PUBLISHED ON : நவ 25, 2020

மன அழுத்தம், செரிமான மண்டலத்தை பாதிக்கும் என்று சொன்னால், நம்புவதற்கு சிரமமாக உள்ளது; ஆனால், உண்மை அது தான். மனதின் உணர்வுகளுக்கும், செரிமான மண்டலத்திற்கும் அந்த அளவு நெருங்கிய தொடர்பு உள்ளது.
மன அழுத்தம், கோபம், எரிச்சல், பதற்றம் போன்ற எதிர்மறை உணர்வுகள் இருந்தால், அதிக அளவு அமிலம் சுரக்கும். இதற்கு, அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்ட ஆதாரங்கள் உள்ளன.
அமில சுரப்பை அதிகரிப்பது மட்டுமல்ல, மன அழுத்தம், துாக்கம் வராமல் செய்யும். இரவில், குறைந்தது ஆறு மணி நேரம், தொடர்ச்சியாக ஆழ்ந்த துாக்கம் இல்லாவிட்டால், செரிமானம் பாதிக்கும்.
'இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்' - ஐ.பி.எஸ்., வயிறு வலித்து மலம் கழிப்பது, வயிறு பொருமலாக இருப்பது, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்னைகள் இருக்கும். காரணத்தைக் கண்டறிய, பரிசோதனை செய்தாலும், முடிவுகள், 'நார்மலாகவே' வரும்.
ஆனாலும், பிரச்னை இருந்தபடியே இருக்கும். பரிசோதனை முடிவுகள் சாதாரணமாக இருந்தும், பிரச்னைகள் இருந்தால், மன அழுத்தத்தால் ஏற்பட்ட கோளாறாக இருக்கலாம் என, புரிந்து கொள்ள வேண்டும்.
மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயங்களை கண்டறிந்து, அதைத் தவிர்ப்பது ஒன்று தான் நிரந்தர தீர்வை தர முடியும்.
எப்படி தவிர்ப்பது?
படுத்ததும் சில நிமிடங்களில் துாக்கம் வரவில்லை. இசை கேட்பது, யோகா, தியானம் என்று இயல்பான செயல்களாலும், துாக்கம் வரவில்லை, தினசரி ஒழுங்கு முறையால் செரிமான பிரச்னைகளை கட்டுப்படுத்த இயலவில்லை என்ற நிலையில், நிச்சயம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
ஆனால் மருந்து, மாத்திரைகளால் மட்டும் செரிமான பிரச்னைகளை சரி செய்ய முடியாது. மருத்துவ ஆலோசனை, உணவுப் பழக்கத்தில் மாற்றம், மன அழுத்தத்தை குறைப்பது, ஆழ்ந்த துாக்கம் என்று அனைத்தும் சேர்ந்தால் மட்டுமே, செரிமானப் பிரச்னைகளை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
டாக்டர் பி.செந்தில்நாதன்,
ஜீரண மண்டல சிறப்பு மருத்துவர்,
ஜெம் மருத்துவமனை, சென்னை.
044 - 6166 6666
