PUBLISHED ON : ஜன 06, 2020

தோலின்
முக்கியத்துவம் என்ன?
மனித உடலில் மீக நீண்ட பகுதியை கொண்டது தோல்.
உடலுக்குள் ஏற்படும் மாற்றத்தை முதன்முதலில் வெளியே தெரியவைப்பதும்
தோல்தான். இதன் அமைப்பில் தோல், முடி, நகங்கள், அத்துடன் தசை, சுரப்பிகள்
இவை இணைந்ததுதான் தோல் பகுதி. இதன் பணி அசாத்தியமானது.
நம் உடலின்
வெளிப்புற சுற்றுச்சூழலில் இருந்து நமது உடலினை பாதுகாக்கும் கவசம் தோல்.
பொதுவாக தோலில் ஏற்படும் அரிப்பு, தேமல், உள்ளிட்ட ஒருசில சில
பாதிப்புகளுக்கு மட்டுமே டாக்டரை அணுகுகிறார்கள். அது தவறு.
'அலர்ஜி' எதனால்
ஏற்படுகிறது?
சிறுநீரக கோளாறு, கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு
ஏற்பட்டவர்களுக்கு 'செல்'கள் பாதிக்கப்படுவதால் தோல் பாதிப்பு ஏற்படும்.
தோலில் அரிப்பு, தடிமன், வறட்சி மாதிரியான அறிகுறிகள் இருந்தாலும், நாம்
உட்கொள்ளும் உணவு, தண்ணீர் மற்றும் காற்று, துாசி உள்ளிட்டவற்றாலும்
'அலர்ஜி' ஏற்படும்.
இதற்கான தீர்வு காணாமல், அலர்ஜி வந்தவர்கள் பாதிப்பு
ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து அரித்துவிடுவதால், 'இன்பெக் ஷன்'
ஆகிடும்.அரிப்பு ஏற்படும் போதே, டாக்டரின் ஆலோசனை பெறுவது அவசியம்.
ஏனெனில், காற்றின் மூலக்கூறுகள் கூட உடலில் ஒவ்வாமை காரணமாக தோலில்
பாதிப்பு ஏற்படுத்திவிடும். இதில் இன்னும் சிலர் பச்சிலை சாறுகளை பாதிப்பு
வந்த இடத்தில் தேய்ப்பது முற்றிலும் தவறு.
குறிப்பாக துரித உணவுகளில்
செயற்கையான செறிவூட்டிகள் சேர்க்கப்படுவதாலும், தொடர்ந்து இயற்கையான உணவு
பழக்கங்களை கடைபிடிக்காததாலும் இந்த அலர்ஜி (எக்ஸிமா) பாதிப்பு
ஏற்படுகிறது. செயற்கை அமிலங்கள் செறிவூட்டப்பட்ட துரித உணவுகளை
தவிர்த்துவிட வேண்டும்.
படர்தாமரை பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?
படர்தாமரை
பாதிப்பு 'டீனியா' என்ற பூஞ்சை கிருமி குழுக்களால் ஏற்படும் நோய். இது
உடலின் வியர்வை ஏற்படும் பகுதிகளில் அதிகபடியாக மலரும். ஆண், பெண் தொடை
இடுக்குப் பகுதிகள், அக்குள் பகுதிகளில் அதிகம் வரும். அலர்ஜி நோய்
பரவக்கூடியது அல்ல. ஆனால், படர்தாமரை நோய் ஒரு நபரிடம் இருந்து மற்றொரு
நபருக்கு பரவக்கூடியது.
படர்தாமரையில் இருந்து தோலை பாதுகாக்க என்ன செய்ய
வேண்டும்?
வியர்வை தங்கக்கூடிய இடங்களில் நீரால் கழுவி, உலர் நிலையில்
வைப்பது அவசியம்.
தோல் வறட்சிக்கான காரணம் என்ன?
பாம்புகள் சட்டையை
கழட்டிப்போடுது என்று கூறுவார்களே அதுமாதிரி செயல்பாடு மனிதர்களிடம் 3
அல்லது 4 வாரங்களுக்கு ஒரு முறை நடக்கிறது. மனிதர்களின் தோல் பகுதி ஒன்றின்
மேல் ஒன்றாக 5 அடுக்குகளை கொண்டது. இதில் நம் கண்களுக்கு புலப்படாத ஆனால்
மேல் அடுக்கில் உள்ள 'ஸ்டேட்டம் கார்னியம்'என்ற தோல் அடுக்கு வளர்ந்து
கொண்டே வந்து அழிந்து கொண்டே இருக்கும்.
பாம்பு சட்டையை உரிக்கும்போது
கண்ணுக்கு தெரிகிறது. மனித தோல் பகுதியில் நடக்கும் இந்த செயல்பாடு நம்
கண்களுக்கு தெரிவதில்லை. சரிவிகித நீர்சத்து குறைந்து போகும் போது தோல்
வறட்சியை நாம் பார்க்க முடியும். இந்த 'ஸ்டேட்டம் கார்னியம்' தோல் அடுக்கு
ஸ்தம்பித்த நிலைதான் 'சொரியாசிஸ்' நோய்.தோல் வறட்சி என்பது நீர்சத்துக்கள்
குறைபாடே. அதனால் சரிவிகித உணவு, குடிநீர் குடிப்பது அவசியம்.
தோல்
பராமரிப்பிற்கு என்ன செய்ய வேண்டும்?
தோலின் தன்மைக்கு ஏற்ற வகையில் குளியல்
சோப்புகளை பயன்படுத்த வேண்டும். தோல் மூலக்கூறுகளில் அமில தன்மையின் அளவு
(பி எச் லெவல்) மனித உடலுக்கு 5.5 என்ற அளவில் இருக்கிறது. ஆனால், நாம்
இப்போது பயன்படுத்தும் குளியல் சோப்புகளில் அமிலதன்மை அளவு 7.5 என்பதிலும்,
அதற்கு அதிக அளவுகளிலும் கிடைக்கிறது. இந்த சோப்பு பயன்பாட்டினால் தோல்
வறட்சி ஏற்பட்டு சொரப்சொரப்பாக மாறிவிடும்.
தோலில் நீர்ச்சத்துக்கள்
அவசியம் இருக்க வேண்டும். இளநீர், சுத்தமான பழங்கள், கேரட், கீரை வகைகளை
அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி சேர்த்தால் தோல்
பளபளக்கும். பனிக்காலங்களில், அமிலத்தன்மை 5.5 சதவீதத்திற்கு குறைவாக உள்ள
குளியல் சோப்பை பயன்படுத்தினால் தோல் வறட்சி ஏற்படாது. நல்ல துாக்கம்
அவசியம்.
