
தேகத்துக்கு திரவம் தேவை
'நாள் ஒன்றுக்கு எட்டு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்' என, எதிர்வீட்டு ஏகாம்பரம் சொல்லி, 'அதை தினமும் நான் பின்பற்றினாலும், 'காலைக் கடனில்' பிரச்னை தான் ஏற்படுகிறது' என, நீங்கள் புலம்புவது வாடிக்கையாகி விட்டதா? மருத்துவம் என்ன கூறுகிறது? மனித உடலுக்கு தினமும் இரண்டு லிட்டர் திரவம் தேவை எனக் கூறுகிறது. அது தண்ணீராக மட்டும் அல்லாமல், டீ, காபி, பழச்சாறு என, எந்த திரவமாகவும் இருக்கலாம். அதற்காக, பழச்சாறை மொண்டு மொண்டு குடிக்க வேண்டாம். அளவோடு டீ, காபி, பழச்சாறு, நீர் எனப் பருகலாம். குடிநீர் வினியோகிப்பாளர்கள், அவர்கள் வர்த்தகத்திற்காக, 'தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்' என, செய்தி பரப்பி வருகின்றனர். எனவே, தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிக்கலாம்; தவறில்லை. அதற்காக, தண்ணீர் மட்டும் தான் குடிக்க வேண்டும் எனக் கட்டாயம் இல்லை. திரவமாக எதைப் பருகினாலும், அது குறைந்தது எட்டு டம்ளராக இருக்க வேண்டும்; அவ்வளவே!
செயற்கை விந்தணு
ஜப்பான் பல்கலை அறிவியல் விஞ்ஞானிகள், செயற்கை விந்தணுவை உருவாக்கியுள்ளனர். ஒரு எலியின் முளையத்தில் (எம்ப்ரியோ) உள்ள, விந்தணு சுரக்கப் பயன்படும் வேர் செல்களை எடுத்து, ஆண்மைத் தன்மை இல்லாத மற்றொரு எலியின் விதைப் பையில் செலுத்தி, பரிசோதிக்கப்பட்டது. சில நாட்களில், அந்த எலியின் விதைப் பையில், விந்தணுக்கள் உருவாகத் துவங்கின. அந்த விந்தணுக் களை எடுத்து, பெண் எலியின், கரு முட்டையுடன் சேர்த்து, கரு உருவாக்கப்பட்டது. அந்தக் கரு மூலம் பிறந்த எலி, மற்ற எலிகளைப் போல, ஆண்மைத் தன்மை கொண்டதாகக் காணப்பட்டது. இது உடற்கூறியல் வரலாற்றில் மிகச் சிறந்த மைல் கல் எனக் கருதப் படுகிறது. 'இக்கண்டுபிடிப்பின் மூலம் ஆண்மை இழந்தவர்களும், அவர்களுடைய வேர் செல் மூலமாகவே, குழந்தை பெறலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது' என, இங்கிலாந்தில் உள்ள ஷெபீல்டு பல்கலை மகப்பேறு வல்லுனர் டாக்டர் ஆலன் பாசி கூறுகிறார்.

