PUBLISHED ON : ஆக 26, 2018

மார்பக கட்டிகள் புற்று நோயின் அறிகுறியா?
பெண்களுக்கு மார்பில் கட்டி உண்டானால் அது புற்று நோயாக இருக்குமோ என்ற பயம் வருவது இயல்பானது தான். ஆனால் அனைத்து மார்பக கட்டிகளும் புற்று நோயாக இருக்காது. புற்று நோய் இல்லாத சாதாரண கட்டிகளும் மார்பகத்தில் தோன்றலாம். அவற்றில் ஒன்று தான் 'பைப்ரோ அடினோமா' என்னும் தசைநார் கட்டி. மார்பில் தோன்றியுள்ள கட்டி எந்த வகையானது என்பதை துவக்கத்திலேயே பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
பைப்ரோ அடினோமா என்பது சாதாரண கட்டி தான். இது புற்று நோயாக மாறாது. பெரும்பாலும் 'ஈஸ்ட்ரோஜன்' ஹார்மோன் காரணமாக உண்டாகிறது. இந்த கட்டி ரப்பர் போன்ற தன்மை உடையது. இது தோலுக்கு அடியில் எளிதாக நகரக்கூடியது. இதனால் வலி ஏற்படாது.
சில சமயங்களில் ஒன்றுக்கும் மேலான கட்டிகளும் உண்டாகலாம். பெண்கள் வயதுக்கு வந்த பின்பும், இளம் பெண்களுக்கும் இது தோன்றலாம். அது போன்று கர்ப்ப காலத்திலும், பாலுாட்டும் காலத்திலும், இந்தக்கட்டி பெரிதாகி பின் தானாக குறையலாம். இதற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. முறையாக ஓமியோபதி மருந்துகளை உட்கொண்டால் பக்க விளைவுகள் இல்லாத சிறந்த தீர்வு பெறலாம்.
'பாலிசிஸ்டிக் ஓவரீஸ்' என்றால் என்ன?
இளம் பெண்களுக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் வருவது தற்போது அதிகம் உள்ளது. போதிய உடல் உழைப்பு இல்லாததும், கொழுப்பு அதிகம் உள்ள துரித உணவுகளை நிறைய உட்கொள்வதும், பாலிசிஸ்டிக் ஓவரீஸ்க்கு முக்கிய காரணம்.
கணையத்தில் இருந்து சுரக்கும் இன்சுலின் ஹார்மோன், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கு மட்டும் அல்ல; உடல் உள் இயக்கம் சீராக இருப்பதற்கும் தேவைப்படுகிறது. சினைப்பையில் நிறைய கருமுட்டைகள் மாதம் தோறும் உருவாகும். அதில் முழு வளர்ச்சியடைந்த ஒரு முட்டை உடைந்து மாதம் தோறும் வெளி வருகிறது. கருமுட்டை குறிப்பிட்ட நாளில் முழுமையான வளர்ச்சியடைய இன்சுலின் சுரப்பு சீராக இருக்க வேண்டும்.
அப்படி இல்லாத பட்சத்தில் முழு வளர்ச்சி அடையாத கருமுட்டைகள், நீர்கட்டிகளாகி தங்கி விடுகின்றன. இதனால் இளம் பருவத்தில் சீரற்ற மாதவிடாய் வருகிறது.
வழக்கத்தை விட ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருந்தால், கருமுட்டைகள் முழுமையாக வளர்ச்சி அடைவதை தடுக்கும்.
கருமுட்டை உடைந்து வெளியில் வருவதிலும் சிக்கல் ஏற்படும். குறிப்பிட்ட இந்த ஹார்மோன் அதிகமாக சுரப்பதற்கு காரணம் இன்சுலின் அளவு அதிகமாக இருப்பது. இந்த ஹார்மோன் அளவுக்கு அதிகமாக சுரப்பதால் ஏற்படும் இன்னொரு பிரச்னை, இளம் பருவ பெண்களுக்கு உடல் முழுவதும் குறிப்பாக மேல் உதடு, மேல் கை, கால், வயிற்று பகுதியில் முடி வளரும். முகத்தில் பருக்கள் தோன்றும், தலையின் முன் பக்கத்தில் முடி உதிரும். உடல் பருமனும் அதிகரித்து கொண்டே போகும்.
இளம் பருவத்தில் ஏற்படும் இந்த பிரச்னையால் 20 வயதுக்கு மேல் திருமணம் ஆன பின் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. 30 வயதில் சர்க்கரை நோய் பிரச்னை, கொழுப்பு அதிகமாகுதல் ஏற்பட்டு உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து 50 வயதில் பெண்களுக்கு மாரடைப்பு, வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து முறையான சிகிச்சை எடுத்து கொண்டால் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும். உடல் பருமனை குறைக்க முறையான வழிமுறைகள், சரியான உணவு பழக்கங்களை பின்பற்றுவது முக்கியம்.
- டாக்டர் மதுமிதா
ஓமியோபதி மருத்துவ நிபுணர்,மதுரை
அலைபேசி: 89392 66767

