PUBLISHED ON : செப் 02, 2015

உடலில் நீரின் அளவு குறைந்தால், கொழுப்பின் அளவு அதிகரிக்கும் என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொழுப்பின் அளவு அதிகரிக்காமல் இருக்க, தண்ணீரை தேவையான அளவு பருக வேண்டும்.
தேவையான தண்ணீர் குடிக்காமல் இருந்தால், மூச்சுக் குழாய் வறட்சியடைந்து இறுக்கமடையும்; சுருங்கி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். சில நேரங்களில் உடல்
வறட்சியால் ஒவ்வாமை கூட வரலாம். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், செரிமான பிரச்னைகள் மற்றும் மலச்சிக்கல் ஏற்படக் கூடும்.
நம் உடலில் உள்ள ரத்தத்தில், 92 சதவீதம் தண்ணீர் உள்ளது. ஒருவேளை உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இல்லாவிட்டால், ரத்தம் அடர்த்தியாகி, அதனால் உயர் ரத்த அழுத்த பிரச்னையும் வரும். உயர் ரத்த அழுத்தம் அதிகமாவது, இதய நோய்க்கு வழிவகுக்கும்.
எனவே, இந்த பிரச்னைகளை எல்லாம் தவிர்க்க, தினசரி 3 லி., தண்ணீரை தவறாமல் குடித்து வர வேண்டும்.
அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், குடல் சுத்தமாகும். தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக் கூடும். இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலே உடலில் உள்ள கழிவுகள், முற்றிலும் வெளியேறி விடும்; நோய் வராது.
தண்ணீரானது உடலின் மூலை
முடுக்குகளில் தங்கியுள்ள நச்சுகளை, சிறுநீர் மூலமாக வெளியேற்றி விடும். பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும். தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், நீர்ச்சத்து அதிகரித்து, தலைவலி குறையும்.
ஏ.ராமலிங்கம்,
சித்த மருத்துவர்,
திருவாரூர்.
