PUBLISHED ON : டிச 15, 2024

வளரும் குழந்தைகளுக்கு எந்தவித நோய்த்தொற்று பாதிப்பும் வராமல் தடுத்து, ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும் என்பதால்தான் வசம்பிற்கு, 'பிள்ளை வளர்ப்பான்', 'பிள்ளை வளர்த்தி' என்று பெயர்கள் உண்டு.
இன்றும் பல கிராமங்களில் பிறந்த குழந்தையின் கை, காலில் வளையலாக, இடுப்பில் தாயத்தாக வசம்பு கட்டும் வழக்கம் உள்ளது. இதற்கு காரணம், வசம்பு வாசனையை குழந்தைகள் நுகரும்போது, வலிப்பு ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும்.
அத்துடன் இதன் வாசனைக்கு கொசு உட்பட எந்தப் பூச்சியும் குழந்தையின் அருகில் நெருங்காது. எனவே, கொசுக்கடியில் இருந்து பாதுகாப்பு தரும். மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பால் குடித்ததும் ஏப்பம், எதுக்களிப்பு, வயிறு பொருமல் உட்பட எந்த செரிமானப் பிரச்னை இருந்தாலும், இரண்டு சிட்டிகை வசம்பு பொடியுடன் தேவையான அளவு தேன் சேர்த்து குழைத்து, ஒரு நாளைக்கு ஒருமுறை, நான்கு நாட்கள் நாக்கில் தடவலாம்.
குமட்டல், வயிற்றுப்போக்கு, மந்தம், வயிற்று வலி என்று எந்த பிரச்னையாக இருந்தாலும் இயற்கையாக குணப்படுத்தும் தன்மை வசம்பிற்கு உள்ளது. ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைக்கு, ஒரு சிட்டிகை பொடியை தாய்ப்பாலுடன் சேர்த்து நாக்கில் தடவலாம். வாயுத்தொல்லை, வயிற்று வலியால் அழும் குழந்தைக்கு, வசம்பை நெருப்பில் சுட்டு, கருகிய பொடியை தேங்காய் எண்ணெயுடன் குழைத்து, தொப்புளைச் சுற்றி, அடிவயிற்றில் தேய்த்தால் நல்ல பலன் தரும்.
இரண்டரை வயது வரை பேசுவதில் தாமதம் இருந்தால், வசம்பை தேனில் குழைத்து, 10 நாட்கள் தரலாம். அதற்கு மேல் தருவதாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். இது பேச்சு வருவதற்கு உதவும்.
திக்குவாய் பாதிப்பு இருப்பவர்கள் ஒரு கிராம் வசம்பு பொடியை 50 மில்லி அருகம்புல் சாறில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் 30 நாட்கள் குடிக்கலாம். திக்குவாய் அறிகுறியைக் குறைக்கும். பள்ளி செல்லும் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்க, மாதம் ஒருமுறை வசம்பு பொடியை தேனில் குழைத்து தரலாம்.
டாக்டர் ஆர்.மைதிலி,
ஆயுர்வேத மற்றும் ஊட்டச்சத்து மருத்துவ ஆலோசகர், சென்னை
9962262988
drmythiliayur@gmail.com