PUBLISHED ON : டிச 16, 2018

அயர்லாந்தைச் சேர்ந்த கேத்தி டெய்வர், ஐந்து முறை தங்கம் வென்றிருந்தார். இந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதே, என் குறிக்கோளாக இருந்தது. இது, எதிர்மறையான எண்ணம் கிடையாது. சவால்!
இன்னொரு மேரி கோம் வரவே முடியாது. அப்படியே வந்தாலும், அதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். நான், முற்றிலும் தனித்தன்மை வாய்ந்தவள். மற்ற பெண்களிடம் இருந்து மாறுபட்டவள். இதனால் தான், வசதி வாய்ப்புகள் துளியும் கிடைக்காத, வடகிழக்கு மாநிலத்தின், பழங்குடி இனத்தில், வறுமையோடு பிறந்தாலும், 36 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான பின்னும், என்னால் சாதிக்க முடிந்திருக்கிறது.
போட்டிகளில், வெற்றி அல்லது தோல்வி தான் இருக்க முடியும். சில நேரங்களில், தோல்விகளையும் சந்தித்து உள்ளேன். ஆனால், தோல்வியும் விளையாட்டின் ஓர் அங்கம். அதனால், எனக்கு எந்த அழுத்தமும் ஏற்பட்டதில்லை.
இந்த மனநிலை பெரும்பாலான பெண்களுக்கு இருப்பதில்லை. வலிமையான நாடுகளின், குத்துச் சண்டை வீரர்களுடன் மோதும் போது, நம் வீரர்கள் பயந்து விடுவதை, நான் துவக்கத்தில் இருந்தே பார்க்கிறேன்.
எனக்கு, இது போன்ற பதற்றம், எப்போதும் ஏற்பட்டதில்லை. என்னிடம் இருக்கும் இந்த தனித்தன்மை, மற்ற குத்துச்சண்டை ஆட்டக்காரர்களிடம் இல்லை.
என் மீது, எனக்கு எப்போதும் சந்தேகம் இருந்ததே இல்லை. ஆறாவது முறையும், வெற்றி பெறுவேன்; பதக்கம் வாங்குவேன் என்று எப்போதும் நம்பிக்கையுடன் கனவு கண்டு கொண்டிருந்தேன்; கவனம் சிதறாமல் கடுமையாக பயிற்சி செய்தேன்.
தொழில்முறை குத்துச் சண்டை வீரராக, தங்கள் நாட்டிற்கு வந்துவிடும்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக, எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. அதில் விருப்பம் இல்லை.
தொழில்முறை குத்துச் சண்டையில், போதுமான அனுபவமும் எனக்கு கிடையாது. தொழில்முறை வீரராக இருப்பவர்கள், பணத்திற்காக வேலை செய்பவர்கள். தனிப்பட்ட செல்வாக்கை மட்டும் விரும்புபவர்கள், அதைத் தேர்வு செய்வர்.
எனக்கு இதற்கு மேல் பணம் வேண்டாம். தொடர்ந்து, என் நாட்டிற்காக விளையாட வேண்டும்; பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பது மட்டுமே என் விருப்பம்.
இருபது ஆண்டுகளாக, குத்துச் சண்டை விளையாடுகிறேன். விளையாட துவங்கி, 17 ஆண்டுகள் கழித்தே, என் முதல் உலக சாம்பியன் பட்டத்தை வென்றேன். அதன்பின், குத்துச் சண்டையில் நிறைய மாற்றங்கள் வந்து விட்டன.
கடந்த, 2006ல் டில்லியில், உலக குத்துச் சண்டை போட்டிகள் நடந்தன. போட்டிகளை காண, ஆட்டக்காரர்களின் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மட்டும் வருவர்.
இப்போது, போட்டி நடக்கும் இடம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம். அதிலும், எனக்காகவே வரும் ரசிகர்கள். அவர்கள், தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்துவது, எனக்கு மிகப் பெரிய சக்தியைக் கொடுக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை, 48 கிலோ எடைப் பிரிவில் விளையாடினேன். ஒலிம்பிக் மற்றும் ஆசிய போட்டிகளில் இருந்து, இந்தப் பிரிவை நீக்கி விட்டனர். அதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, 51 கிலோ பிரிவில் பங்கு பெறுகிறேன். புதிய பிரிவில் போட்டியிட்டது, முதலில் சிரமமாக இருந்ததால், கடந்த, 2016 ரியோ ஒலிம்பிக்கிற்கு, தகுதி பெற முடியவில்லை.
ஆறாவது முறையாக, 51 கிலோ எடைப் பிரிவில், உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது, புதிய புத்துணர்வைத் தருகிறது. அதனால், 2020ல் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், தங்கம் வெல்வது நிச்சயம் தானே... என்று கேட்கக் கூடாது.
எந்த உத்தரவாதத்தையும், நான் எப்போதும் யாருக்கும் தர முடியாது. இப்போதைய கவனம், ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதில் இருக்கிறது. அதன்பின், பதக்கம் வெல்வது குறித்து, தொடர்ந்து யோசிக்க துவங்குவேன்.
மேரி கோம்
உலக குத்துச் சண்டை சாம்பியன், இம்பால், மணிப்பூர்.

