PUBLISHED ON : ஜூலை 31, 2011

பளபளப்புக்கு கிரீம்
பொதுக் கருத்து: முகச் சிகப்பழகு கிரீம் தடவும்போது, முகம் பளபளப்பாகும்.
உண்மை: தோலின் நிறம், மரபணுக்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது. கருவின் ஐந்தாவது வாரத்திலிருந்து, தோல் வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது. மூன்றாவது மாதத்தில், தோல், மூன்று முக்கிய அடுக்குகளாக பிரிவடைகிறது. ஆறாம் மாதத்தில் முழுமையான, ஆரோக்கியமான தோல் தோன்றிவிடுகிறது. அப்போதே, முடி, சீபம் என்னும் மெழுகு கோளங்களையும், வியர்வை கோளங்களையும் உள்ளடக்கி, ஒரு முழுமையான தோலின் பணிகளை சீராக செய்கிறது.
ஐந்தாவது வாரத்திலிருந்து, 20வது வாரத்திற்குள் தாய் உட்கொள்ளும் ஒவ்வாத மாத்திரைகள், வேதிப் பொருட்கள், எக்ஸ்ரே, நியூக்ளியர் கதிர்வீச்சுகள், மரபணு கோளாறுகள், ரத்த சொந்தத்தில் திருமணம் போன்றவற்றால் தோலடுக்கு பரிணாம வளர்ச்சியில், பலவிதமான கோளாறுகள் ஏற்பட்டு, தோலின் இயல்பான நிலை பாதிக்கப்படுகிறது. நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ், மையப்பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது.
இவற்றில், தோலின் நிறமாற்றம், காயம், தழும்பு, மினுமினுப்பு குறைதல், தடிப்பு, கடினத் தன்மை ஆகியவற்றிற்கு, மேலடுக்கின் குறைபாடும், வியர்வை நாற்றம், வறட்சி, தோலில் எண்ணெய் பிசுக்கு, உணர்ச்சியின்மை ஆகியவற்றிற்கு, நடு அடுக்கின் குறைபாடும், தோல் இறுக்கம், சுருக்கம் மற்றும் மடிப்புகளுக்கு, கீழ் அடுக்கின் குறைபாடும் காரணமாகும். தோல் நமக்கு அழகைத் தருவதுடன் வெப்பம், குளிர்ச்சியிலிருந்து பாதுகாப்பது, நரம்பு மூலமாக தொடுதலை உணர்த்துதல், வியர்வை மற்றும் எண்ணெய் பசையை சுரக்க வைத்து நீர், உப்பு மற்றும் கொழுப்பை வெளியேற்றுதல், நுண்ணிய துவாரங்கள் மூலமாக தசை மற்றும் தோல் அடுக்கில் தங்கிய கழிவு காற்றுகளை வெளியேற்றுதல் போன்ற பணிகளை செய்கின்றன. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால் தான் அழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும்.
நாம் தற்சமயம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள், களிம்புகள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்று அடுக்கு வரை ஊடுருவுவதில்லை. அதனால் தான், விலையுயர்ந்த களிம்புகளை பயன்படுத்தினாலும் பூரண பலன் கிடைப்பதில்லை.
ஆயுர்வேதத்துக்கும் காப்பீடு
அலோபதி மருத்துவ சிகிச்சைக்கு மட்டுமே, காப்பீட்டு வசதியை வழங்கி வந்த நிறுவனங்கள், தற்போது ஓமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கும் காப்பீடு வழங்கத் தொடங்கியுள்ளன.
ஸ்டார் ஹெல்த் அண்டு இன்சூரன்ஸ், பியூச்சர் ஜெனரலி, சோழமண்டலம் எம்.எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், ஆயுர்வேதம், ஓமியோபதி உள் ளிட்ட, பாரம்பரிய வைத்திய முறையிலான சிகிச்சைகளுக்கு, காப்பீட்டு வசதியை வழங்குகின்றன.
முடக்கு வாதம், எலும்பு தேய்மானம், மூட்டு வலி உட்பட, பலவித நோய்களுக்கு சித்த வைத்தியம், ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி ஆகிய மருத்துவ முறைகள், சிறந்த வகையில் தீர்வளிக்கின்றன. இதனால், இத்தகைய மருத்துவத்தை நாடுவோர் எண்ணிக்கை, பெருகி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, இவ்வகை மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களை, நிறுவனங்கள் அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன.
