல் காரில் செல்வது ஆகியவற்றால், விபத்து காலங்களில், தலையில் அடிபடும் வாய்ப்புகள் உண்டாகும்.
நினைவு இழப்பு
தலையில் அடிபடுவதால், மூளைக்கும், கபாலத்திற்கும் நடுவில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, நினைவிழப்பு உட்பட மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். நம் நாட்டில், விபத்தில் அடிபட்ட, 20 சதவீதம் பேருக்கு, மூளையில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது.இந்த ரத்தக்கசிவு, மூளை முழுவதுமோ, ஒருபக்க மூளையிலோ, மூளையின் உள்ளே மற்றும் வெளியிலோ ஏற்படலாம்.
இதனால், கோமா நிலை என்று சொல்லப்படும், நினைவிழக்கும் தன்மை முழுவதுமாகவோ, குறைவாக வந்து, வந்து போவதோ நடக்கலாம். நினைவிழக்கும் நிலை ஏற்படுவதற்கு,
இது முக்கிய காரணம்.விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு, முதலுதவி செய்தவுடன், தலையில் ஸ்கேன் செய்து,ரத்தக்கசிவு உள்ளதா என்பதை உறுதி செய்வது அவசியம்.
தலையில் அடிபட்டவுடன் மயக்கம் வருவது, நினைவிழப்பது போன்றவை இருந்தால் மட்டும், ஸ்கேன் செய்தால் போதும் என்ற தவறான எண்ணம் உள்ளது.சிலர், விபத்தில் அடிபட்டவுடன், யாருடைய உதவியும் இல்லாமல், தாங்களாகவே மருத்துவமனைக்கு வந்திருப்பர். ஆனால், சிறிது நேரத்தில், நடந்த அனைத்தையும் மறந்து, 'நான் எங்கே இருக்கேன்... எப்படி இங்கு வந்தேன்...' என்று கேட்பர்.
'ஸ்கேன்' அவசியம்
இன்னும் சிலருக்கு, விபத்து நடந்ததும், வலிப்பு வந்திருக்கும். பார்த்தவர்கள், 'அடிபட்டவுடன் வலிப்பு வந்தது... சிறிது நேரத்தில், அவராகவே எழுந்து உட்கார்ந்து விட்டார்' என்று சொல்வர். சம்பந்தப்பட்டவருக்கு, இது எதுவும் தெரியாது.
சில பேருக்கு, எந்த அறிகுறியும் இல்லாமல், சிகிச்சை முடிந்து சென்ற பின், தலைவலி என்று வருவர். ஸ்கேன் செய்து பார்த்தால், மூளையில் ரத்தக்கசிவு இருக்கும். முதலிலேயே ஸ்கேன் செய்திருந்தால், தலைவலி, வீக்கம் வராமல் தடுத்திருக்கலாம்.சிலருக்கு, மூக்கு, காதிலிருந்து ரத்தக்கசிவு, தலை, முகப் பகுதியில் பலத்த அடி இருக்கலாம்.
இது போன்ற நிலையில், நோயாளி, சுய நினைவுடன் தான் இருக்கிறார் என்று, சி.டி., ஸ்கேன் செய்யாமல் விடக் கூடாது.இவையெல்லாம் பொதுவான விஷயங்கள். ஆனால், அடி பட்டவரை, டாக்டர் பரிசோதிக்கும் போது, சில அறிகுறிகளை வைத்து, ரத்தக்கசிவு இருக்கலாம் என்பதை சொல்லி விட முடியும்.முதியவர்களுக்கு, மூளை சுருங்கி, கபாலம், மூளைக்கு நடுவில், இடைவெளி அதிகம் இருக்கும். இவர்களுக்கு தலையில் அடிபட்டால், அந்நேரத்தில் ரத்தக்கசிவு இல்லாவிட்டாலும்,நாளடைவில் ஏற்படலாம்.
பக்கவாத அறிகுறிகளோடு வருவர். ஆனால், பக்கவாதம் கிடையாது. விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சி, மெதுவாக ரத்தக்கசிவை ஏற்படுத்திஇருக்கும்.
பொன்னான நேரம்
விபத்தில் அடிபட்டவரை, ஒரு மணி நேரத்திற்குள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று, முதலுதவி செய்ய வேண்டும். கழுத்து, கால் என்று, உடம்பின் எந்த பாகத்திலும் எலும்பு முறிவு ஏற்படலாம். எனவே, துாக்கும் போது, தலை பக்கம் ஒருவரும், கால் பக்கம் ஒருவரும் நின்று துாக்கி, ஆம்புலன்சில் வைக்க வேண்டும்.தண்ணீர் குடிக்க வைப்பது, ஆம்புலன்ஸ் வரும் வரை உட்கார வைத்திருப்பது, சுற்றி கூட்டமாக நிற்பது தவறு. அடிபட்டவர், அதிர்ச்சியில் இருப்பார். எனவே, ரத்த அழுத்தம் குறைவதற்கும், மூளைக்கு போதுமான அளவு ரத்தம் செல்லாமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
காற்றோட்டமாக படுக்க வைத்து, குடிப்பதற்கு எதுவும் தராமல், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்வது தான் பாதுகாப்பானது. ரத்தக் கசிவு எந்த அளவு இருக்கிறது, கோமா நிலை எப்படி உள்ளது, மூளை எந்த அளவு பாதித்து உள்ளது என்பதைப் பொறுத்தே, நோயாளியை காப்பாற்றுவது சாத்தியம்.
தலையில் அடிபடாமல் இருக்க...
போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது, டூ -- வீலரில் மூன்று பேர் போவதை தவிர்ப்பது, பின்னால் அமருபவரும் ஹெல்மெட் போடுவது, கார் பயணத்தில், அனைவரும் சீட் பெல்ட் அணிவது, 'ஏர் பேக்' இருக்கும் காரைப் பயன்படுத்துவது அவசியம்விருப்பமான கார் நம்பருக்கும், நிறத்திற்கும் கூடுதல் பணம் செலவு செய்ய தயாராக இருக்கும் நாம், பாதுகாப்பு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் தந்தால், தலையைப் பாதுகாக்கலாம்.
டாக்டர் சியாம் சுந்தர் கிருஷ்ணன்
மூளை, தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்,
காவேரிமருத்துவமனை, சென்னை.
044 - 4000 6000, 99620 72279

