PUBLISHED ON : ஜூன் 28, 2015
யோகாசனம் செய்வதால் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு, மனக்கட்டுப்பாடு, ஒழுக்கம், மன அமைதி பெறலாம்.
யோகாசனம் செய்யும் போது, வயிறு கண்டிப்பாக காலியாக இருத்தல் நல்லது. பத்மாசனம் செய்யும் போது, தரையில் நேராக அமர்ந்து, இரண்டு கால்களை முதலில் நேராக நீட்டிக்கொண்டு, வலது காலை மடக்கி இடது தொடையிலும், இடது காலை மடக்கி வலது தொடையிலும் வைக்க வேண்டும்.
எந்த கால்களை வேண்டுமானாலும், முதலில் மடக்கி வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு ஆசனம் செய்யும் போதும், நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை அறிய முடியும். கைகளை நீட்டியவாறு சின்முத்திரையில் கைகளை வைத்துக் கொள்ள வேண்டும். மனதை ஒரு நிலைப்படுத்தி, 5 முதல், 10 நிமிடங்கள் வரை இருக்கலாம்.
ஒவ்வொரு ஆசனமும் முடித்த பின், கை மற்றும் கால்களை மெதுவாக விலக்க வேண்டும்; ஒவ்வொரு ஆசனத்துக்கும் கால இடைவெளி இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆசனம் செய்யும் போதும், உடலில் இருந்து வியர்வை வர, கட்டாயம் இல்லை.
எந்த ஒரு ஆசனத்தையும் கஷ்டப்பட்டு செய்யக்கூடாது. முடியவில்லை என்றால், மெதுவாக செய்யலாம். பத்மாசனம் செய்வதால் ஞாப சக்தி அதிகமாகும். முதுகுதண்டு வலுப்படும், தொப்பை குறையும். நம் உடலை வஜ்ரம் போல வைத்துக் கொள்ள வஜ்ராசனம் உதவுகிறது. உடலில், 108 வர்மஸ்தானங்கள் உள்ளன. இதில் புட்டப்பகுதியில் உள்ள வர்மங்கள், ஜீரண மண்டலத்தை இயக்குகிறது.
வஜ்ராசனத்தில் அமரும் போது, வர்ம பகுதி நன்கு அழுந்துவதால் இரைப் பை, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், கணையம், பித்தப்பை ஆகிய அனைத்து ஜீரண உறுப்புகளும் துடிப்போடு இயங்கி வலிமையடைகின்றன. காலில் உள்ள தசைகள் வலுப்பெறுகிறது. மூட்டு தசைகளும் வலுவடைகின்றன.
