உட்கார்ந்தே பணிபுரிபவர்கள் உடலை கொஞ்சம் கவனியுங்க...
உட்கார்ந்தே பணிபுரிபவர்கள் உடலை கொஞ்சம் கவனியுங்க...
PUBLISHED ON : ஆக 09, 2021

திருப்பூர் மாவட்டத்தில், வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள் அதிகரித்துள்ளனர். மாணவர்கள், வீட்டில் இருந்து பாடம் கற்கின்றனர். பணியில்லாதவர்களின் பொழுதுபோக்கு, 'டிவி' பார்ப்பதாகவும், அலைபேசியில் காலம் கழிப்பதாகவும் இருக்கிறது.
தொற்று காலத்தில், வீட்டை விட்டு தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று அரசு அறிவுறுத்துகிறது. அதேசமயம், வீட்டிலேயே முடங்கிக்கிடந்தால், மன அழுத்தங்களுடன் உடல் கோளாறுகளும் ஏற்படுகின்றன.
வீட்டில் இருப்பவர்கள் பலர், பகல் நேரங்களிலேயே துாங்கிக்கழிப்பதால், இரவில் துாக்கம் வராமல் அவதியுறுகின்றனர். தொற்று காலத்தில் துாக்கமின்மை என்பது, பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
சுகாதாரத்துறையினர் கூறியதாவது:
பலரும், ஆழ்ந்து உறங்குவதில்லை. குறட்டை விட்டால் ஆழ்ந்த உறக்கம் என்று பலர் தவறாக கருதுகின்றனர். நுரையீரலுக்கு காற்று செல்லும் வழிகள் அடைபடுவதால்தான் குறட்டை எழுகிறது. வாய் வழியாக மூச்சுவிடுவதே குறட்டையாக எதிரொலிக்கிறது.
இதுவே, நாளடைவில் பல்வேறு நோய்கள் வருவதற்கு அடிகோலுகிறது.
அதிக எடை உள்ளவர்கள், கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுகின்றனர். ஏழு அல்லது எட்டு மணி நேரம் வீட்டிலேயே அமர்ந்து பணிபுரிகிறவர்கள், உடல் இயக்கம் என்பதையே மறந்துவிடுகின்றனர். கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. மூச்சுக்குழல்களின் பாதையில் கொழுப்பு படிகிறது.
ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிபவர்கள், நொறுக்குத்தீனி சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால், விரைவிலேயே நோய்களுக்கு ஆட்பட்டு விடுகின்றனர்.
உடற்பயிற்சிக்கு போதுமான முக்கியத்துவம் தர வேண்டும். இதன் மூலம், தேவையற்ற கொழுப்பு அகன்றுவிடும். குறைந்தபட்சம், தினமும் காலையிலும் மாலையிலும் தலா அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்வது சிறந்தது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
