PUBLISHED ON : நவ 14, 2010

இரண்டு வாரங்களுக்கு முன்பு எனக்கு, 'ஹெர்னியா' அறுவை சிகிச்சை நடந்தது. நான் நடைமுறை வாழ்க்கைக்கு எப்போது திரும்ப முடியும்? முக்கியமாக எப்போது உடலுறவு கொள்ளலாம்?
வ.கங்காதரன், திருச்சி:
இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் நிறைய பேருக்கு இந்த சந்தேகம் இருக்கிறது. ஆனால் வெட்கப்பட்டுக் கொண்டு கேட்காமல் விட்டு விடுகின்றனர். மாறாக ஏற்கனவே இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களிடம் கேட்கின்றனர். இது தவறு. கருப்பை நீக்க அறுவை சிகிச்சை, சிசேரியன் மற்றும் ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்து கொண்டால் சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப ஆறு வாரங்களுக்கு மேலாகும். எப்பொழுதும் உங்கள் உடம்பு சொல்வதை கேளுங்கள். ஏதாவது வேலை செய்யும் பொழுது அறுவை செய்த இடத்தில் வலி ஏற்பட்டால் உடனே அந்த வேலை செய்வதை விட்டுவிட வேண்டும். பிறகு அதற்கடுத்த வாரத்தில் செய்ய முற்படலாம். இது உடலுறவுக்கும் பொருந்தும்.
எனக்கு 19 வயதாகிறது. நான் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போதெல்லாம் எனக்கு மயக்கம் ஏற்படுகிறது. விழுந்து விடுவது போல தோன்றுகிறது. சில நேரம் நான் இருக்கும் இடமும் சுற்றுகிறது. இதை மருத்துவரிடம் சொன்னால், என்னுடைய ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு நார்மலாக இருக்கிறது என்று கூறுகிறார். என்ன செய்வது?
கே.கவுரி சங்கர், கோவை:
உங்களுக்கு போஸ்டரல் குறைவழுத்தம் அல்லது ஆர்த்தோஸ்டாட்டிக் குறைவழுத்தம் ஏற்பட்டிருக்கலாம். நம்முடைய இருக்கும் நிலையில் ஏற்படும் திடீர் மாற்றத்தினால் நம் உடலில் ஏற்படும் குறைந்த ரத்த அழுத்தமே இதற்கு காரணம். நின்ற மற்றும் படுத்த நிலைகளில் ரத்த அழுத்தம் கணக்கெடுக்கப்பட்டு, அதன் மூலம் இந்த நோயை கண்டுபிடிக்கலாம். இது சில நிமிடங்களே தோன்றும்.
நம்முடைய நடவடிக்கைகளுக்கு தகுந்தாற் போல நம்முடைய உடம்பு சில நொடிகளிலேயே மாற்றிக் கொள்ளும். மாறாக தாமதம் ஏற்பட்டால், நம்முடைய உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையே அதற்கு காரணம் (டிஹைட்ரேஷன்). உங்களுடைய பிரச்னைக்கு உயர் அழுத்தமும், சர்க்கரையும் காரணம் இல்லை என்று தெரிகிறது.
* படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் போது சிறிது உட்கார்ந்து பிறகு எழுந்திருக்க வேண்டும்.
* சில யோகா பயிற்சிகளை தொடர்ந்து செய்வது பலனளிக்கும்.
* ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ஜாக்கிங், நீச்சல், ஓட்டம் அல்லது நடைபயிற்சியையும் மேற்கொள்ளலாம்.
எனக்கு வாய் துர்நாற்றம் இருப்பதாக தோன்றுகிறது. இதனால் நான் மற்றவர்களிடம் நெருங்கி பேச, பழக முடிவதில்லை. இதை போக்க என்ன செய்ய வேண்டும்?
அ.சரவணன், விழுப்புரம்:
உங்களுக்கு உண்மையிலேயே வாய் துர்நாற்றம் இருக்கிறதா என்பதை உங்கள் பெற்றோர் அல்லது மனைவியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
அவர்கள் தான் உண்மையை கூற முடியும். பற்சிதைவு அல்லது ஈறுகளில் பிரச்னை ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும். சில நேரம் சளி, சைனஸ், உணவு செரிக்காமை அல்லது மோசமான உணவுப் பழக்கத்தினாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். உண்மை காரணத்தை கண்டுபிடித்து தீர்வு காணுங்கள்.
