'மருத்துவர் பரிந்துரை இன்றி மருந்து வாங்கி சாப்பிடக்கூடாது'
'மருத்துவர் பரிந்துரை இன்றி மருந்து வாங்கி சாப்பிடக்கூடாது'
PUBLISHED ON : நவ 25, 2019

பாக்டீரியா தொற்றுக்கு, 'ஆன்டிபயாடிக்' பயன்படுத்த தானே வேண்டும்?
சரி தான். மருந்து கொடுத்தும், தொற்றை சரிசெய்ய முடியாவிட்டால், மருந்து கொடுப்பதால் என்ன பலன்? பாக்டீரியா தொற்றுக்கு, 'ஆன்டிபயாடிக்' மருந்துகள் கொடுத்தால், அந்த மருந்து, கிருமிகளை அழிக்க வேண்டும். மாறாக, மருந்தை எதிர்த்து போராடும் வலிமையை கிருமிகள் பெற்று விட்டால், அதற்கு பெயர், ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ். தற்போது வழக்கத்தில் உள்ள மாத்திரைகளால், பலன் இல்லை என, அதைவிட வீரியமான மருந்தை ஊசி மூலம் போடுகிறோம். இதை எதிர்க்கும் வலிமையையும், அடுத்த சில ஆண்டுகளில், கிருமிகள் பெற்று விட்டால் என்ன செய்வது என்பதே, தற்போதைய பிரச்னை.
புதிய மருந்துகள் வருவதில்லையே, ஏன்?
எந்த மருந்தை விற்றால் அதிக லாபம் கிடைக்குமோ, அதை தயாரிக்க, மேம்படுத்தவே, மருந்து கம்பெனிகள் அதிக முதலீடு செய்கின்றன. உதாரணமாக, இதய நோயாளி ஒரு மாத்திரையை சாப்பிட ஆரம்பித்தால், குறைந்தது, 20 ஆண்டுகள், அதை சாப்பிட வேண்டியிருக்கும்.மன நோய்க்கு, மருந்து சாப்பிட ஆரம்பித்தால், 10 ஆண்டிற்கு மேல் சாப்பிட வேண்டும். அதேபோல் தான், சர்க்கரை கோளாறு, ரத்தக்கொதிப்பு போன்வற்றிற்கும்.ஆனால், பாக்டீரியா தொற்றுக்கு அதிகபட்சம், 10 நாட்கள் மட்டுமே, ஆன்டிபயாடிக் மருந்துகளை சாப்பிட வேண்டியிருக்கும். எனவே, கோடிக்கணக்கில் பணம் செலவழித்து, ஆராய்ச்சி செய்து, ஆன்டிபயாடிக் மருந்தை கண்டுபிடித்து, அதற்கேற்ப லாபம் எடுக்க முடியவில்லை என்பதால், மருந்து கம்பெனிகள், இவற்றின் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால், புது மருந்துகள் வருவது மிகவும் அரிதாகவே உள்ளது.
மருந்திற்கு சவாலாக உள்ள நோய்கள் எவை?
அனேகமாக எல்லா பாக்டீரியா தொற்றுக்களுமே, தற்போது சவாலாகவே உள்ளது. பிரச்னை மருந்தில் இல்லை. கிருமிகளிடம் உள்ளது. டைபாய்டு, சிறுநீரகத் தொற்று போன்றவை ஏற்பட்டால், மிதமான அளவு மாத்திரைகளிலேயே சரிசெய்து விடலாம். ஆனால், இந்த பிரச்னைகளுக்கு, தற்போது, அதிகவீரியம் மிக்க மருந்தை, ஊசி மூலமாக செலுத்த வேண்டியுள்ளது. காசநோய்க்கு, வழக்கமான மாத்திரைகளுக்கு பதிலாக, பல மாத்திரைகள் சேர்ந்த, கூட்டு மருந்துகளை தர வேண்டியுள்ளது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பதற்கான முக்கிய காரணிகளில், நிமோனியாவும் ஒன்று. நிமோனியாவை பென்சிலின் வைத்து சுலபமாக குணப்படுத்தினோம். தற்போது, பென்சிலின், 80 சதவீதம் வேலை செய்வதில்லை.
பிரச்னையை திறம்பட கையாள வழி என்ன?
எவ்வளவு குறைவாக பயன்படுத்துகிறோமோ, கிருமிகள் மருந்திற்கு எதிராக வலிமை பெறுவதை அந்த அளவு தவிர்க்கலாம். யாருக்கு, என்ன மருந்தை, எந்த அளவு தர வேண்டும் என, தெரிந்து தர வேண்டும். 15 நாட்கள் தரும் மருந்தை, ஐந்து நாட்களில் தொற்று சரியாகி விட்டது என்றால், மருந்தை நிறுத்தி விடலாம். பாக்டீரியா தொற்று என்றில்லை. கை, கால், முதுகு வலி என்று எதற்கெடுத்தாலும், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், தாங்களாகவே மருந்து வாங்கி சாப்பிடுகின்றனர். இதை நிறுத்தி, தேவையான போது, டாக்டர் கொடுத்தால் மட்டும் சாப்பிட வேண்டும்.
கால்நடைகளுக்கு இதை பயன்படுத்துவதால், தீங்கு ஏற்படுமா?
மனிதர்களுக்கு, பயன்படுவது வெறும், 20 - 30 சதவீதம் மட்டுமே. 70 - 80 சதவீதம், கோழி, ஆடு மற்ற இறைச்சி தேவைகளின் வளர்ச்சிக்காக பயன்படுத்துகிறோம். நாம் சாப்பிடும் மருந்து, குடலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, மலத்தின் வழியே வெளியேறுகிறது. பயன்பாட்டிற்கு இருக்கும் நீருடன் கழிவுநீர் கலக்கும் போது, அவற்றில் தங்கி உள்ள பாக்டீரியாக்களும், அசுத்தமான நீரை கால்நடைகளும் குடித்து, அவற்றின் இறைச்சியை சாப்பிடுவதன் வாயிலாக, பாக்டீரியா தொற்று மீண்டும் நமக்கே வரும்.தீவனத்திலும், நீரிலும் வளர்ச்சி ஊக்கியாக இதை கலக்குகின்றனர். இறைச்சியை சாப்பிடும் நமக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது.
டாக்டர் வி.ராமசுப்ரமணியன்
தொற்று நோய் மருத்துவ ஆலோசகர்
044 - 4008 0300
