PUBLISHED ON : ஜன 20, 2019

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன், உச்ச ஸ்தாயில் பாடுவது சிரமமாக இருந்ததை கவனித்தேன். சரி, வயதாவதால் ஏற்பட்ட இயல்பான மாற்றம் இது என்று நினைத்தேன்.
ஒரு முறை அமெரிக்காவில், இசை நிகழ்ச்சி அமைப்பாளரின் இடத்திற்கு அழைத்துச் செல்ல, இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் வந்தார். அவரது கார் இருக்கையில், 'ஈட் ரைட் பார் யுவர் டைப்' என்ற புத்தகம் இருந்தது; எடுத்துப் படித்தேன்.
அதில் கூறப்பட்டிருந்த தகவல்கள், எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தின. காபி ஷாப்பில், இந்தப் புத்தகம் இருந்தது; வாங்கி விட்டேன்.
உணவுப் பழக்கம், நம் ரத்த வகைக்கு ஏற்றதாக இருக்க வேண்டியதன் தேவை பற்றி இருந்தது. என் உணவு முறையை மாற்றினேன். அற்புதமான மாற்றம் நிகழ்ந்தது.
அதன் பின், என் குரலுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. பல சவாலான, கடினமான பாடல்களைப் பாடி, அவை பெரிய ஹிட்டாகி உள்ளன.
காலையில் எழுந்தவுடன் காபி, அதன் பின், ஒரு எனர்ஜி பால். அதன் பின், மதிய உணவு, கேரளா ஸ்டைலில், அரிசி சாதம், காய்கறிகளில் செய்த உணவுகள்... ரெக்கார்டிங், கச்சேரி இருக்கும் நாட்களில், அனேகமாக இரவு உணவு சப்பாத்தி தான். ஆனால், இந்தப் புத்தகத்தை பின்பற்றிய பின், சப்பாத்தி சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன்.
டீ குடிக்கவே மாட்டேன். இளம் வயதில், சிக்கன் விரும்பி சாப்பிட்டேன். கடந்த பல ஆண்டுகளாக, சுத்த சைவமாக மாறி விட்டேன். முட்டை கூட சாப்பிடுவதில்லை. உணவகங்களில் நான் சாப்பிடுவது அரிது.
என் குரலை பாதுகாப்பது என் கடமை. இன்று நான் இருக்கும் நிலைக்கு, முன்ஜென்ம கர்ம பலன்களே காரணம் என்று நம்புகிறேன். இன்று, வேண்டாததை சாப்பிட்டு, உடல் நலத்தைக் கெடுத்துக் கொண்டால், அதன் பலன் நாளை தெரியும்.
என்னுடைய அலட்சியத்தால், என் இசை மோசமாவதை நான் அனுமதிக்க முடியாது.
கே.ஜே.ஜேசுதாஸ், பாடகர்
