4,448 வித நோய்களுக்கு சித்தாவில் தீர்வு! - சொல்கிறார் டாக்டர் முத்துகுமார்
4,448 வித நோய்களுக்கு சித்தாவில் தீர்வு! - சொல்கிறார் டாக்டர் முத்துகுமார்
PUBLISHED ON : பிப் 04, 2020

தாம்பரம் சானடோரியத்தில், தேசிய சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளது. தேசிய அளவில், ஆயுஷ் மருத்துவத்தை ஊக்குவிக்கும், ஏழு கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இம்மருத்துவமனையை, 2004ல், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் திறந்தார். துவக்கத்தில், 80 படுக்கை வசதிகளுடன் கூடிய, உள்நோயாளிகள் பிரிவு இயங்கியது. நாளடைவில், தரமான மருத்துவ சேவை கிடைத்ததால், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், உள்நோயாளிகள் பிரிவு, 120 படுக்கைகள் உயர்த்தப்பட்டு, தற்போது, 200 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனை குறித்து, அதன் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.ஜே.முத்துக்குமாரிடம் பேசியதிலிருந்து...
தேசிய சித்த மருத்துவமனையில், என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன?
இங்கு, 38 வித நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. 2004ல், நாள் ஒன்றுக்கு சிகிச்சைக்காக, 100 நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைக்கு வந்தனர். இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, தற்போது, 2,000க்கும் மேற்பட்ட நோயாளிகள், தினமும் வந்து கொண்டிருக்கின்றனர்.மூட்டு வலி, மூட்டு வாதம், நரம்பு நோய்கள், தோல் மற்றும் குழந்தை நோய்கள், ஈரல் சம்பந்தப்பட்ட நோய்கள், பக்கவாதம்என, நாள்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் பற்றி?
பொது மருத்துவ சிகிச்சைகளை தவிர, சித்த மருத்துவத்தின் சிறப்பு மருத்துவ முறையான, வர்ம மருத்துவத்தால், எலும்பு தேய்மானம் உட்பட பல நோய்களுக்கும், சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. அட்டை விடுதல், காரணுால் சிகிச்சை உட்பட பல்வேறு அறுவை சிகிச்சைகளும், நோய்களுக்கேற்ப வழங்கப்படுகின்றன.
காரணுால் சிகிச்சையால், மூலம், பவுத்திரம் போன்ற நோய்களுக்கும், அட்டை விடுதல் சிகிச்சையால், நரம்பு சுருண்டு கொள்ளுதல், நாள்பட்ட புண்களுக்கும், சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இது தவிர, புற்றுநோய், மகப்பேறின்மை, உடல் பருமன், கல்லடைப்பு போன்றவற்றிற்கும், சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும், 60 வயதிற்கும் மேற்பட்ட முதியோருக்கு, மதியம், 2:00 மணிமுதல் மாலை, 4:00 மணிவரை, மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.
நோய்களுக்கான மருந்துகள் என்ன?
நோய் பாதிப்பிற்கேற்ப சூரணம், மாத்திரை, லேகியம், நெய் வகைகளும், 'டெங்கு' காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது. மொத்தம், 32 விதமான உள் மருந்துகள், நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.புறமருந்துகளை பொருத்தவரை, பற்று, ஒற்றடம், தொக்கணம், எண்ணெய்கள் தடவி மசாஜ் செய்வது என, 32 விதமான சிகிச்சைகள் பின்பற்றப்படுகின்றன. புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க, சிறப்பு வார்டு உள்ளது. இந்நோய்க்கு மருந்தாக, ரசகந்தி மிளகு, வல்லாதி லேகியம் போன்ற கடுமையான மருந்துகள் வழங்கப்படுகின்றன.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரக்கூடிய, பசியின்மை, உடல்சோர்வு, உடல் எடை குறைவு ஆகியவற்றிற்கு, ஆங்கில மருத்துவத்துடன் இணைந்து, சித்த மருத்துவ சிகிச்சைகளை அளிக்கிறோம்.இதனால், நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையில், நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது.
என்ன விதமான வளர்ச்சி பணிகள் நடக்க உள்ளன?
காரணுால், அட்டை விடுதல் சிகிச்சைகளுக்கு, தனியே அறுவை சிகிச்சை அரங்கங்கள் உள்ளன. தற்போது, 30 கோடி ரூபாய் மதிப்பில், கூடுதல் மருத்துவமனை கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.புதிய கட்டடம், மூன்றடுக்கு கொண்டது. அதில், கீழ் தளத்தில், 26க்கும் அதிகமான ஆலோசனை அறைகள், முதல் தளத்தில், 32 விதமான புறநோய் மருத்துவப் பிரிவுகளுக்கும், தனித்தனி சிகிச்சை அறைகள் வர உள்ளன. இரண்டாம் தளத்தில், நிர்வாக அலுவலகங்கள்,500 பேர் அமரக் கூடிய, கருத்தரங்க அறையும் வர உள்ளன.
இக்கட்டடம், விரைவில் திறக்கப்பட உள்ளது. இது தவிர, தனியாக, மருந்து செயல் நிலையங்களுக்கான ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. 'ஆயுஷ்' அமைச்சகம் உருவாக்கப்பட்ட பின், முதுகலை பட்டமேற்படிப்பான, எம்.டி., பிரிவில், புறமருத்துவம், யோக மருத்துவம், வர்ம மருத்துவம் ஆகியவை, புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், தாங்கள் கண்டுபிடிக்கும் மருந்துகளை, சோதனை செய்ய, தனியே ஆய்வுக் கூடங்கள் உள்ளன. தயாரிக்கும் மருந்துகளை, விலங்குகளுக்கு அளித்து சோதனை செய்ய, 15 லட்சம் ரூபாய் செலவில், ஆய்வக வசதிகளும் உள்ளன.
புதிய மருந்துகள் கண்டுபிடிப்புகள் பற்றி?
சித்த மருத்துவ நுால்களின் படி, சோரியாசிஸ், குழந்தைகள் மற்றும் முதியோர்களை பாதிக்கும் கரப்பான் நோய் உட்பட, 4,448 விதமான நோய்களால், மனிதர்கள் பாதிக்க வாய்ப்புள்ளது.இவை அனைத்திற்கும் மருந்துகள் உள்ளன. ஆண்டுதோறும் பல புதிய மருந்துகள், இங்கு பயிலும் மாணவர்களால் கண்டுபிடிக்கப்படுகின்றன .ஒவ்வொரு மாணவர்களும், அவர்கள் கண்டுபிடிக்க உள்ள, புதிய மருந்துகளை, மருத்துவமனையில் நடக்கும், நியமன நெறிமுறை கமிட்டியிடம் சமர்ப்பித்து, அனுமதி பெற்று, ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
அந்த ஆராய்ச்சிகளின் முடிவுகள், கட்டுரைகளாக வெளியிடப்படுகின்றன.டெங்குவிற்கு நிலவேம்பு குடிநீரை பருகலாம் என, கிண்டி, கிங் இன்ஸ்டியூட் நிறுவனமும், எங்கள் மருத்துவமனையும் இணைந்தே, முதலில் கண்டுபிடித்தன. அதன் பின்பே, மக்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
மருந்து நுால்கள் வெளியீடு பற்றி...
சித்த மருந்துகளை கையாள்வது மற்றும் நோயாளிகளை அணுகுவது குறித்தும், வர்ம மருத்துவம் குறித்தும், பதிவு பெற்ற மருத்துவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், இரண்டு புத்தகங்கள் மருத்துவமனை சார்பில், ஆயுஷ் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கையால், பலதரப்பட்ட புதிய நோய்கள் குறித்து, இங்கு பயிலும் மாணவர்கள் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப புதிய மருந்துகளை கண்டுபிடிக்கவும், சிகிச்சை அளிக்கவும் முடிகிறது. இதனால், அவர்கள் சர்வதேச அளவில், சிறந்த மருத்துவர்களாக உருவெடுக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.
நோயற்றவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?
சித்த மருத்துவத்தின் முதல் கோட்பாடு, 'உணவே மருந்து; மருந்தே உணவு' என்பதாகும். 30 வயது வரை, எந்த உணவையும், நம் உடல் எடுத்துக் கொள்ளும்.அதன்பின், உணவில் கட்டுப்பாடு அவசியம். மரச்செக்கால் தயாரிக்கப்பட்ட நாட்டு எண்ணெய்களை பயன்படுத்தினாலே, உடல் நலனை எப்போதும் பாதுகாக்கலாம். தினசரி, உடற்பயிற்சியுடன் கூடிய, 20 முதல் 30 நிமிடங்களாவது, நடைபயிற்சியில் ஈடுபட வேண்டும்.
- நமது நிருபர்

