மிரட்டும் குறட்டையை விரட்டனுமா... வழி இருக்கிறது...
மிரட்டும் குறட்டையை விரட்டனுமா... வழி இருக்கிறது...
PUBLISHED ON : நவ 25, 2019

குறட்டை எதனால் வருகிறது?
நம் வாழ்க்கையின் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை உறக்கத்தில் செலவிடுறோம். ஒவ்வொரு நாளையும் புத்துணர்ச்சியுடன் துவங்க துாக்கம் முக்கியம். உறங்கும் போது சுவாச குழாயில் உள்ள தசைகள் சற்று ஓய்வுக்கு உள்ளாகும் வகையில் தளர்ந்து விடும். இதனால் மூச்சுக்குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படும். மூச்சு வெளியேறும் போது இந்த அடைப்பை மீறி காற்று நகர்வதால் விதவிதமான ஒலிகள் எழும்புகின்றன. இந்த ஒலியையே குறட்டையாக உணர்கிறோம்.
குறட்டையால் ஆபத்து உண்டா?
குறட்டை என்பது பலருக்கும் வாழ்வில் வெவ்வேறு காலகட்டங்களில் இருக்கும். சளி பிடித்தால், மூக்குவடம் வளைந்திருந்தால், அதீத களைப்பில் உறங்கும் போது லேசான குறட்டை வரும். இது ஆபத்தில்லாதது. உடல் பருமனாக இருப்பவர்கள் தினமும் அதிக சத்தத்துடன் சீராக அதிகரித்து நடுவில் சில வினாடிகள் அமைதிக்குப்பின் மீண்டும் குறட்டை விடுவர். இது ஓ.எஸ்.ஏ., (Obs tructive Sleep Apnea) என்ற ஆபத்தான நோயின் அறிகுறி.
ஓ.எஸ்.ஏ., நோய் எப்படி ஏற்படுகிறது?
உறங்கும்போது மூச்சுக்குழாயில் ஏற்படும் தற்காலிக அடைப்பை ஓ.எஸ்.ஏ., என்கிறோம். இது வெறும் குறட்டை பிரச்னை மட்டுமல்ல. மூச்சுக்குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படும் போது முக்கிய உறுப்புகளுக்கு பிராண வாயு செல்வதில் தடை ஏற்படுகிறது. இதனால் இருதய நோய்கள், பக்கவாதம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஞாபக மறதி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். உடல் பருமனாக உள்ளவர்களில் 80 சதவீதம் பேருக்கு ஓ.எஸ்.ஏ., இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. உயரத்திற்கு ஏற்ற எடை அவசியம். உதாரணமாக ஒருவர் 162 செ.மீ., உயரம் இருந்தால், 62 கிலோ எடை என்பது உகந்தது. இதை விட அதிகமாக இருப்பவர்கள் உடல் பருமனானவர்கள்.
இப்பாதிப்பின் அறிகுறிகள் யாவை?
பகல் நேரத்தில் அதிகமாக துாக்கம் வருதல், காலை எழுந்தவுடன் தலைவலி ஏற்படுவது, அதிகமான மறதி, சோர்வு, ஆர்வமின்மை, வாகனம் ஓட்டும்போது, அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது கூட துாக்கம் வருதல், காலை எழுந்ததும் நாக்கில் வறண்ட உணர்ச்சி ஏற்படுதல், துாக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவது போல் உணர்தல்.
ஓ.எஸ்.ஏ.,வை கண்டுபிடிக்க பரிசோதனை உள்ளதா?
Polysomnography என்ற வலியில்லா எளிய பரிசோதனை மூலம் கண்டறியலாம். இதில் துாங்கும் போது ஏற்படக்கூடிய தற்காலிக மூச்சுக்குழாய் அடைப்பால் எந்தளவு பிராண வாயு குறைகிறது, குறைந்த பிராண வாயு நிலை எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்பதையும் அறியலாம்.
இதற்கு தீர்வு தான் என்ன?
துவக்க நிலையிலேயே உணவுமுறை மாற்றங்கள், உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைப்பது அவசியம். மல்லாந்து படுக்காமல் பக்கவாட்டில் படுத்து உறங்குவதும் பலன் அளிக்கும். பாதிப்பு அபாயகரமான அளவு இருந்தால் CPAP என்ற மாஸ்க் அணிந்து உறங்குவது நல்லது. நுரையீரல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.
ஆரோக்கியமான உறக்கத்திற்கு வழிகள்...
தினமும் ஒரே நேரத்தில் படுக்க செல்லுதல், எழும்புதல் வேண்டும். மாலை 6:00 மணிக்கு மேல் காபி, டீ அருந்தக்கூடாது. மது அருந்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். படுக்கைக்கு செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன்பிருந்து அலைபேசி, 'டிவி', கணினி பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
டாக்டர் முத்துலட்சுமி
நுரையீரல் நோய் நிபுணர்
மதுரை
63821 58909
