PUBLISHED ON : மார் 16, 2025

மின்சார செலவில்லாத இயற்கை குளிர் சாதனம் புங்கன் மரம். வீடுகளிலும், சாலைகளிலும் சாதாரணமாக காணக்கூடிய மரம் இது. இதன் இலை, பூ, காய், வேர், பருப்பு, அதனுள் இருக்கும் எண்ணெய் யாவும் மருத்துவ பயன் உடையவை.
புங்கன் தைலம் தடவி வர தீராத நோய் பிணிகள் தீரும். அரிப்பு, தடிப்பு, ரணம் என தொடர்ந்து தொந்தரவு தரும் தோல் நோய்கள் அனைத்தும் பூரண குணமாகும். கரப்பான், கிருமித் தொற்று, சர்க்கரை நோய், மேக நோய் போன்றவற்றால் தோலில் ஏற்படும் நாள்பட்ட நமைச்சல், புண், புரைகள், ரணங்களை ஆற்றும் சக்தியுடையது. தோல் நோய்களை தீர்க்கும் முக்கிய மருந்துகளில் ஒன்றாக சித்த மருத்துவத்தில் புங்கன் தைலம் உள்ளது.
பாதிக்கப்பட்ட இடத்தில் மூன்று மாதங்கள் வரை தடவினால் குணம் தெரியும். இத்-துடன் புங்கைப் பூ சூரணத்தையும் உள் மருந்தாக சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் காணலாம். தோல் நோய்களுக்கு மட்டுமல்லாமல், சர்க்கரை கோளாறுக்கும் சிறந்த துணை மருந்தாக பயன்படுகிறது.
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது, தோல் நோய்களை போக்குவது, ரணங்களை ஆற்றுவது, உடலுக்கு பலத்தை கூட்டுவது என்று பல நன்மைகளை சேர்த்தே செய்கிறது. மாமிச உணவை தவிர்ப்பதும், புளியின் அளவை குறைப்பதும் மிகவும் முக்கியம். இருவேளை சுத்தமாக குளித்து, பருத்தி, லினன் ஆடைகளை அணிவதும் நன்மை தரும்.
சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நலங்கு மாவு குளியல், எண்ணெய் சத்து அதிகம் உள்ள மென்மையான மூலிகை சோப்பு, டி.எப்.எம்., அளவு 75 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள சோப்புகளை பயன்படுத்தலாம். புண் பட்டவர் புங்கை கண்டு ஆற்றலாம்.
டாக்டர் மூலிகைமணி அபிராமி,
சித்த மருத்துவர், சென்னை96000 10096, 9003031796 consultabirami@gmail.com