PUBLISHED ON : மே 21, 2017
கருணைக்கிழக்கு, சுவையிலும், மருத்துவக் குணத்திலும் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, மூல நோய்க்கு மிகச்சிறந்த மருந்து உணவாக பயன்படுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவர்களும், கருணைக்கிழங்கை சாப்பிடலாம். மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்பு உட்பட சத்துகள் உள்ளன. கருணைக்கிழங்கு சாப்பிடுவதால், கபம், வாதம், ரத்த மூலம் ஆகியவை குணப்படுத்துகின்றன. பசியை தூண்டி, இரைப்பைக்கு பலம் சேர்க்கும். மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதை முற்றிலும் குணப்படுத்த விரும்பினால், கருணைக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர நிவாரணம் கிடைக்கும்.
உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது. பெண்களின் வெள்ளைப்பாடு உபாதைக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. உடல் வலி இருந்தால், குணப்படுத்தக் கூடிய ஆற்றல் இருக்கிறது. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில், கருணைக் கிழங்கு லேகியம் பிரசித்தி பெற்றது.
கல்லீரலுக்கு சுறுசுறுப்பு: உடல் எடை அதிகமாகி, மூட்டுவலி உட்பட கோளாறுகளால் அவதிப்படுவோர், தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக்கிழங்கு. கிழங்குகளில், சுலபமாக ஜீரணமாவதும் கூட. குடலில் கிருமி சேராமல் தடுத்து, கொழுப்பு அதிகமாக சேர்வதைக் குறைப்பது, கல்லீரலுக்குச் சுறுசுறுப்பூட்டுகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கப் பயன்படுகிறது.
ரத்தத்தில் இருக்கும் அதிக கொழுப்பைக் குறைப்பதிலும், ரத்தம் உறைதலை துரிதப்படுத்துவதிலும், முக்கிய பங்கு வகிக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் கிழங்குகளை தவிர்க்க வேண்டும். ஆனாலும், கருணைக்கிழங்கு மட்டும் எடுத்துக் கொள்ளலாம். பெண்களின் ஹார்மோன் பிரச்னைகளைக் கூட கட்டுப்படுத்தும். முக்கியமாக, 40 வயதுக்கு மேல் வரும் மெனோபாஸ் பிரச்னையின் போது, பெண்களின் ஈஸ்ட்ரோஜன் அளவை இது அதிகப்படுத்துகிறது.
எடை குறையும்: முடக்குவாதம் உள்ளவர்கள், வாரம், இருமுறை உட்கொண்டு வந்தால், நோய் குணமாகும். வைட்டமின் 'சி' சத்தும், ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகளும் அதிகம் உள்ளன. கருணைக்கிழங்கு, உடலை குளிரச் செய்யும் உணவு என்பதால், ஆஸ்துமா இருப்பவர்கள், முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
'குண்டுடல் கொடுக்கும் உருளைக்கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக்கிழங்கு' என்று வாசகம் உள்ளது. சாதாரணமாக சமைத்து சாப்பிட்டால்,
நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். நன்றாக வேக வைத்து பின், தோலை உரித்து, புளி சேர்த்து சமைத்தால், அதிலுள்ள காரல் நீங்கும். அரிப்பு இருக்காது. சிலர் அரிசி கழுவிய நீரில், கருணைக்கிழங்கை வேக வைப்பதுண்டு.
இதனால், காரல், நமைச்சல் கட்டுப்படும். வேகவைத்து அரைத்து மசித்த கருணை கிழங்கு, ஒரு ஸ்பூன் எடுத்து நீர்விட்டு கலக்கவும். இதனுடன் ÷சாம்பு மற்றும் தனியா சேர்ந்த பொடி ஒரு ஸ்பூன் சேர்க்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர கொழுப்பு கரையும். உயர் ரத்த அழுத்தம் குறையும்.
அல்சருக்கு தீர்வு: கொழுப்பு சத்து ரத்தநாளங்களில் படிவதை கருணை கிழங்கு தடுக்கிறது. நச்சுக்களை வெளியேற்றும் நல்மருந்தாக விளங்குகிறது. கருணைக்கிழங்கை பயன்படுத்தி அல்சரை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். வேகவைத்த கருணை கிழங்கை மசித்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன், 2 ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நெஞ்செரிச்சல், அல்சர் குணமாகும். மலச்சிக்கல் பிரச்னை தீரும்.

