ரத்த நாளங்களில் வெடிப்பு ஏற்பட 'வைட்டமின்-ஏ' குறைபாடு காரணம்
ரத்த நாளங்களில் வெடிப்பு ஏற்பட 'வைட்டமின்-ஏ' குறைபாடு காரணம்
PUBLISHED ON : நவ 28, 2019

* மரபியல் காரணிகள் மாரடைப்பிற்கு எந்த அளவு காரணமாகிறது?மரபணு என்பது சாவி மாதிரி. சாவியை சொருகியவுடன், கார் ஓடி விடாது. திருகுவது, கியர் போடுவது போன்ற அடிப்படையான துாண்டுதல்கள் இருந்தால் மட்டுமே, கார் ஓடும். ரத்த சொந்தங்களுக்கு இதய நோய் இருந்தால், குடும்பத்தில் மற்றவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். பிரச்னைக்கான மரபணு, நம்மிடம் இருக்கும். அதை துாண்டக்கூடிய புகை பிடிப்பது போன்ற பழக்கங்கள் இருந்தால், நமக்கும் மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம். வெளி சூழல், ஆரோக்கியம் இரண்டையும் முறையாக வைத்துக் கொண்டால், மாரடைப்பு வராது.
* கொழுப்பை கட்டுக்குள் வைத்தால் மாரடைப்பை தவிர்க்கலாமா?இதயத்திற்கு ரத்த ஓட்டம் தரக் கூடிய ரத்த நாளங்களில், கொழுப்பு அடைப்பதால், ரத்த நாளங்களின் விட்டம் குறைந்து, போதுமான அளவு ரத்தம், இதயத்திற்கு செல்லாமல், மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே, மாரடைப்பு வருவதற்கு, கொழுப்பை முக்கிய காரணமாக சொல்கிறோம்.இயல்பிலேயே, மெல்லியதாக, வலு இல்லாமல் இருக்கும் ரத்தக் குழாய்களின் உள் சுவரில், வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வெடிப்பு உடைந்தால், ரத்த நாளமே வெடித்து, ரத்தக்கசிவு ஏற்படும். இதனால், எதிர்பாராத வகையில் மரணமோ, தீவிர பக்க வாதமோ ஏற்படலாம். எனவே, அப்படி ஏற்படாமல் பாதுகாக்க, நம் உடம்பே, வெடிப்பு இருக்கும் ரத்த நாளங்களில், கொழுப்பை கொண்டு சேர்க்கிறது. எனவே, பிரச்னை கொழுப்பு இல்லை; வெடிப்பு தான்.பிரச்னையை சரி செய்வதற்கு உடல் எடுக்கும் தற்காப்பு நடவடிக்கை தான், அந்த இடத்தில் கொழுப்பை சேர்ப்பது.
* வெடிப்பு ஏற்பட என்ன காரணம்?ரத்த நாளங்களின் சுவர்களுக்கு, தேவையான சத்துக்கள், போதுமான அளவு கிடைக்காமல் போவதால், இதுபோன்ற வெடிப்புகள் ஏற்படலாம் என, ஆராய்ச்சிகள் சொல்கின்றன. மிக அடிப்படையான தேவை, 'வைட்டமின் - ஏ' சத்து. இது குறைவாக இருந்தால், ரத்த நாளங்களில், இதுபோன்ற வெடிப்புகள் வரும் என்கின்றனர்.
* 'வைட்டமின் - ஏ' சத்து அதிகம் உள்ள உணவுகள் எவை?சிறுதானியங்களில், பொன் மஞ்சள் நிறத்தில் இருக்கும் திணை அரிசியில், 'வைட்டமின் - ஏ' சத்திற்கான பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. முருங்கை கீரை, பப்பாளி, மாம்பழம் என, பொன் மஞ்சள், சிவப்பு நிறங்களில் இருக்கும் உணவில், 'வைட்டமின் - ஏ' அதிகம் இருக்கும். கேரட்டில் இருப்பது மட்டும் நமக்கெல்லாம் தெரியும். அசைவ உணவு சாப்பிடு பவர்களுக்கு, மீன் நல்ல தேர்வு. மீனில், 'வைட்டமின் - ஏ' தவிர, ஒமேகா 3, மூளையின் வளர்ச்சிக்கு தேவையான சில வகை புரதங்கள் உள்ளன.
ரத்த கொழுப்பை ஓரளவு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக இருந்தால், வெடிப்புகளில் அதிகமாக படியும். ரத்த நாளங்களின் விட்டமும் குறையும். மாரடைப்பு வரும் சாத்தியம் அதிகம்.
* ரத்த கொழுப்பு எந்த அளவில் இருக்க வேண்டும்?ரத்த கொழுப்பு ஒரு டெசி லிட்டருக்கு, 180 - 230 மில்லி கிராம் என்ற அளவில் இருக்கலாம் என சொல்கின்றனர். தற்போதுள்ள உலக சுகாதார மையத்தின் வழிகாட்டுதல், 180 - 200 என்ற அளவில், ரத்த கொழுப்பு இருந்தாலே போதும் என்கிறது. இந்த அளவை விடவும், சற்று கூடுதலாக இருந்தாலே, உடனே கொழுப்பைக் கரைக்கும் மாத்திரை வாங்கி சாப்பிடுவது தேவையில்லை.
* சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில், இதற்கு தீர்வு உள்ளதா?ஆரம்ப நிலை ரத்த கொழுப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு, வெந்தயம் மிக நல்ல மருந்து. கரையக்கூடிய நார்ச்சத்து இதில் அதிகம். சைவ உணவில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பது, வெந்தயத்தில் தான். தினமும், 5- 10 கிராம் வெந்தயம் சாப்பிடலாம். ஆஸ்துமா, அதிக சளி, மூக்கடைப்பு இருப்பவர்கள் தவிர, மற்றவர்கள், 40 வயதிற்கு மேல், தினமும் வெந்தயம் சாப்பிடலாம். இதனால், எந்த தீங்கும் கிடையாது.
அடுத்து, தினசரி உணவில், 10 சின்ன வெங்காயம், 10 பல் பூண்டு, கறிவேப்பிலை தவறாமல் இடம் பெற வேண்டும். வெங்காயத்தை சமைக்காமல், அப்படியே சாப்பிடுவதால், அதனுடைய முழு பலனும் கிடைக்கும். வெள்ளை பூண்டை பச்சையாக சாப்பிடக் கூடாது. வேக வைத்து தான் சாப்பிட வேண்டும்.
ரத்தத்தில், குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும் தன்மை கறிவேப்பிலைக்கு உண்டு.வெந்தயம், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை தவறாமல் உணவில் இடம் பெற்றாலே, மாரடைப்பை தவிர்க்கலாம்.
- டாக்டர் ஜி.சிவராமன் சித்த மருத்துவர், ஆரோக்கியா சித்தா மருத்துவமனை, சென்னைதொலைப்பேசி : 044 - 4355 0199, 73388 52307
