PUBLISHED ON : மே 04, 2025

 
வாயு தொல்லை, அஜீரணம், அசிடிட்டி- அமிலம் அதிகரிப்பு போன்ற செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டால், பிடிக்காத உணவு என்ன சாப்பிட்டோம்; இப்படி படுத்துதே என்று தான் நினைப்போம்.
ஆனால், செரிமானக் கோளாறுகளுக்கு நாம் சாப்பிட்ட உணவு மட்டும் காரணம் இல்லை. தவறான நேரத்தில் சாப்பிடுவதும், தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதும்கூட செரிமானக் கோளாறை ஏற்படுத்தலாம்.
இவை தவிர, பொதுவாக நாம் செய்வது, பசியும் இருக்காது; அந்த நேரத்தில் சாப்பிட வேண்டிய தேவையே இருக்காது. ஆனாலும், வேலையில் இருந்த சில நிமிடங்கள் பிரேக் எடுக்கும் போது, நண்பர்களுக்கு கம்பெனி கொடுக்கவும் அவசியமே இல்லாமல் குளிர்பானங்கள், ஸ்நாக்ஸ் சாப்பிடுகிறோம்.
ஏதாவது குடித்தால் உற்சாகமாக இருக்கும் என்பதற்காகவே சூடான பானங்கள் குடிக்கிறோம். உண்மையில் அந்த நேரத்தில் நம் செரிமான மண்டலம் அதை ஜீரணிக்க தயாராக இருக்காது.
சிறிதளவு தானே என்று நினைக்கலாம். எந்த அளவில் சாப்பிடுகிறோம், குடிக்கிறோம் என்பது முக்கியமல்ல. தேவையில்லாத போது எவ்வளவு குறைவான அளவாக இருந்தாலும் செரிமானக் கோளாறை ஏற்படுத்தும்.
தொடர் பயணங்கள், சாப்பிட நேரம் இல்லாத அலுவலக வேலை காரணமாக இயல்பான பசி உணர்வை அலட்சியம் செய்து, அவசியமே இல்லாத நேரத்தில் சாப்பிடுவது தான் செரிமானக் கோளாறுகளுக்கான பிரதான காரணம்.
இது தவிர, சரியான உறக்கம் இல்லாதது, மன அழுத்தம், கோபம், எரிச்சல், பொறாமை போன்ற எதிர்மறையான எண்ணங்களும் செரிமானக் கோளாறை ஏற்படுத்தும்.
இரவு நேரங்களில் வேலை செய்ய வேண்டிய சூழலில் இருப்பவர்கள், காலை உணவுக்குப் பின் உறங்கி விட வேண்டும். 
அதை விடுத்து, மதிய உணவுக்குப் பின் துாங்கினால், உடல் எடை அதிகரிப்பதோடு, கல்லீரல் சீராகச் செயல்படாது. செரிமானக் கோளாறு ஏற்படும்.
செரிமானக் கோளாறால் தான் பெரும்பாலான நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்க்க, சரியான உணவை, சரியான அளவில், சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.
இது தான் செரிமானக் கோளாறை தவிர்க்கும் வழி.
மன அழுத்தம் உட்பட எதிர்மறை உணர்வுகள் இருக்கும் போது சாப்பிடுவது, பல நேரங்களில் செரிமானக் கோளாறை ஏற்படுத்தும்.
healerhari@gmail.com

