மனசே மனசே குழப்பம் என்ன!: பெயரை மறப்பதெல்லாம் பிரச்னையா?
மனசே மனசே குழப்பம் என்ன!: பெயரை மறப்பதெல்லாம் பிரச்னையா?
PUBLISHED ON : செப் 30, 2018

தொழிலதிபர்: தனக்கு மன அழுத்தம் இருப்பதை டாக்டர் உறுதி செய்துள்ளார் என்ற தகவலை, தொழிலதிபர் ஒருவர், தன் நண்பர்களிடம் சொன்ன போது, '68 வயது வரை தொழிலை வெற்றிகரமாக நடத்துபவருக்கு, மன அழுத்தம் எப்படி சாத்தியம்' என, நம்ப மறுத்தனர்.
சிலர், 'அடிக்கடி பார்ட்டிக்கு போங்க; குழுவாகச் சேர்ந்து கப்பல் பயணம் செய்யுங்க' என்று கூறினர். என்னிடம் ஆலோசனைக்கு வந்த போது, 'இதையெல்லாம் நான் செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்?' என்று கேட்டார்.
எல்லா விஷயத்தையும், தயக்கம் இல்லாமல் பகிர்ந்து கொள்ளும் இயல்பு கொண்டவர் என்பதால், தனக்குள் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை புரிந்து கொண்டார்.
மனைவியின் உடல்நிலை பாதிப்பும், தொழில் நஷ்டமும் தான், மன அழுத்தத்திற்கு காரணம் என்பது தெரிந்து, உடனடியாக என்னிடம் வந்தார். 'பசியே இல்லை; எல்லா விஷயத்திலும் எதிர்மறை எண்ணங்களே வருகிறது' என, அறிகுறிகளையும் கவனித்துச் சொன்னார்.
'என் மனைவி புரிந்து கொண்டார்; ஆனால், என் குழந்தைகளால், மனநல சிகிச்சை எடுப்பதை ஒத்துக் கொள்ள முடியவில்லை' என்ற கவலை அவருக்கு இருந்தாலும், முறையான மருந்துகள், ஆலோசனையுடன் உடற்பயிற்சி, இசைப் பயிற்சி செய்து, மன அழுத்தத்தில் இருந்து வெளியில் வருகிறார்.
விவசாயி: மனைவி, நான்கு குழந்தைகளோடு, குடும்ப தொழிலான விவசாயத்தை செய்து, மகிழ்ச்சியாகவே இருந்தார் ராமன். 64 வயதில் திடீரென மாற்றம். எதைப் பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் சந்தேகம்; ஒரு கட்டத்தில், துாக்கமே இல்லை.
உடல், மனரீதியாக மனைவி மீது வன்முறை. சுற்றியிருப்பவர்களுடன் சதா சண்டை. சுய சுகாதாரத்தையே மறந்து, மண்ணை சாப்பிட துவங்க, விளைவு, உடல் முழுவதும் தடிப்புகள்.
தோல் வியாதி என, அருகில் உள்ள டாக்டரிடம் காட்டியதில், ராமனுக்கு மன நோய் இருப்பதை கண்டறிந்து, மனநல டாக்டரிடம் அனுப்பினார்.
தொடர்ந்து, ஐந்து ஆண்டுகள் மாத்திரை சாப்பிட்டதில், ஒரு கட்டத்தில், தனக்கு இனி மருந்து தேவையில்லை என்று பாதியிலேயே நிறுத்தினார்; நோயின் தீவிரம் அதிகரித்தது. கிராமப்புற மனநல மையத்தின் டாக்டர்கள் உதவியுடன், தற்போது சிகிச்சையும், ஆலோசனையும் பெற்று வருகிறார்.
நம்முடைய குடும்ப அமைப்புகள் சிதைந்து, முதியவர்கள் தனிமைப்பட்ட நிலையில், மன அழுத்தத்தால் பாதித்துள்ள முதியவர்களின் எண்ணிக்கை, மற்ற நாடுகளை விட, இந்தியாவில் அதிகம் என, உலக சுகாதார மையம் கூறுகிறது.
துாக்கமின்மை, பசியின்மை, மறதி, எடை குறைவது, மயக்கம், எதிலும் நம்பிக்கை இல்லாமல் இருப்பது, விரக்தி போன்றவை, 60 வயதிற்கு மேல் ஏற்படும் மன அழுத்தத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.
'வயதானால் இப்படித் தான்' என்று அலட்சியமாக இருந்து விடுகிறோம். 'ஒரு பொருளை வைத்த இடம் மறப்பது, சில பெயர்களை மறப்பது, இடம் நினைவில் இல்லை என்பதெல்லாம் ஒரு பிரச்னையா... வயதானால் சகஜம் தானே...' என்று நினைக்கிறோம்.
ஆனால், மன அழுத்தத்தின் ஆரம்ப அறிகுறிகளாக இவை இருக்கலாம். முறையான உளவியல் ஆலோசனையும், குடும்பத்தின் அன்பும், பிரச்னையை ஆரம்பத்திலேயே சரி செய்ய உதவும்.
அன்னா சாண்டி,
உளவியல் நிபுணர், பெங்களூரூ.
www.thelivelovelaughfoundation.org/therapist.html
