PUBLISHED ON : ஜூன் 14, 2021

நோயை உண்டாக்கும் வைரசின் தன்மையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், வைரசில் ஏற்பட்டுள்ள மரபணு மாற்றம், நோய் பாதிப்பின் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. முதல் அலையில், 'கோ - மார்பிடிட்டி' எனப்படும் நீண்ட நாள் உடல் பிரச்னை இருந்தவர்களை தொற்று அதிகம் பாதித்தது. இரண்டாவது அலையில், எந்த பிரச்னையும் இல்லாத இளம் வயதினரையும் பாதித்து உள்ளது.
இரண்டு அலை பாதிப்பில் இருந்தும் தெரிந்து கொண்ட விஷயம், தடுப்பூசி போட்ட இரண்டு வாரங்கள் கழித்து, நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயமாக அதிகரிக்கும். தடுப்பூசி போட்ட பின் உயிரிழந்தவர்கள், தீவிர பாதிப்புக்கு உள்ளானவர்கள், வெறும், 1 சதவீதத்துக்கும் குறைவு தான். அதிகளவில் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி விட்டோம்; நம்முடைய எதிர்ப்பு சக்தி அதிகம். எனவே, முதல் அலை குறைந்ததும், இரண்டாவது அலை, நம் நாட்டில் இருக்காது என்று தான் நினைத்தோம்.
ஆனால் இரண்டாவது அலைய தொடர்ந்து, ஸ்டிராய்டு மருந்துகளின் பயன்பாடு, முக கவசத்தை சுத்தம் செய்யாமல் உபயோகிப்பது, ஆக்சிஜன் உருளையில் பயன்படுத்தும் அசுத்தமான தண்ணீர் உட்பட பல காரணங்கள் மூலமாக, 'மியூகோர்' தொற்று பரவுகிறது. நம்மை சுற்றி எல்லா காலத்திலும் இருக்கும் பூஞ்சை, வாய்ப்புக்காக காத்திருந்து, எதிர்ப்பு சக்தி குறைந்து, சுய சுகாதாரம் இல்லாமல் இருந்தால் தொற்றிக் கொள்ளும்.
நீண்ட நாள் உடல் கோளாறு இருப்பவர்கள், 'பிளட் தின்னர்' எனப்படும் ரத்த உறைவை தடுக்கும் மாத்திரைகள் சாப்பிட்டால், தடுப்பூசி போடுவதற்கு முன், அதை நிறுத்த கூடாது. கொரோனா குணமான பின்னும், தனிநபரின் தேவையை பொறுத்து, மூன்று மாதங்கள் வரை கூட, ரத்த உறைவை தடுக்கும் மாத்திரைகள் தர வேண்டியிருக்கும்.
தடுப்பூசியை பொறுத்தவரை, எதுவாக இருந்தாலும், அதனுடைய நோய் தடுக்கும் திறன் மட்டும் மாறுபடும்; மற்றபடி எல்லாம் நல்லது தான். இன்றைய நிலையில், எந்த தடுப்பு மருந்து கிடைத்தாலும் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது.
டாக்டர் எம்.எம்.யூசுப்,
இதய மற்றும் நெஞ்சக நோய்
மருத்துவ ஆலோசகர்,
அப்பல்லோ மருத்துவமனை, சென்னை.
Yusuf@punithas.com

